மார்த்தாண்ட வர்மர்
மார்த்தாண்டவர்மன் (1706–1758) திருவிதாங்கூர் அரசை உருவாக்கி அதனைப் பல ஆண்டுகள் வெற்றிகரமாக ஆண்டுவந்தவர் ஆவார். இவர் அட்டிங்கல் இளைய ராணியின் மகன். இந்தியாவின் தென்கோடியில் இருந்த சிற்றரசான வேணாட்டின் அரசுரிமை இவரது மாமனாரான ராஜா ராம வர்மரிடம் இருந்து இவருக்குக் கிடைத்தது. மிகுந்த தந்திரமும், புத்தியும் நிறைந்த மார்த்தாண்டவர்மா, இளவரசராக இருந்தபோதே பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்துடன் 1723 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார். அரச பதவிராஜா ராம வர்மரின் பிள்ளைகளும், குஞ்சுத் தம்பிமார் என அழைக்கப்பட்ட, பத்மநாபன் தம்பி, ராமன் தம்பி ஆகியோரும் எட்டுவீட்டில் பிள்ளைமார் போன்ற பிரபுக்களோடு சேர்ந்துகொண்டு மார்த்தாண்டவர்மாவைக் கொல்லச் சதி செய்தனர். இதனால் இவர் தலைநகரமான பத்மநாபபுரத்தில் இருந்து தப்பியோடித் நாகர்கோவிலில் வாழ்ந்து வந்தார். தனது எதிரிகளை வென்ற மார்த்தாண்டவர்மா 1729 ஆம் ஆண்டில் அரசனானார். அரசு விரிவாக்கம்வலுவுள்ள படையொன்றைத் திரட்டிய மார்த்தாண்ட வர்மர் அயல் நாடுகளின் மீது படையெடுத்து அவற்றை வேணாட்டுடன் இணைத்துக் கொண்டார். இவற்றுள் பல டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியாரின் கூட்டாளிகளாக இருந்தனர். இதனால் டச்சுக் கம்பனியார் மார்த்தாண்ட வர்மர்மீது போர் தொடுத்தனர். 1741 ஆம் ஆண்டில் இடம்பெற்ற குளச்சல் போரில் டச்சுக்காரர் தோல்வியைத் தழுவினர். டச்சுத் தளபதியான யுஸ்ட்டாக்கியஸ் டி லனோய் (Eustachius De Lannoy) பிடிபட்டான். மார்த்தண்ட வர்மருடைய படையில் சேர்ந்து வீரர்களுக்கு நவீன போர்முறையில் பயிற்சி அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் அவன் கொல்லாமல் விடப்பட்டான். நவீனப் படுத்தப்பட்ட படைகள் கொச்சி வரை சென்று எல்லாச் சிறிய அரசுகளையும் கைப்பற்றின. பின்னர் கொச்சி அரசரோடு ஒப்பந்தம் செய்து கொண்டு நாட்டின் வடக்கு எல்லையில் அமைதி நிலவச் செய்தார் மார்த்தாண்ட வர்மர். திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலைத் திருத்தி அமைத்த இவர், தனது அரசை அங்குள்ள இறைவனுக்கே காணிக்கையாக்கித தன்னை ஸ்ரீபத்மநாபனின் அடியவனாகக் கருதி நாட்டை ஆண்டுவந்தார். இவர் 1758 ஆம் ஆண்டில் காலமானார். முற்றுப் பெறாத ஏ.வி.எம் கால்வாய்மன்னர் மார்த்தாண்ட வர்மர் தனது நாட்டின் தலைநகரான திருவனந்தபுரத்தை நாட்டின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியுடன் இணைக்கும் வகையில் கால்வாய் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டார். மன்னருக்குப் பின் அவரது வாரிசுகள் இப்பணியைத் தொடர்ந்தாலும் மண்டைக்காடு வரை மட்டுமே கால்வாய்ப்பணி அமைக்க முடிந்தது. உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia