6.2 அளவுள்ள நிலநடுக்கம் ஆகத்து 24, 2016 அன்று 03:36 மணிக்கு CEST (01:36 UTC), நோர்சியாவிற்கு அருகில் மத்திய இத்தாலியைத் தாக்கியது. இது பெருகியாவிலிருந்து தென்கிழக்கே 75 km (47 mi) தொலைவிலும் லாக்குயிலாவிலிருந்து வடக்கே 45 km (28 mi) தொலைவிலும் அமைந்திருந்தது. ஊம்பிரியா, லாசியோ, மார்சே வட்டாரங்களின் மும்முனைக்கருகே உள்ள பகுதியில் நிகழ்ந்துள்ளது. குறைந்தது 247 பேர் உயிரிழந்துள்ளனர். 368 பேர் காயமடைந்துள்ளனர்.[2]
பின்னணி
இந்த வட்டாரம் இத்தாலியில் நில அதிர்ச்சிக்கு மிகவும் வாய்ப்புள்ள பகுதியாகும்; ஆபிரிக்கப் புவிப்பொறைத் தட்டும் ஐரோவாசிய புவிப்பொறைத் தட்டும் சந்திக்குமிடத்தில் உள்ளது. அப்பெனைன் மலைத்தொடர் முழுமையும் இந்த சந்திப்புக் கோடு உள்ளது.[2] 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே மிகப் பெரும் நிலநடுக்கமாகும்.[3] முன்னதாக 2009இல் லாக்குயிலா அருகே அப்ரூசோ பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு 300க்கும் கூடுதலானவர்கள் உயிரிழந்தனர்; ஏறத்தாழ 65,000 மக்கள் குடிபெயர வேண்டியதாயிற்று.
நிலவதிர்ச்சி
முதல் நில நடுக்கத்திற்கு பிறகு 40 வலுவான பின்னதிர்வுகள் ஏற்பட்டன.[4] இந்த நில நடுக்கத்தை முதலில் ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை அறிவித்தது; முதல் நடுக்கம் 10.0 km (6.2 mi) ஆழத்தில் 6.4 அளவுள்ளதாக இருந்தது.[1][5] இது பின்னர் அமெரிக்க அளவாய்வுத் துறையால் 6.2 எனத் திருத்தப்பட்டது. ஐரோப்பிய-நடுநிலக்கடல் நிலநடுக்க மையம் நடுக்க அளவை 6.1ஆக அளந்தது.[6][7]
நில நடுக்க மையத்திற்கு அருகிலிருந்த அமாட்ரைசு நகரம் மிகுந்த பாதிப்பிக்குள்ளானதாக முதற்தகவல்கள் அறிவித்தன.[8] அக்குமோலி, பெசுக்காரா டெல் இட்ரோன்டோ நகரங்களும் பாதிப்பிற்குள்ளாயின. அமாட்ரைசின் நகரத் தந்தை செர்கியோ பிரோசி "அமாட்ரைசு இனி இல்லை; பாதிக்கும் மேற்பட்ட நகரம் அழிபட்டது" என அறிவித்தார்.[9][10] இடிபாடுகளின் நிழற்படங்கள் நகர மையத்தில் கட்டிட இடிபாடுகள் குவிந்திருப்பதைக் காட்டுகின்றன; புறநகரில் மட்டுமே சில கட்டிடங்கள் விழாமல் உள்ளன.[11] இந்த நிலநடுக்கமும் பின்னதிர்வுகளும் இத்தாலியின் நடுவண் பகுதியில் பல இடங்களில் உணரப்பட்டது; உரோம், நாபொலி, புளோரன்சு போன்ற நகரங்களிலும் உணரப்பட்டன.[12]