அரியமங்கலம் தையல்நாயகி அம்மன் கோவில்அரியமங்கலம் தையல்நாயகி அம்மன் கோவில் (Thaiyal Nayagi Amman Temple, Ariyamangalam) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள திருச்சியின் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் தஞ்சை செல்லும் சாலையில் உள்ள அரியமங்கலத்தில் இக்கோயில் அமைந்திருக்கிறது.[1][2] ஆலய அமைப்புஆரம்பத்தில் தகரக் கொட்டகையாக இருந்த ஆலயம், தற்போது அழகான ஆலயமாக கட்டப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனைத்து வசதிகளுடன் காணப்படுகிறது. ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைத் தாண்டியதும் மகாமண்டபம். அர்த்த மண்டபம் நுழை வாசலின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் முருகப்பெருமான் வள்ளி– தெய்வானையுடனும் அருள்பாலிக்கின்றனர். மகாமண்டப தென் திசையில் துர்க்கை அருள்பாலிக்கிறாள். அடுத்துள்ள கருவறையில் அன்னை தையல்நாயகி நான்கு கரங்களுடன் புன்னகை தவழும் இன்முகத்துடன் காட்சி தருகிறாள். அன்னையின் மேல் இரு கரங்களில் தாமரை மலரைத் தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருள்புரிகிறாள். அன்னையின் தேவக் கோட்டத்தின் வடபகுதியில் ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. ஆலயத்தின் வலதுபுறம் அருள்மிகு வைத்தீஸ்வரன் தனிக்கோவிலில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார். இறைவனின் முன் மகாமண்டபத்தில் நந்தியும், பலி பீடமும் அமைந்துள்ளன. மகாமண்டபத்தின் கீழ் திசையில் கால பைரவரும், தெற்கில் சைவக் குறவர்கள் நால்வரும் அருள்பாலிக்க, தேவக் கோட்டத்தின் தெற்கில் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார். வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேசுவரருக்கு தனிச் சன்னிதி உள்ளது. கோவிலின் தென் திசையில் நாகம்மாவுக்கும், கருப்பண்ணசாமிக்கும் தனித்தனிச் சன்னிதிகள் இருக்கின்றன. சிறப்பு பூசைகள்நாகம்மாவுக்கு நாகபஞ்சமி மற்றும் ராகு பெயர்ச்சி நாட்களில், விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ராகு தோஷ பாதிப்பு உள்ளவர்கள் இந்த சன்னிதிக்கு வந்து அபிஷேக ஆராதனைகள் செய்து பலன் பெறுகின்றனர். தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. விநாயகப் பெருமானுக்கு, விநாயக சதுர்த்தி மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாட்களிலும், முருகப்பெருமானுக்கு சஷ்டியின் போதும் பக்தர்கள் திரளாக வந்து ஆராதனைகளில் பங்குபெறுகின்றனர். துர்க்கை அம்மனுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், ராகு கால நேரத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. சித்ரா பவுர்ணமி அன்று ஆலயம் விழாக்கோலம் பூண்டிருக்கும். அன்று காவேரியில் இருந்து 100–க்கும் மேற்பட்டோர் பால் குடம், தீர்த்த குடம், காவடிகளுடன் அன்னையின் சன்னிதிக்கு வருவார்கள். இரவு அன்னைக்கு பால் அபிஷேகம் உள்பட பல அபிஷேக ஆராதனைகள் நடந்து, அன்னைக்கு வெள்ளி அங்கி சாத்துவார்கள். அன்று இரவு நடைபெறும் அன்னதானத்தில் சுமார் 1500 பேர் கலந்து கொள்வார்கள். ஆடி வெள்ளிக்கிழமைகளில் தையல்நாயகி அம்மனுக்கு நடக்கும் விசேஷ ஆராதனைகளில் நிறைய பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அன்னையை தினமும் விதம் விதமாக அலங்கரிப்பார்கள். பவுர்ணமி நாட்களில் மாலையில் அன்னையின் சன்னிதியில் நடைபெறும் கும்ப பூஜை இங்கு மிகவும் பிரபலம். மூன்று கலசம் அமைத்து, அதில் மஞ்சள் கலந்த நீரை நிரப்பி பூஜை செய்வார்கள். நேர்த்திக் கடன் பிரார்த்தனைகள்உடல் தோல் நோய்கள் நீங்க, ஆலயத்தின் மகாமண்டபத்தில் உள்ள தனி இடத்தில் பக்தர்கள் உப்பு, மிளகு காணிக்கை செலுத்துகின்றனர். உடம்பில் கட்டி ஏதாவது வந்தால், அன்னைக்கு வெல்லக் கட்டிகளை காணிக்கை செலுத்துகின்றனர். குழந்தை பேறு வேண்டுவோர் நாகம்மா சன்னிதியில் இருக்கும், அரச மரத்தில் தொட்டில் கட்ட அவர்கள் பிரார்த்தனை நிறைவேறுகிறதாம். திருமணத்தடை உள்ளவர்கள் அன்னைக்கு அபிஷேகம் செய்து தாலி காணிக்கை செலுத்துகின்றனர். தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் அன்னைக்கு புடவை வாங்கி சாத்தி தங்கள் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றனர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia