நிக்கித்தா குருசேவ்
நிக்கித்தா செர்கேவிச் குருசேவ் (Nikita Sergeyevich Khrushchev; உருசிய மொழி: ⓘ; நிக்கித்தா செர்கேயெவிச் ஹ்ருஷோவ்; 15 ஏப்ரல் [யூ.நா. 3 ஏப்ரல்] 1894 – 11 செப்டம்பர் 1971)[1] சோவியத் ஒன்றியத்தின் தலைவராக பனிப்போர்க் காலத்தின் முதல் பகுதியில் இருந்தவர். 1953 முதல் 1964 வரை சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராகவும், 1958 முதல் 1964 வரை சோவியத் பிரதமராகவும் பதவி வகித்தார். சோவியத் ஒன்றியத்த இசுடாலினியக் கொள்கைகளில் இருந்து விடுவித்தமை, ஆரம்பகால சோவியத் விண்வெளி திட்டத்தின் முன்னெடுத்தமை, மற்றும் உள்நாட்டுக் கொள்கைகளில் பல தாராளமய சீர்திருத்தங்கள் ஆகியவற்றுக்காக இவர் மிகவும் அறியப்பட்டார். சோவியத் பொதுவுடமைக் கட்சி இவரை 1964 இல் அதிகாரத்திலிருந்து நீக்கி, அவருக்கு பதிலாக லியோனிது பிரெசுனேவை கட்சியின் முதல் செயலாளராகவும், அலெக்ஸி கோசிகினை பிரதமராகவும் நியமித்தது. இவரது வாழ்க்கையின் கடைசி ஏழாண்டுகளும் சோவியத் உளவு நிறுவனமான கேஜிபியின் நேரடிக் கண்காணிப்பில் வாழ்ந்து வந்தார். குருசேவ் 1894 இல் உருசியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான இன்றைய எல்லைக்கு அருகில் உள்ள கலினோவ்கா என்ற ஊரில் ஏழை வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்தார்.[2][3] அவர் தனது இளமைக்காலத்தில் உலோகத் தொழிலாளியாகப் பணியாற்றினார்.[4] உருசிய உள்நாட்டுப் போரின் போது இவர் ஒரு அரசியல் ஆலோசகராகப் பணியாற்றினார்.[5] யோசப் இசுட்டாலினின் சகாவான லாசர் ககனோவிச் என்பவரின் உதவியோடு சோவியத் உயர் வரிசைக்கு முன்னேறினார்.[6] யோசப் ஸ்டாலினின் பெரும் துப்புரவாக்கத்திற்கு ஆதரவளித்தார்,[7] ஆயிரக்கணக்கான கைதுகளுக்கு ஒப்புதல் அளித்தார்.[8] 1938-ஆம் ஆண்டில், ஸ்டாலின் அவரை உக்ரைனிய சோவியத் குடியரசை நிர்வகிக்க அனுப்பினார்.[9] சோவியத் ஒன்றியத்தில் பெரும் தேசபக்தி போர் என அழைக்கப்பட்ட கிழக்குப் போர்முனைக் காலத்தில், குருசேவ் மீண்டும் அரசியல் ஆலோசகராக, இசுடாலினுக்கும் அவரது தளபதிகளுக்கும் இடையில் ஒரு இடைத்தரகராகப் பணியாற்றினார்.[10] சுடாலின்கிராட் சண்டை இரத்தக்களரியில் குருசேவ் கலந்து கொண்டார், இது குறித்து அவர் தனது வாழ்நாள் முழுவதும் பெருமிதம் கொண்டவராக இருந்தார். போருக்குப் பிறகு, இசுடாலினின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவராக மாஸ்கோவிற்குத் திரும்ப அழைக்கப்பட்டார்.[11] 1953 மார்ச் 5 இல், இசுடாலினின் இறப்பு நாட்டில் ஓர் அதிகாரப் போட்டியைத் தூண்டியது, இப்போட்டியில், குருசேவ் கட்சியின் முதல் செயலாளராக தனது அதிகாரத்தைப் பலப்படுத்தி வெற்றி பெற்றார்.[12] 1956 பிப்ரவரி 25 அன்று, 20 வது கட்சி மாநாட்டில், அவர் ஓர் "இரகசிய உரையை" நிகழ்த்தினார், இவ்வுரையில் அவர் இசுடாலினின் அரசியல் எதேச்சாதிகாரத்தைக் கண்டித்தார், சோவியத் ஒன்றியத்தில் குறைந்த அடக்குமுறை சகாப்தத்தை இவ்வுரை ஏற்படுத்தியது.[13] சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அவரது உள்நாட்டுக் கொள்கைகள்,[14] குறிப்பாக விவசாயத்தில், பெரும்பாலும் பயனற்றவையாக இருந்தன. இறுதியில் தேசியப் பாதுகாப்புக்காக ஏவுகணைகளை நம்புவார் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், குருசேவ் தேசியப் பாதுகாப்புப் படைகளில் பல குறைப்புகளை அறிவித்தார். இருந்தபோதிலும், குருசேவின் ஆட்சி பனிப்போரின் மிகவும் பதட்டமான ஆண்டுகளைக் கண்டது, இது கியூபா ஏவுகணை நெருக்கடியின் போது உச்சக்கட்டத்தை அடைந்தது.[15] குருசேவின் புகழ் அவரது கொள்கைகளில் இருந்த குறைபாடுகளால் மங்கியது. இது அவரது சாத்தியமான எதிரிகளை தைரியப்படுத்தியது, அவர்கள் லியோனீது பிரெசுனேவ் தலைமையில் வலிமையுடன் எழுந்து 1964 அக்டோபரில் பிரதமர் பதவியில் இருந்தும், கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் அவரை நீக்கினர்.[16] இருப்பினும், முந்தைய சோவியத் அதிகாரப் போட்டிகளின் கொடிமைகளை அவர் அனுபவிக்கவில்லை, மாஸ்கோவில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் கிராமம் ஒன்றில் ஒரு ஓய்வுக்காலக் குடிமனை ஒன்றுடன் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. அவரது நீண்ட நினைவுக் குறிப்புகள் மேற்குலகத்திற்குக் கடத்தப்பட்டு 1970 இல் வெளியிடப்பட்டது. குருசேவ் 1971 இல் மாரடைப்பால் இறந்தார்.[17] மேற்கோள்கள்
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia