மணிரத்னம் இந்திய அளவில் அறியப்படும் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர். தன் பெரும்பாலான படைப்புகளை தமிழில் படைத்துள்ளார். தன் தனி பாணி, நேர்த்தியான தொழில்நுட்பம் மூலம் இந்தியத் திரைப்பட இலக்கணத்தை மறு உருவாக்கி அடுத்த படிக்கு எடுத்து சென்றவர். தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், என பிற மொழிகளிலும் நல்ல திரைப்படங்களை படைத்துள்ளார். இது நாள் வரை 24 திரைப்படங்களுக்கு மேல்[1] இயக்கியுள்ளார்.
ஆறு தேசிய விருதுகள், ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், மற்றும் மூன்று பாலிவுட் பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்றிருக்கிறார்.
திரைத்துறையில் முறையான பயிற்சி எதுவும் இல்லாமலே தன் முதல் படமான பல்லவி அனுபல்லவி (1983) இயக்கினார். அது கர்நாடக அரசின் சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதைப்பெற்றது. இவரின் முதல் சில படங்கள் வருவாய் ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும், தமிழில் வெளியிட்ட இதய கோவில் (1985) நல்ல வருவாய் ஈட்டியது. அதற்கு அடுத்த ஆண்டு இவர் இயக்கிய மௌன ராகம் (1986) பெரும் வெற்றி பெற்றது. மறைந்த தன் காதலனை மறக்கமுடியாத ஒரு பெண் தன் பெற்றோர்களின் வற்புறுத்தலால் இன்னொருவனை மணந்து, அவனோடும் வாழ முடியாமல் தவிப்பதும், இவளின் தவிர்ப்பால் தவிக்கும் நல்ல கணவனும், என அருமையான, மனங்கள் பேசும், காதல் திரைப்படமாக மௌன ராகம் இருந்தது. இந்தப் படத்தின் வெற்றி இவரை இந்திய நாடு முழுவதுமாக கவனிக்க செய்தது. தொடர்ந்து கமலஹாசனை வைத்து இவர் இயக்கிய நாயகன் (1987), பெரும் வெற்றி பெற்றது. மும்பையில் வாழ்ந்த வரதராஜ முதலியார் என்ற நிழலுலக தாதாவின் வாழ்க்கையைத் தழுவி இப்படத்தை எழுதியிருந்தார்.இது 60 ஆவது அகாடமி விருதுகளுக்காக இந்தியாவின் சார்பாக அனுப்பப்பட்டது. டைம் இதழின் "எந்நாளும் சிறந்த 100 படங்களுக்கான பட்டியலில்" இப்படம் 2005 ல் சேர்க்கப்பட்டது.
1989ல் தெலுங்கில் தன் முதல் படமாக, கீதாஞ்சலி யை இயக்கினார். காதல் படமான இது பெரும் வெற்றி பெற்றது. இது தமிழில் இதயத்தைத் திருடாதே என மொழி பெயர்க்கப்பட்டு தமிழிலும் வென்றது. பின் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையை மையப்படித்தி அஞ்சலி (1990), தொடர்ந்து மகாபாரதக்கதையின் துரியோதனன், கர்ணன் நட்பை தழுவி ரஜினிகாந்தை வைத்து இயக்கிய தளபதி (1991) அதைத் தொடர்ந்து காதலும் திகிலும் கலந்த ரோஜா (1992) என அனைத்து படங்களும் பெரும் வெற்றியையும் பாராட்டையும் பெற்றன. மூன்று வருடங்களுக்கு பிறகு 1992 - 1993 ல் நடந்த மும்பை கலவரத்தை பின்னனியாக கொன்டு அவர் இயக்கிய பம்பாய் (1995) பெரும் சர்ச்சையை கிளப்பினாலும், பெரும் வருவாயை ஈட்டியது. பாராட்டையும் பெற்றது.
1997ல் இருவர் என்ற படத்தை இயக்கினார். இது இரு பெரும் தமிழக அரசியல் தலைவர்களின் வாழ்க்கை சரிதம் போல உருவாக்கினார். 1998ல் பாலிவுட்டில் தன் முதல் படமாக தில் சே இயக்கினார். உள் நாட்டில் இப்படம் தோல்வி அடைந்தாலும் வெளிநாடுகளில் வெற்றியடைந்தது. ஐக்கிய இராச்சியத்தின் பெரும் வருவாய் தந்த முதல் 10 திரைப்படங்கள் வரிசையில் இடம் பிடித்த முதல் இந்திய படமானது. இலங்கைப்போரை மையமாக வைத்து 2002 ல் கன்னத்தில் முத்தமிட்டால் வெளியிட்டார். வருவாய் ரீதியாக இப்படம் தோற்றாலும், 50 ஆவது தேசிய விருது விழாவில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த தமிழ்ப்படம் உட்பட மேலும் ஆறு விருதுகளையும் குவித்தது. 2004ல் இந்தியில் யுவா தமிழில் ஆய்த எழுத்து என வெவ்வேறு நடிகர்களை வைத்து இயக்கி வெளியிட்டார். 2007ல் தொழிலதிபர் மதுபாய் அம்பானியின் வாழ்க்கையைத் தழுவி குரு படத்தை இயக்கினார்.
2010ல் ராமயண கதையை சார்ந்து ராவணன் (2010) இயக்கினார். மூன்று வருடங்களுக்கு பிறகு வெளியிட்ட கடல் பெரும் தோல்வியடைந்தது. 2015ல் வெளியிட்ட ஓ காதல் கண்மணி பெரும் வெற்றியடைந்தது. 2017ல் இவர் இயக்கிய காற்று வெளியிடை ஒரு திகில் கலந்த காதல் திரைப்படமாகும்.