தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். இது இந்திய அரசாங்கத்தின் பழமையான மற்றும் மிக முக்கியமான அமைச்சகங்களில் ஒன்றாகும். இதன் மூத்த அமைச்சர் பூபேந்தர் யாதவ் மற்றும் இணை அமைச்சர் இராமேஷ்வர் தெலி ஆவார்.
இந்த அமைச்சகம் பொதுவாக தொழிலாளர் சட்டங்கள் மற்றும் ஒரு தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை அமலாக்குவதற்கு பொறுப்பாகும். [2] அதிக உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனுக்கான ஆரோக்கியமான பணிச்சூழலை உருவாக்குவதற்கும், தொழில் திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் இந்த அமைச்சகம் நோக்கமாக கொண்டுள்ளது. இருப்பினும் திறன் மேம்பாட்டுப் பொறுப்புகள், தொழில்துறை பயிற்சி மற்றும் பயிற்சிப் பொறுப்புகளை 9 நவம்பர் 2014 முதல் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டன.[3] வேலை வழங்குபவர்களுக்கும், வேலை தேடுபவர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க உதவும் வகையில் 20 சூலை 2015 அன்று அமைச்சகம் தேசிய தொழில் சேவை இணையதளத்தை அறிமுகப்படுத்தியது.
செயல்பாடுகள்
தொழிலாளர் கொள்கை மற்றும் சட்டம் வகுத்தல்
தொழிலாளர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் நலன்களை பேணுதல்
தொழிலாளர் சமூக பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுத்தல்
பெண்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் போன்ற சிறப்பு இலக்கு குழுக்களுடன் தொடர்புடைய கொள்கைகளை வகுத்தல்
தொழில்துறை உறவுகள் மற்றும் மத்திய அரசின் தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துதல்
மத்திய அரசின் தொழில்துறை தீர்ப்பாயங்கள் மற்றும் தொழிலாளர் நீதிமன்றங்கள் மற்றும் தேசிய தொழில்துறை தீர்ப்பாயங்கள் மூலம் தொழில் தகராறுகளை தீர்ப்பது
தொழிலாளர் கல்வி
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்கள் பெறுதல்
வெளிநாட்டில் வேலைக்காக தொழிலாளர் குடியேற்றம்
வேலைவாய்ப்பு சேவைகள் மற்றும் தொழில் பயிற்சி
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு சேவைகளின் நிர்வாகம்
தொழிலாளர் மற்றும் வேலை விஷயங்களில் சர்வதேச ஒத்துழைப்பு