வனவிலங்கு மேலாண்மை (Wildlife management) என்பது வனவிலங்குகள், அவற்றின் வாழ்விடங்கள், மனிதர்கள் ஆகியவர்களுக்கு இடையேயான தொடர்புகளை கட்டுப்படுத்தி முன்னதாகவே தீர்மானிக்கப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தவல்ல மேலாண்மை செயல்முறையாகும்.[1][2][3] இது வனவிலங்குப் பாதுகாப்பு, விலங்குகளின் தொகைக் கட்டுப்பாடு, வேட்டைவிலங்குப் பராமரிப்பு, வனவிலங்கு கருத்தடை மற்றும் தொல்லைதரு விலங்குக் கட்டுப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியது.[4][5]
வனவிலங்கு மேலாண்மை என்பது தாங்கும் இருப்பளவு, இடையூறு, மற்றும் தொடர்ச்சி உள்ளிட்ட சூழலியல் கொள்கைகளையும் இயற்கைப் புவியியல், மண்வளஇயல், மற்றும் நீரியல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் நிலைமைகளையும் கருத்தில் கொண்டு[6][7][8][9]புவியின் பல்லுயிர் பெருக்கத்தில் ஏற்படும் இழப்பைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.[10][11] பெரும்பாலான வனவிலங்கு உயிரியலாளர்கள் வாழ்விடங்களைப் பாதுகாத்தலிலும் மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வந்தாலும் அண்மைக்காலமாகக் காட்டுநில மீட்டெடுப்பு அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.[12][13] இது காடு மீள்வளர்ப்பு, தொல்லைத்தரு விலங்குக் கட்டுப்பாடு, நைட்ரஜன்–நைட்ரேட் உருமாற்றம், நீர்ப்பாசனம், தண்டுச்சுறுக்கல் (coppicing), வேலியிடுதல் ஆகிய நுட்பங்களிளைக் கொண்டு செயற்படுத்தப்படுகிறது.[14]
வேட்டை விலங்குப் பராமரிப்பு என்பது வேட்டையாடப்படவல்ல விலங்குகளின் நலனுக்காக வேண்டி வனவிலங்குகளை நிர்வகித்தல் அல்லது கட்டுப்படுத்துதல் ஆகும். இது அதிக லாபகரமான வேட்டை உயிரினங்களின் அதிக எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டி அவற்றின் வாழிடத்தைப் பகிர்ந்து கொள்ளும் அல்லது அவ்விலங்குகளை வேட்டையாடும் பிற விலங்குகளைக் கொல்வதையும் உள்ளடக்கியதாகும். ஆல்டோ லியோபோல்ட் 1933-ஆம் ஆண்டில் வனவிலங்கு மேலாண்மை என்பதனை மனிதப் பொழுதுபோக்கிற்காக வேட்டையாடப்படவல்ல விலங்குகளுக்கு ஆண்டுதோறும் வேண்டிய நிலையான தீவனப் பயிர்களின் உற்பத்திக்கு நிலத்தைப் பயன் படுத்தும் கலை என்று வரையறுத்தார்.[15]