முகேசு முகமது
முகேசு முகமது (Mukesh Mohamed, ஆரம்பத்தில் முகேசு என்று அழைக்கப்பட்டார்) இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஆவார்.[1] இவர் மெல்லிசை, நாட்டுப்புற இசை, கானா பாடல்கள் என பல்துறை பாடகர் ஆவார்.[2] பல்வேறு இந்திய மொழிகளில் 500இற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பல பக்திப் பாடல்களையும் பதிவு செய்துள்ளார். இவர் உலகெங்கிலும் உள்ள பல நேரடி இசைக் கச்சேரிகளில் பங்குபெற்றுப் பாடியவர். மேலும் இளையராஜாவின் இசைக் குழுக்களில் தொடர்ந்து பாடல்களைப் பாடியுள்ளார். முகேசு முகமது அண்ணாத்த திரைப்படத்தில் "வா சாமி" உட்பட மிகவும் பிரபலமான வெற்றிப் பாடல்களை பாடியுள்ளார்.[3][4] ஆரம்பகால வாழ்க்கைமுகேசு முகமது தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தார். இவரது பெற்றோர் திருநெல்வேலி மாவட்டம், செய்துங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.[5] இவர் தனது பள்ளி நாட்களில் பாட்டுப் போட்டிகளில் தீவிரமாக பங்கேற்றார். இவரது ஆசிரியர் இசைத் துறையிலும் திரைப்படத் துறையிலும் நுழைய அறிவுறுத்தி இவரின் எதிர்காலத்தை முன்னறிவித்தார். முகேசு சிறுவயதிலிருந்தே திரைப்படத் துறையில் ஆர்வமாக இருந்ததால், அதைத் தொழிலாகக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இசையாளரான இவருடைய தந்தை என். பி. அப்துல் காதர்[6] புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர்களான கே. பி. சுந்தராம்பாள், டி. ஆர். மகாலிங்கம், டி. எம். சௌந்தரராஜன் சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் பாடிய சில கடினமான பாடல்களைப் பாடப் பயிற்சி அளித்ததுடன் இசையை முறையாகக் கற்கவும் ஊக்குவித்தார். முகேசு முகமது இசையாளரான தினகரனிடம் இசையைக் கற்கத் தொடங்கினார். தினகரன் இவருடைய பெயரை முகேசு என்று மாற்றினார்.[7] பின்னணிப் பாடகராகமுகேசு முகமது தினகரனின் இசைக்குழுவில் பாடல்களைப் பாடத் தொடங்கினார். தொடக்கத்தில் பல பிரபலமான தமிழ்ப் பக்திப் பாடல்களைப் பாடி வந்தார்.[8] 15 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் மெல்லிசைக் குழுக்களில் பாடிக்கொண்டிருந்தார். ஒரே நேரத்தில், முன்னணி தொலைக்காட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு இசைப் போட்டிகளில் இவர் பங்கேற்றார். 2002 இல், ராஜ் தொலைக்காட்சி நடத்திய "ராஜ கீதம்" என்ற இசைப் போட்டிக்காக அந்த ஆண்டின் சிறந்த பாடகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் எம். எஸ். விஸ்வநாதன் , எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஏ. ஆர். ரகுமான் உள்ளிட்ட புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் முன்னிலையில் விருதைப் பெற்றார்.[9] இந்த பாராட்டுகள் இவருக்கு தமிழ்த் திரையிசையில் பாடல்கள் பாடும் வாய்ப்பைக் கொடுத்தது.[10] 2004 இல் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் வெளிவந்த கண்களால் கைது செய் என்ற தமிழ்த் திரைப்படத்தில் "தீக் குருவியை" பாடலுக்காக முகேசு முகமது முதன்முறையாக பின்னணி பாடினார்.[11] இளையராஜா, சிறீகாந்து தேவா, பரத்வாஜ், தேவி ஸ்ரீ பிரசாத், டி. இமான், ஹாரிஸ் ஜெயராஜ் , சிற்பி, கார்த்திக் ராஜா, கண்ணன், யுவன் ஷங்கர் ராஜா உட்பட பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.[12][13] 1964இல் வெளிவந்த கர்ணன் திரைப்படத்தில் இடம்பெற்ற உள்ளத்தில் நல்ல உள்ளம் என்ற சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடலை இவர் பங்குபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். [14][15][16] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia