பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் தொடருந்து நிலையம்
பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Perambur Loco Works railway station) என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் அயனாவரம் புறநகர்ப் பகுதியில்,[1][2] 13°06′30″N 80°13′33″E / 13.108200°N 80.225700°E (அதாவது, 13°06'29.5"N, 80°13'32.5"E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கடல் மட்டத்திலிருந்து சுமார் 33 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இது சென்னை புறநகர் இருப்புவழி இணைப்பின் சென்னை - அரக்கோணம் பிரிவில்[3] உள்ள ஓர் இரயில் நிலையம். இந்த நிலையம், சென்னை மத்திய தொடருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இது ஒருங்கிணைந்த இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை (உலகின் மிகப்பெரிய இரயில் வண்டி மற்றும் இயந்திரங்கள் உற்பத்தியாளர்களில் ஒன்று - இணைப்புப் பெட்டிகள் மற்றும் இயந்திரங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள்) பயன்பாட்டிற்கு இலகுவாக இருக்கிறது. இந்தத் தொடருந்து நிலையத்தால் பெரம்பூர், அயனாவரம், அகரம், பெரவள்ளூர், செம்பியம், திரு. வி. க. நகர், பெரியார் நகர், ஜவஹர் நகர், வில்லிவாக்கம், கொளத்தூர் ஆகிய புறநகர்ப் பகுதிகளில் உள்ள மக்கள் பலனடைகின்றனர். 1979 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி சென்னை - திருவள்ளூர் பிரிவின் மின்மயமாக்கலுடன் இந்த இரயில் நிலையத்தின் முதல் பாதைகள் மின்மயமாக்கப்பட்டன.[4] இந்நிலையத்தில் பாதசாரிகள் கடந்து செல்லும் வகையில், வடக்குப் பகுதியில் சுரங்க நடைபாதை ஒன்று உள்ளது.[5] மேற்கோள்கள்
வெளி இணைப்பு |
Portal di Ensiklopedia Dunia