மாட்டிறைச்சி விலங்கினத்தில் மாட்டில் இருந்து பெறப்படும் இறைச்சி ஆகும். உலகளவில் மாட்டிறைச்சி ஒரு முக்கிய உணவாக இருக்கிறது. அமெரிக்கா, பிரேசில், சவூதி அரேபியா ,சீனா மற்றும் ஐரோப்பியப் பகுதிகளில் இருப்பவர்களால் மாட்டிறைச்சி விரும்பி உண்ணப்படுகின்றது[1]. இந்து சமயத்தில் பசு கடவுளாக வணங்கப்படுவதால், சில பிரிவினர் மாட்டிறைச்சியை உண்பதில்லை. இருப்பினும், சில சமூகப் பிரிவினர் மாட்டிறைச்சியை உண்பதுண்டு. கலிபோர்னியா லோமா லிண்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களின் ஆய்வின்படி மாட்டிறைச்சி உற்பத்தியால் பசுமைக் குடில் வாயு வெளியீடு அதிகரிக்கிறது.[2][3]
இந்தியா, மாட்டிறைச்சி (எருமை) ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதலிடம் வகிக்கிறது. ஆனால் அதன் சில ஆட்சிப்பகுதிகளில் சமூக மற்றும் மதக் காரணங்களால் பசு வதை தடைசெய்யப்பட்டுள்ளது.[4][5][6][7][8] இந்து சமய நூல்களில் மாட்டிறைச்சி உண்பதை எதிர்க்கவில்லை இருந்தாலும் சில சமூகத்தினர் தங்கள் உணவாக மாட்டிறைச்சியை எடுத்துக் கொள்வதில்லை.[9][10]இந்திய அரசியலமைப்புச் சட்டம், சரத்து 48 இன்படி பசு மற்றும் கன்றுகள் வதையைத் தடுத்தல் மற்றும் பால் தரும் பசுக்கள், தீவனம் இன்றி வாடும் கால்நடைகளின் நலன்களை பேணுதல் போன்றவற்றை வலியுறுத்துகிறது."[11][12][13] இச்சரத்து மாநிலப்பட்டியலில் உள்ளதால் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்காணா, ஒடிசா, பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் பசுவதை தடைச்சட்டமுள்ளது. பசு, காளை, எருது, ஒட்டகம் ஆகிய விலங்குகளை இறைச்சிக்காக விற்பனைக் கூடங்களில் விற்பனை செய்யக்கூடாது என்று விலங்குகள் வதை தடுப்புச் சட்ட (கால்நடைச் சந்தை முறைப்படுத்துதல்) விதிகள் 2017 இல் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் இறைச்சிக்கு விலங்குகளை விற்பனைசெய்ய விற்பனைக் கூடங்களைப் பயன்படுத்த முடியாது.[14] பசுவதை மற்றும் மாட்டிறைச்சி உண்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வன்முறைகளும் நிகழ்கின்றன.
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் சங்க காலத்தில் இருந்தே மாட்டிறைச்சி உண்பது வழக்கத்தில் இருந்துள்ளது. மயிலிறகால் ஆன மாலையை அணிந்த வீரர் இளம் பசுவைக் கொன்று உண்டனர் என அகநானூற்றின் 249ஆம் பாடல் குறிப்பிடுகிறது.[15]
நேப்பாளம்
நேப்பாளத்தில் உணவிற்காகப் பசுவைக் கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது.[16] பெரும்பாலும் இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பதால் நேப்பாளத்தில் பசுவின் இறைச்சியைப் பெரும்பாலும் தவிர்க்கின்றனர் ஆனால் சிலர் எருமையின் இறைச்சியை எடுத்துக் கொள்கின்றனர்.
கியூபா
2003 இல் பால் மற்றும் பால் பொருட்களின் பற்றாக்குறையால் பசு வதை தடைசெய்யப்பட்டுள்ளது.[17]
ஐக்கிய இராச்சியம்
உலக காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த லண்டனிலுள்ள கோல்ட்ஸ்மீத் பல்கலைக்கழகம் மாட்டிறைச்சி விற்பனையைத் தனது கல்விநிலைய வளாகத்தில் தடைசெய்துள்ளது.[18]
உலகளவில் உற்பத்தியாளர்கள்
முதல் பத்து கால்நடை மற்றும் மாட்டிறைச்சி உற்பத்தி செய்யும் நாடுகள்.[19]