பெண்குலத்தின் பொன் விளக்கு
பெண்குலத்தின் பொன்விளக்கு 1959 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். பி. விட்டலாச்சாரியா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். கதைச் சுருக்கம்"அன்பும், அறமும் போல்-அழகும், குணமும் போல் கணவனும் மனைவியும் ஒருமித்து வாழ்வது தான் உண்மையான தாம்பத்ய உறவு" - என்பதின் இலக்கணமாக விளங்கினர் பார்வதியும்-சுந்தரமும். சுந்தரம் வங்கியாளர் சபாரத்ன முதலியாரின் அண்ணன் மகன். அவன் தன் சிற்றப்பாவின் குடும்பத்துடனேயே வாழ்ந்து வந்தான். சபாரத்தின முதலியார் தன் மனைவி பத்மாவதியின் ஆட்சிக்கு உட்பட்டவர். இவர்களின் ஒரே மகள் கலாவல்லி. அவள் ஆணுக்குப் பெண் அடிமையில்லை என்ற கொள்கையை உடையவள், எவருக்கும் அடங்காத துடுக்குக்காரி. இக்குடும்பத்தில் பணிபுரியும் கணக்குப் பிள்ளை சின்னைய்யா ஒரு நல்ல மனிதர். கலாவின் நெருங்கிய தோழி லலிதா, தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு "கண்டதே காட்சி - கொண்டதே கோலம்" என்று வாழும் உல்லாசப் பெண். கலாவும் லலிதாவும் சேர்ந்து மாதர் முன்னேற்றச் சங்கம் ஒன்றை நிறுவி, அதன் முதல் ஆண்டு விழாவை அவ்வூர் பிரமுகர் வரதராஜ முதலியாரின் தலைமையில் நடத்துகின்றனர். விழாவில் "ஆடவர் உயர்வா? பெண்டிர் உயர்வா?" என்ற விவாதம் காரசாரமாக நடைபெறுகிறது. கலா "பெண்களே உயர்ந்தவர்கள்- ஆடவரை அடக்கி ஆளப் பிறந்தவர்கள்" என்று வாதிக்கிறாள். லலிதா அவளை ஆதரித்தும், பார்வதி எதிர்த்தும் பேசுகின்றனர். இதன் விளைவாக பார்வதியும் சுந்தரமும் சிற்றப்பா வீட்டிலிருந்து விரட்டப்படுகின்றனர். சபாரத்னம் கண்கலங்கி நிற்பதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை. சுந்தரம் வரதராஜ முதலியாரிடம் வேலைக்குச் சேர்கிறான். அங்கும் துன்பம் தொடர்கிறது. வரதராஜன் லலிதாவின் மாய வலையில் சிக்கிக் கொள்கிறான். சுந்தரம் அவனிடம் லலிதா "நச்சுப்பாம்பு - பால் வார்க்காதீர் - பழகாதீர்" என்று எச்சரிப்பதால், வேலையிலிருந்து நீக்கப்படுகிறான். கலாவுக்குச் சங்கீதம் கற்பிக்க ஒரு வாத்தியார் தேவை என்று பத்மாவதி கட்டளையிடுகிறாள். கலாவின் அகந்தையை அடக்க இதுவே சரியான தருணம் என நினைத்த சின்னைய்யா, கோதண்டராமன் என்ற வீதிப்பாடகனை வாத்தியாராக அறிமுகப்படுத்துகிறார். கலாவும் கோதண்டமும் உள்ளூர காதல் கொள்கின்றனர். ஆனால் கலாவின் அகம்பாவம் நீடித்திருக்கிறது. கோதண்டம் தான் ஆஞ்சநேயரின் பக்தன், சுத்த பிரம்மச்சாரி, பெண்களை வெறுப்பவன் என கூறி கலாவை கோபப்படுத்துகிறான். வாக்குவாதத்தில் "உன்னையே நான் மணந்து புத்தி புகட்டுகிறேன்" என்று கலா சபதமிடுகிறாள். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் அவர்களின் வாழ்க்கை வெளியே தம்பதிகளாகவும், வீட்டினுள் கீரியும்-பாம்புமாகவும் காணப்படுகிறது. இதற்கிடையில், வரதராஜன் ஓட்டிய கார் சுந்தரத்தை மோதி காலை இழக்கச் செய்கிறது. வறுமையால் துன்புறும் பார்வதி, மருத்துவமனையில் இருக்கும் கணவனை கவனித்துக் கொள்ள போராடுகிறாள். வரதராஜன் உதவி என்ற பெயரில் பார்வதியின் கற்பைக் களவாட முயல்கிறான். ஆனால் பார்வதியின் பெருந்தன்மை அவனை மாற்றுகிறது. அவன் பார்வதியைத் தங்கையாக ஏற்று புதிய மனிதனாக மாறுகிறான். சின்னையாவின் திட்டப்படி, சபாரத்னம் திடீரென ஊரைவிட்டு மறையும் நாடகத்தை அரங்கேற்றுகிறார். பத்மாவதியும் கலாவும் இதனை நம்பி வருந்துகின்றனர். பின்னர் சபாரத்னமே மார்வாடியாக வேடமிட்டு வந்து, வீட்டை ஜப்தி செய்து அனைவரையும் வெளியேறச் செய்கிறார். கோதண்டனின் பழைய வீட்டில் குடியேறிய பின், கோதண்டன் கலாவின் அகந்தையை அடக்க நடவடிக்கை எடுக்கிறான். வரதராஜனின் தூய உதவியை தவறாக புரிந்துகொண்ட சுந்தரம், பார்வதியை விபச்சாரி என்று குற்றம் சாட்டுகிறான். "இதுவா கணவனே கண்கண்ட தெய்வம் எனறு போற்றியதற்கு கைமாறு" என்று பார்வதி வேதனைப்படுகிறாள். கோதண்டத்திடம் உதை வாங்கி வீட்டை விட்டு வெளியேறிய கலா, காட்டன் கண்ணுசாமி என்பவனின் கைகளில் சிக்குகிறாள். அதே காட்டன் கண்ணுசாமியால் ஏமாற்றப்பட்ட லலிதா பைத்தியமாகி மக்களின் நிந்தனைக்கு ஆளாகிறாள். இவ்வாறு மூன்று வேறு பாதைகளில் செல்லும் இப்பெண்களில் "பெண் குலத்தின் பொன் விளக்கு" யார் என்பதே படத்தின் மீதிக் கதையாகும். நடிகர்கள்படத் தலைப்பில் உள்ளது போல் கொடுக்கப்பட்டுள்ளது.
இசைமாஸ்டர் வேணு படத்திற்கு இசையமைத்திருந்தார்.[1]
உசாத்துணை
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia