நீலத் திமிங்கிலம்
நீலத் திமிங்கலம் (Blue whale) என்பது கடற்பாலூட்டி வரிசையைச் சேர்ந்த உயிரினம் ஆகும். அளவு மற்றும் எடையின் படி இதுவே உலகிலுள்ள மிகப்பெரிய விலங்கு ஆகும். இது சராசரியாக 80 முதல் 100 அடி வரை நீளம் கொண்டது. இது மிகவும் பெரிய உயிரினம் என்பதால் இதன் நிறையை சரியாக கணிப்பிட இயலாது. எனினும் சாதாரணமாக 100 அடி நீளமான நீலத்திமிங்கிலத்தின் எடை சராசரியாக 150 டன் அளவில் இருக்கும் என கணித்திருக்கிறார்கள். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நீலத்திமிங்கலத்தின் அதிகபட்ச எடை 173 டன். இது மெலிந்த உடலமைப்பைக் கொண்டிருப்பதுடன் இதன் தலைப்பகுதி மட்டமானதாக காணப்படும். நீலத் திமிங்கிலம் ஒரு நாளைக்கு ஏறக்குறைய 3,600 கிலோ உணவை உட்கொள்கிறது. 1700களில் கடலில் சுமார் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் நீலத்திமிங்கிலங்கள் இருந்தன ஆனால் தற்போது வெறும் ஐந்தாயிரம் முதல் இருபத்தைந்தாயிரம் நீலத்திமிங்கிலங்களே உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.[3] உலகின் எல்லாக் கடல்களிலும் இவை வசிக்கும். தனியாகவோ, சின்னக் கூட்டமாகவோ வலம் வரும். சராசரியாக 80 முதல் 90 வருடங்கள் வாழும். 25 முதல் 32 மீட்டர் நீளம் இருக்கும். இவற்றின் தோல், நீலம் கலந்த சாம்பல் நிறமாக இருக்கும். ஒரு தடவை ஒரு குட்டி மட்டுமே ஈனும். பிறக்கும் போதே, அந்தக் குட்டி இரண்டு டன் எடை இருக்கும். வருடா வருடம் 91 கிலோ எடை கூடிக்கொண்டே இருக்கும். இதன் குட்டி, பிறந்ததில் இருந்து முதல் ஏழு மாதங்கள் வரை நாள் ஒன்றுக்கு சுமார் 400 லிட்டர் பாலைக் குடிக்கும். 200 டன் எடை வளரும். நாள் ஒன்றுக்கு 1.5 மில்லியன் கிலோ காலரி சக்தி இதற்குத் தேவைப்படும். ஒரே வயது உடைய ஆண் திமிங்கிலத்தைவிட பெண் திமிங்கிலம் அதிக நீளம்கொண்டது. இதன் நுரையீரல், 5,000 லிட்டர் தண்ணீர் கொள்ளும் அளவுக்குப் பெரியது. இதயம், 600 கிலோ எடை இருக்கும். அதாவது, ஒரு சிறிய கார் அளவுக்கு இருக்கும். இதன் ரத்தக் குழாய்கள் ஒரு மனிதன் நீந்திச் செல்லும் அளவு இருக்கும். இதன் நாக்கு மட்டும் மூன்று டன் எடை இருக்கும். நீரை உறிஞ்சி, ஊதும்போது, 30 அடி தூரம் பீய்ச்சி அடிக்கும். 'க்ரில்’ என்ற கடல்வாழ் உயிரினங்களை இவை விரும்பிச் சாப்பிடும். முதிர்ச்சி அடைந்த திமிங்கிலங்கள், நாள் ஒன்றுக்கு நான்கு முதல் எட்டு டன் க்ரில்களை உட்கொள்ளும். இவற்றுக்கு, இரைகளைப் பிடிக்க ஆச்சரியமான அமைப்புகள் இருக்கின்றன. கடலில் உள்ள சின்னச் சின்ன இரைகளைக்கூட இவற்றின் வாயில் இருக்கும் பலீன் என்னும் சல்லடை போன்ற அமைப்பினால் வடிகட்டிப் பிடித்துவிடும். இவற்றின் கொழுப்புக்காகவும் எண்ணெய்க்காகவும் மனிதர்களால் வேட்டையாடப்பட்டு வருகின்றன. ஏறத்தாழ இந்த இனமே அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. இவற்றின் பாதுகாப்புக்காக 1966-ல் 'சர்வதேசத் திமிங்கில அமைப்பு’ உருவாக்கப்பட்டது.[4] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia