ரைஸ் மாகாணம்
ரைஸ் மாகாணம் (Rize Province, துருக்கியம்: Rize ili ) என்பது துருக்கியியன் மாகாணம் ஆகும். இந்த மாகாணமானது வடகிழக்கு துருக்கியில் கருங்கடல் கடற்கரையில் டிராப்ஸனுக்கும் ஆர்வினுக்கும் இடையில் உள்ளது. இதன் தெற்கில் எர்சுரம் மாகாணம் உள்ளது. இது முன்னர் லாசிஸ்தான் என்று அழைக்கப்பட்டது, லாசிஸ்தானின் என்ற பெயரானது 1926 ஆம் ஆண்டில் கெமலிஸ்டுகளால் அதிகாரப்பூர்வமாக தடைசெய்யப்பட்டது.[2] அதன் தலைநகரம் ரைஸ் நகரம். இந்த மாகாணத்தில் லாஸ், ஹெம்ஷின், துருக்கிய மக்கள் மற்றும் ஜார்ஜிய சமூகங்கள் உள்ளன. துருக்கிய ஜனாதிபதி ரசிப் தைய்யிப் எர்டோகன் தனது குழந்தை பருவத்தை ரைஸில் கழித்தார், அங்கு அவரது தந்தை துருக்கிய கடலோர காவல்படை உறுப்பினராக இருந்தார்.[3] சொற்பிறப்புஇதன் பெயரானது கிரேக்க மொழிச் சொல்லான ρίζα என்பதில் இருந்து வந்தது ρίζα (riza), என்றால் "மலை சரிவுகள்" என்று பொருளாகும். ஜார்ஜியன், லாஸ் மற்றும் ஆர்மீனிய பெயர்கள் அனைத்தும் கிரேக்க மொழியிலிருந்தும் பெறப்பட்டவை: அவற்றின் பெயர்கள் அந்தந்த வரிசையில் ரைஸ் (რიზე), ரிசினி (რიზინი) மற்றும் ரைஸ் (Ռիզե) என குறிப்படப்படுகின்றன. ரைஸில் இன்றைய வாழ்க்கைரைஸ் நகரம் என்பது மலைகளுக்கும் கடலுக்கும் இடையில் ஒரு குறுகிய தட்டையான நிலப்பரப்பில் உள்ள ஒரு கடற்கரை நகரமாகும். ஒப்பீட்டளவில் செல்வந்த நகரமான ரைஸில் உள்ள மக்களின் வாழ்க்கை முறைக்கும், தொலைதூர கிராமங்களில் உள்ளவர்களின் வாழ்க்கை முறைக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு இருந்தாலும், இப்பகுதி செழிப்பானதாக உள்ளது. ரைஸ் தேயிலை உற்பத்திக்காக இந்த மாகாணம் துருக்கியில் அறியப்படுகிறது. நிலவியல்பாண்டிக் மலைகள் மற்றும் கருங்கடலுக்கு இடையில் ரைஸ் அமைந்துள்ளது. இது துருக்கியின் "ஈரப்பதமான" பகுதியாக கருதப்படுகிறது. மேலும் நாட்டின் முக்கிய தேயிலை உற்பத்தி செய்யும் பிராந்தியமாகவும் உள்ளது. தேயிலை தவிர, கிவி பழங்களை விளைவிப்பதற்கும் இப்பகுதி அறியப்படுகிறது. இந்த மாகாணம் பெரும்பாலும் கிராமப்புறமாகவும், அழகாகவும் உள்ளது. இதில் பல மலை பள்ளத்தாக்குகள் மற்றும் உயரமான யெய்லாக்கள் (புல்வெளிகள்) உள்ளன. மாகாணத்தில் உள்ள Çamlıhemşin மாவட்டமானது துருக்கியின் மலையேற்றம் மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்லும் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாக உள்ளது. இன்னும் சில தொலைதூர பகுதிகளில் சாலை வசதிகள் குறைவாக உள்ளன, எனவே மக்களும் பொருட்களும் மலைகளில் பயணம் செய்ய மின்சாரம் மூலம் இயங்கும் தொங்கூர்தி ( கேபிள் கார்கள் ) நிறுவப்பட்டுள்ளன. இங்கு கோடை காலம் குளிர்ச்சியானதாக இருக்கும் (சூலை சராசரி வெப்பநிலை 22 °C) மேலும் குளிர்காலம் மிதமாக (சனவரி சராசரி வெப்பநிலை 7 °C) இருக்கும். ஆண்டு முழுவதும் அதிக அளவு மழைப்பொழிவு இருக்கும். புதிய கருங்கடல் கடற்கரை சாலை ரைசுக்கு விரைவாக சென்று சேரக்கூடியதாக ஆக்கியுள்ளது. ஆனால் இது பிராந்தியத்தில் உள்ள வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல் என்னும் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியுள்ளது. 2000 களின் முற்பகுதியில் இருந்து, ரைஸ் மாகாணத்திற்கு வெளியில் இருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்கள் குறிப்பாக நகர்ப்புறங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளாவர். இவ்வாறான சுற்றுலாவின் அதிகரிப்பானது உள்ளூர் மக்களின் பாரம்பரிய வாழ்க்கை முறை, இயற்கை சூழலின் களங்கமற்ற தன்மை போன்றவை ஆபத்துக்கு உள்ளாகி உள்ளது என்ற கவலையை ஏற்படுத்தியிள்ளது. மாகாண ஆளுநர் என்வர் சாலிஹோக்லு (2005 ஆம் ஆண்டு நிலவரப்படி) சாலை வலைப்பிண்ணலை விரிவாக்குவதற்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்ததுடன், தேனீ வளர்ப்பு, டிரவுட் மீன் பண்ணை மற்றும் கரிம தேயிலை வளர்ப்பதில் வணிகரீதியான கவனம் செலுத்த வேண்டும் என்று வாதிட்டார்.[4] இப்பகுதியின் பூர்வீக தாவரங்களில் ஒன்று செர்ரி லாரல் ( துருக்கியம்: taflan or karayemiş ) ஆகும். இதன் பழம் ஒரு உண்ணக்தக்க சிறிய கருமையான பிளம் ஆகும். இதை உண்பவர்களின் வாய் மற்றும் பற்களில் கருத்த கறையை ஏற்படுத்தக்கூடியது. கூடுதலாக, அவுரிநெல்லி இப்போது தீவிரமாக சாகுபடி வளர்ந்து வருகின்றது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia