மூலக்கொத்தளம்
மூலக்கொத்தளம் (ஆங்கிலம்: Moolakothalam) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3][4][5] 50 வருடங்களுக்கு மேலாக, மீன் கருவாட்டு சந்தை ஒன்று மூலக்கொத்தளம் பகுதியில் இயங்கி வருகிறது.[6] கடல் மட்டத்திலிருந்து சுமார் 29 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மூலக்கொத்தளம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 13°06′25″N 80°16′26″E / 13.107000°N 80.273800°E ஆகும். பாரிமுனை, ராயபுரம், ஜார்ஜ் டவுன், காசிமேடு, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, சௌகார்பேட்டை, வள்ளலார் நகர், மண்ணடி, பேசின் பாலம் மற்றும் கொண்டித்தோப்பு ஆகியவை மூலக்கொத்தளம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும். மூலக்கொத்தளத்தில் 120 ஆண்டுகள் பழமையான மயானம் உள்ளது.[7] இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் நீத்த நடராஜன் மற்றும் தாளமுத்து ஆகியோரின் இறுதி இளைப்பாறும் இடமான இந்த மயானம் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். மேலும், சமூக ஆர்வலரும் சீர்திருத்தவாதியுமான சா. தருமாம்பாளுக்கு இங்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.[8] இந்த மயானத்தின் பரப்பளவு சுமார் 20 ஏக்கர்.[9] மூலக்கொத்தளம் மயானத்தின் அருகே, ஆதிதிராவிட மக்களின் நலன் கருதி, பல அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட, தமிழக அரசு முன்மொழிந்துள்ளது.[10] இதற்கு ம. தி. மு. க., சி. பி. எம்., வி. சி. க., போன்ற சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், இங்குள்ள மயானத்தின் ஒரு பகுதியைக் கையகப்படுத்த, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.[11] அனைத்து நவீன வசதிகளுடன் கட்டப்படும் 1,044 குடியிருப்புகளின் திட்டச் செலவு சுமார் ரூ.138.29 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.[12] மூலக்கொத்தளம் பகுதியில் அமைந்துள்ள மூர்த்தி விநாயகர் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.[13] மேற்கோள்கள்
வெளி இணைப்பு |
Portal di Ensiklopedia Dunia