மார்க்கெசசுத் தீவுகள்
மார்க்கெசசுத் தீவுகள் (Marquesas Islands, French: Îles Marquises அல்லது Archipel des Marquises அல்லது Marquises; மார்க்கெசான்: Te Henua (K)enana, பொருள்: "ஆண்களின் நிலம்") தெற்குப் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள, பிரான்சின் ஆட்சிப் பகுதியான பிரெஞ்சுப் பொலினீசியாவுக்குள் அடங்கிய எரிமலைத் தீவுக் கூட்டங்கள் ஆகும். மார்க்கெசசுத் தீவுகள் 9° 00தெ, 139° 30மே இல் அமைந்துள்ளன. இங்குள்ள மிக உயர்ந்த இடமாக உவா பு தீவில் காணப்படும் ஒவாவே மலை உச்சி உள்ளது. இதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 1,230 மீ (4,035 அடி). மார்க்கேசசுத் தீவுகள், பிரெஞ்சுப் பொலினீசியாவின் ஐந்து நிர்வாகப் பிரிவுகளுள் ஒன்றாக அமைகின்றன. இத்தீவுகளின் தலைமை இடமாக நுக்கு இவா தீவில் இருக்கும் தையோகாயே உள்ளது. 2007 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மார்க்கேசசுத் தீவுகளின் மக்கள்தொகை 8,632. வரலாறுதற்போது கிடைக்கும் குறிப்புகளின்படி இத்தீவுகளில் முதல் குடியேறியோர் பொலினீசியர்கள் ஆவர். தொல்லியல் சான்றுகளின்படி இவர்கள் கிபி 100க்கு முன் இங்கு வந்ததாக நம்பப்படுகிறது. இனவியல், மொழியியல் ஆகியவை சார்ந்த சான்றுகளின் அடிப்படையில் இவர்கள் தொங்கா, சமோவா ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருக்கலாம் எனத் தெரிகிறது. 1595 ஆம் ஆண்டு யூலை 21 ஆம் தேதி இப்பகுதியை அடைந்த ஆல்வாரோ டி மென்டனா டெ நெய்ரா என்னும் எசுப்பானிய நாடுகண் பயணி இத்தீவுகளுக்குத் தற்போது வழங்கும் பெயர்களை இட்டார். அக்காலத்தில் பெருவின் வைசுராயாக இருந்த அவருடைய புரவலரான கனேட்டேயின் ஐந்தாம் மார்க்கிசு, கார்சியா உர்ட்டாடோ டெ மென்டோசாவின் பெயரைத் தழுவியே இப்பெயர்கள் வழங்கப்பட்டன. மென்டனா சாலமன் தீவுகளுக்குச் செல்வதற்கு முன் முதலில் பாத்து இவாவுக்கும், பின்னர் தகுவாத்தாவுக்கும் சென்றார். அமெரிக்கக் கடல் வணிகரான சோசேப் இங்கிரகாம், 1791ல் வடக்கு மார்கெசசுத் தீவுகளுக்கு வந்தபோது அதற்கு வாசிங்டன் தீவுகள் எனப் பெயர் சூட்டினார். 1813ல் கொமடோர் டேவிட் போர்ட்டர், நுக்கு இவா ஐக்கிய அமெரிக்காவுக்கு உரியது என உரிமை கோரினார். எனினும், ஐக்கிய அமெரிக்கக் காங்கிரசு இதனை உறுதி செய்யவில்லை. பிரான்சின் உள்ளூர்த் தலைவர் ஒருவரின் சார்பாக நிகழ்ந்த வெற்றிகரமான படையெடுப்பு ஒன்றைத் தொடர்ந்து, அவர் தானே தகுவாத்தா தீவு முழுவதற்கும் அரசன் என உரிமை கோரினார். தொடர்ந்து, இப்பகுதி முழுவதையும் பிரான்சு கையேற்று நுக்கு இவாவில் ஒரு குடியேற்றத்தையும் உருவாக்கியது. இது 1859ல் கைவிடப்பட்டது. 1870ல் இப்பகுதியை மீளவும் பிரான்சு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அதைப் பிரெஞ்சுப் பொலினீசிய ஆட்சிப்பகுதிக்குள் சேர்த்துக்கொண்டது. குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia