2022 பத்தாங்காலி நிலச்சரிவு (2022 Batang Kali landslide) மலேசியாவின்சிலாங்கூர் மாகாணத்தில் 2022 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 16 ஆம் தேதியன்று நிகழ்ந்த ஒரு துயர சம்பவமாகும்.[1][2][3] அதிகாலை நேரத்தில் பத்தாங்காலி நகரத்தில் ஏற்பட்ட இவ்விபத்தை பத்தாங்காலி துயரம் என்றும் அழைக்கிறார்கள். இந்நகரில் சுற்றுலாப் பயணிகள் முகாம் அமைத்து தங்குவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த ஓர் இயற்கை விவசாயப் பண்ணை கடுமையான நிலச்சரிவில் புதையுண்டது. முகாமில் தங்கியிருந்த 92 பேரில் 31 பேர் இவ்விபத்தில் கொல்லப்பட்டனர்.[4][5][6] 61 பேர் மீட்கப்பட்டனர். 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.[7] இன்னும் ஒருவரை காணவில்லை. இப்பேரழிவில் 450,000 கனமீட்டர் (16,000,000 கன அடி) மண் இடமாற்றம் செய்யப்பட்டது.[8][9]
வரலாறு
பின்னணி
பாதர்சு விவசாயப் பண்ணை கோலாலம்பூருக்கு வடக்கே சுமார் 50 கிமீ (31 மைல்) மற்றும் கெண்டிங்கு மேட்டு நிலத்திற்கு மேற்கே சுமார் 15 கிமீ (9.3 மைல்) தொலைவில் உள்ள திட்டிவாங்சா மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள சிலாங்கூர், பத்தாங்காலிக்கு சற்று வெளியே அமைந்துள்ள ஒர் இயற்கை பண்ணையாகும். பண்ணை 2019 ஆம் ஆண்டில் இயற்கை விவசாய நடவடிக்கைகளை தொடங்க ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்தது. ஆனால் 2020 ஆம் ஆண்டு முதல் உரிமம் இல்லாமல் பண்ணையில் முகாம் நடத்தப்பட்டு வந்தது. ஆறு, மலை சரிவுகள் அல்லது நீர்வீழ்ச்சிகள் போன்ற அதிக ஆபத்துள்ள பகுதிகளுக்கு அருகிலுள்ள முகாம்களுக்கு இந்த உரிமம் அவசியமானதாகும்.[10]
பத்தாங்கலி கிள்ளான் பள்ளத்தாக்குக்கு அருகாமையில் இருப்பதால், பள்ளி விடுமுறை காலத்துடன் இணைந்து ஒரு பிரபலமான பொழுதுபோக்கு இடமாக பல குடும்பங்களை ஈர்த்து வந்தது.[11]
மலை உச்சி (மண்டலம் ஏ), பண்னைப் பார்வை (மண்டலம் பி), மற்றும் ஆற்றங்கரை (மண்டலம் சி) என்ற மூன்று பிரிவுகளை முகாம் கொண்டுள்ளது.[12] திசம்பர் 15 அன்று மாலை 92 பேர் இப்பகுதியில் இருந்தனர்.[13][14] நிலச்சரிவு ஏற்பட்ட இரவில், 81 பேர் (அதாவது 51 பெரியவர்கள், 30 குழந்தைகள்) விவசாயப் பண்ணையின் முகாமில் தங்குவதற்கு பதிவு செய்யப்பட்டிருந்தனர். முகாமில் இருந்தவர்கள் பெரும்பாலும் குடும்பங்கள், பள்ளி அல்லது பல்கலைக்கழக மாணவர்கள் ஆவர்.[15] துல்லியமான பதிவுகள் வைக்கப்பட்டிருந்தாலும், நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் முகாமில் தங்குவதற்கு பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்ததால் புள்ளிவிவரங்கள் துல்லியமாக இல்லை என்ற அச்சமும் இருக்கிறது.[16]
நிலச்சரிவு
கனிம மற்றும் புவி அறிவியல் துறையின் ஆய்வுகள் மற்றும் கணக்கீடுகளின்படி, அதிகாலை 2:30 மணிக்கு முன் இந்நிலச்சரிவு தொடங்கியது. 8 மீ (26 அடி) ஆழத்துடன் 500 மீ (1,600 அடி) மற்றும் 200 மீ (660 அடி) பரப்பளவில் 450,000 கனமீட்டர் (16,000,000 கன அடி) மண் சரிவு இவ்விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.[17] நிலச்சரிவில் தோராயமாக 70 மீ (230 அடி) உயரத்தில் இருந்து 300 மீ (980 அடி) அகலம் கொண்ட பரப்பளவு உள்ளடங்கியுள்ளது.[18] சரிந்த சரிவு பண்ணையில் உள்ள மூன்று முகாம்களின் தரையையும் நேரடியாகப் பாதித்தது. கடுமையான சேதம் ஏற்பட்டு உயரமான இடிபாடுகளால் ஆன வயல்வெளி ஒன்று உருவாக்கப்பட்டது.[19][20][21]