டி.வீரேந்திர ஹெகடே (D. Veerendra Heggade) (பிறப்பு: 1948 நவம்பர் 25) இவர் தர்மசாலா கோயிலின் பரம்பரை நிர்வாகி / தர்மாதிகாரி ஆவார். இவரது தொண்டுப்பணிகளால் இவர் அறியப்படுகிறார். இவர் தனது 19 வது வயதில், 1968 அக்டோபர் 24 அன்று, தர்மாதிகாரி வரிசையில் இருபத்தியோராவது உறுப்பினராக இருந்தார்.[1] பக்தர்கள் மற்றும் தர்மத்தின் நலனுக்காக நம்பிக்கையில் வைக்கப்பட்டுள்ள கோவிலையும் அதன் சொத்துக்களையும் இவர் நிர்வகிக்கிறார்.
இவர் பல பங்களிப்புகளுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார்.[2] 2009 ஆம் ஆண்டிற்கான கர்நாடகாவின் மிக உயர்ந்த குடிமை விருதான 'கர்நாடக ரத்னா' விருது இவருக்கு வழங்கப்பட்டது.[3]
தனிப்பட்ட வாழ்க்கை
இவர் தர்மாதிகாரி இரத்னவர்மா எக்டே மற்றும் இரத்னம்மா எக்டே ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்தார். இவர் கர்நாடகாவின் தெற்கு கன்ன்ட மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தர்மசாலா மஞ்சுநாத சுவாமி கோயிலின் பரம்பரை அறங்காவலர்களான துளு மொழி பேசும் பெர்கடே வம்சத்தைச் சேர்ந்தவர். குடும்பம் சமண மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் ஒரு இந்து கோவிலின் அறங்காவலர்களாக இருக்கின்றனர். இவர்கள் திகம்பர சமணத்தைச் சேர்ந்தவர்கள்.[4] இவருக்கு அரிச்சந்திர குமார், சுரேந்திர குமார் மற்றும் இராஜேந்திர குமார் என்ற மூன்று இளைய சகோதரர்களும், பத்மலதா என்ற சகோதரியும் உள்ளனர். இவர் ஹேமாவதி என்பவரை மணந்தார். இவர்களுக்கு சிரத்தா என்ற ஒரு மகள் இருக்கிறார்.
மூத்த மகனாக, இவர் தனது தந்தைக்குப் பிறகு தர்மசாலா கோயிலின் தர்மாதிகாரி பதவியை வகித்த பெர்கடே வம்சத்தின் இருபத்தியோராவது உறுப்பினர் இவர். இவருக்கு மகன்கள் இல்லாததால், இவரது தம்பி அரிசந்திர குமார் இவரது வாரிசாவார்.
இவர் ஒரு வாகனச் சேகரிப்பாளரும் புகைப்பட ஆர்வலருமாவார். இவரது கார் சேகரிப்பு தர்மசாலாவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
படைப்புகள் மற்றும் பங்களிப்புகள்
தர்மாதிகாரி
தர்மாதிகாரி என்ற முறையில், இவர் நிறுவனத்தின் மரபுகளைத் தொடர்ந்தார்:
- தர்மசாலாவில் ஆண்டுதோறும் 'சர்வ தர்மம் மற்றும் சாகித்ய சம்மேளம்' நடத்தி கோயிலின் பாரம்பரியத்தைத் தொடர்ந்தார். சம்மேளனத்தன் 85 வது அமர்வு 2017 இல் நடைபெற்றது.
இந்தியக் கலாச்சாரம்
- இவர் கலை மற்றும் இலக்கியத்தின் புரவலராவார்..
- இவர் ஒரு வெளியீட்டுத் தொடரையும், மஞ்சுவனி என்ற ஒரு மாத இதழையும் வெளியிடுகிறார் .
- இவரது மேற்பார்வையில், இயற்கை மருத்துவம், யோகா மற்றும் ஒழுக்கக் கல்வியைப் பரப்புவதற்காக, 400 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் தொடக்கப் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும் யோகா, ஒழுக்க மற்றும் ஆன்மீகக் கல்வியில் 30,000 மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கின்றனர்.
- தூய பாரம்பரிய அணுகுமுறையை பேணுவதன் மூலம் யக்சகானத்தின் மறுமலர்ச்சிக்கு இவர் பங்களித்தார்.
- மஞ்சுசா என்ற ஒரு அருங்காட்சியகம் அமைத்தார். இது அரிய பழங்கால பொருட்கள் மற்றும் சமகால அரிய மற்றும் மதிப்புமிக்க சேகரிப்புகளைக் கொண்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்டேஜ் கார் அருங்காட்சியகத்தில் பல நாடுகளின் வாகனங்கள் உள்ளன.
- 4000 பனை-இலை கையெழுத்துப் பிரதிகள் பாதுகாக்கப்பட்டு, அறிஞர்களால் "சிறீ மஞ்சுநாதேசுவர சமசுகிருதி சம்சோதனா பிரதித்தானா" என்பதற்கான ஆராய்ச்சி நடத்தப்படுகிறது.
சமூக நலம்
- இவர் 1972 முதல் ஒவ்வொரு ஆண்டும் தர்மசாலாவில் இலவசத் திருமணத்தை நடத்தி வைக்கிறார். ஏப்ரல் 2004 க்குள் 10,000 தம்பதிகள் இந்த திட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொண்டனர்.
- நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உடையவர்களின் நலனுக்காக பெங்களூர், கல்லஅள்ளி, பத்ராவதி, மைசூர், சரவணபெலகுளா மற்றும் பந்த்வால் ஆகிய இடங்களில் திருமண அரங்குகளை கட்டினார்.
- கர்நாடகாவின் கரையோர மாவட்டத்தில் 600 கிராமங்கள் மற்றும் ஆறு நகர நகரங்களை உள்ளடக்கிய கிராம அபிவிருத்தி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டம் விவசாயத்தில் 1,350,000 குடும்பங்களை மேம்படுத்துதல், தொழில்நுட்ப பரிமாற்றம், பெண்கள் அதிகாரம், வீட்டுவசதி, மாற்று எரிசக்தி ஆதாரங்கள், வருமானம் ஈட்டும் செயல்பாடு, சிறுகுறுநிதி, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் உதவுகிறது.
- இவர் சூரிய ஆற்றலின் முக்கியத்துவத்தை ஊக்குவித்து பல கிராமங்களுக்கு வசதிகளை வழங்கியுள்ளார்.
- சிண்டிகேட் வங்கி, சிண்டிகேட் வேளாண் அறக்கட்டளை மற்றும் கனரா வங்கி ஆகியவற்றுடன் இணைந்து கிராம அபிவிருத்தி மற்றும் சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தை நிறுவினார். அப்போதிருந்து இந்த நிறுவனத்தின் 20 கிளைகள் இந்தியா முழுவதும் எழுந்துள்ளன. சூன் 2004 வரை, 1,500,000 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு விகிதம் 65% ஆகும்.
- சிண்டிகேட் வங்கியின் வைர விழாவைக் குறிக்கும் வகையில் "ரூரல் இந்தியா ரியல் இந்தியா" என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்குகளை நடத்தினார்.
கல்வி
- உஜீரின் தர்மசாலா மஞ்சுநாதேசுவரா கல்லூரியில் முதுகலை படிப்பை அறிமுகப்படுத்தினார்.
- இவர் மைசூரில் மஞ்சுநாதேசுவரா வணிகக் கல்லூரியைத் தொடங்கினார். இது இந்தியாவின் சிறந்த வணிகக் கல்லூரியாக உருவெடுத்தது.
- வேளாண்மை, தோட்டக்கலை, பால்வளர்ப்பு மற்றும் எதிர்கால விவசாயிகள் மற்றும் குடிமக்கள் என்ற கருத்தை உஜிரேயில் உயர்நிலைப் பள்ளி சிறுவர்களுக்கான பயிற்சி கொண்ட ரத்னமாநசா என்ற மாதிரி விடுதியைத் தொடங்கினார்.
- வேளாண்மை, தார்மீக கல்வி மற்றும் தலைமைத்துவ திட்டங்களில் பயிற்சியளிக்கும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக உஜிரில் கல்லூரி மாணவர்களுக்கான மாதிரி விடுதி சித்தவன குருகுலத்தைத் தொடங்கினார்.
- ஆரம்பக்கல்வி முதல் பொறியியல், மருத்துவம், ஆயுர்வேத மற்றும் மேலாண்மை நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் வரை கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் உஜீரின் எஸ்.டி.எம் கல்விச் சங்கத்தின் தலைவராக உள்ளார்.[5]
துளுவக் கலாச்சாரம்
- துளுவர் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் இவர் ஆதரித்தார்.
விருதுகள் மற்றும் கௌரவங்கள்
- இவர் ஆற்றிய பொதுவுடைமை, சமூகப் பணிகளுக்காக இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூசண் விருது (2000) வழங்கப்பட்டது.[6][7]
- 1993 ஆம் ஆண்டில் இந்தியாவின் குடியரசுத்தலைவர் சங்கர் தயாள் சர்மாவிடமிருந்து இராஜரிசி என்ற பட்டம் பெற்றார் [8]
- 2009 ஆம் ஆண்டிற்கான கர்நாடக ரத்னா விருதிற்கு மாநில அரசு இவரைத் தேர்ந்தெடுத்தது [9]
- அப்போதைய இந்தியாவின் பிரதம மந்திரி பி.வி. நரசிம்மராவ், பெல்டங்கடி வட்டத்தில் கிராம அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான இந்திய வர்த்தக சம்மேளன விருதை 1995 மே 12 அன்று வழங்கினார்.
- முன்னாள் பிரதம மந்திரி அடல் பிகாரி வாச்பாய், நவம்பர் 20, 1999 அன்று ருட்செட் நிறுவனத்தால் கிராம அபிவிருத்தி மற்றும் சுய வேலைவாய்ப்பு நடவடிக்கைகளுக்கான இந்திய வர்த்தக சம்மேளன விருதை வழங்கினார்.
- "வத்திகா வர்சதா கன்னடிகா - 2004 "நவம்பர் 20, 2004 அன்று ஹாசனில் ஈடிவி கன்னடம் என்ற தொலைக்காட்சி வழங்கியது [10]
- சமூகப் பணிகளுக்காக இந்திய அரசு 2015ஆம் ஆண்டில் பத்ம விபூசண் விருதினை வழங்கியது.[11]
குறிப்புகள்
வெளி இணைப்புகள்