கூச முனிசாமி வீரப்பன் (Koose Munisamy Veerappan) என்பது ஜெயச்சந்திர அசுமி, பிரபாவதி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஜீ5[1] இன் 2023 ஆம் ஆண்டு இந்திய தமிழ் மொழி உண்மை குற்ற ஆவணப்படமாகும். இதை சரத் ஜோதி இயக்க, பிரபாவதி ஆர்வி தயாரித்துள்ளார். இது 14 திசம்பர் 2023 அன்று திரையிடப்பட்டது. [2][3][4]நக்கீரன் கோபாலால் படம்பிடிக்கப்பட்டு நக்கீரன் இதழால் காப்பகப்படுத்தப்பட்ட காட்சிகளைப் பயன்படுத்தி இந்தத் தொடர் வீரப்பனின் வாழ்க்கையை ஆராய்கிறது.
பருந்துப் பார்வை
இந்தத் தொடர் பிரபல வேட்டைக்காரரும், குற்றவாளியுமான வீரப்பனின் வாழ்க்கையை ஆராய்கிறது. மேலும் வீரப்பனின் கதையின் சில பகுதிகளுடன், சில உண்மை வாழ்க்கை காட்சிகளையும் கொண்டுள்ளது. [5][6]
இந்தத் தொடரின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் தன் அதிகாரப்பூர்வ அறிக்கையில், "வீரப்பனுடன் நேர்காணலை எடுப்பதற்கு நாங்கள் பெரும் முயற்சிகளையும், குறிப்பிடத்தக்க இடர்பாடுகளையும் எதிர்கொண்டோம். முதல் முறையாக, இந்த நேர்காணலின் விரிவான பதிப்பை ஆவணப்படமாக வெளியிடப்படுகிறது. கூச முனிசாமி வீரப்பன் என்ற பெயரில் ஜீ மேலதிக ஊடக சேவை தளத்தில் பார்வையாளர்களின் காட்சிக்கு வருகிறது." [7]
வீரப்பன் தன் உண்மையான தோற்றத்தைக் காட்டுகிறார். அவர் தனது குடும்பப் பின்னணி மற்றும் குற்ற உலகில் தனது பயணம் பற்றி பேசுகிறார். எது அவரை துப்பாக்கியை ஏந்தவைத்து பயமுறுத்தும் கொள்ளைக்காரனாக மாற்றியது என்பது குறித்து விவரிக்கிறார்.
வீரப்பன் தேடப்படும் வேட்டைக்காரனாகவும், கடத்தல்காரனாகவும், கொலைகாரனாகவும் மாறுகிறார். விரைவில், வனத்துறை அதிகாரி சீனிவாசன் வித்தியாசமான திட்டங்களுடன் இவரது வாழ்க்கையில் நுழைகிறார்.
வீரப்பனால் காயமடைந்த அதிகாரிகள் அவரை வீழ்த்த முடிவு செய்கின்றனர். வீரப்பனுக்கு எதிராக திறமையான அதிகாரிகள் போர் தொடுக்கின்றனர். ஆனால் வீரப்பன் தனது படையுடன் அவர்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார். அவர்கள் வெற்றி பெற்றார்களா?
எப்படியும் வீரப்பனை வேட்டையாடி பிடித்தே ஆகிவேண்டும் என்று உறுதியான அதிகாரிகளைக் கொண்ட பெரும் படையை காவல்துறை உருவாக்குகிறது. வேட்டையில் என்ன நடந்தது என்ன?
பல சுற்றுப் போர் நடந்த போதிலும், வீரப்பன் வெல்ல முடியாதவராகவே இருக்கிறார். காட்டில் இருந்து அவராகவே வெளியேற வைப்பதுதான் அவரைப் பிடிக்கும் ஒரே வழியா? வீரப்பனின் அடுத்த நிலை என்ன?
தொடரின் முன்னோட்டம் 23 நவம்பர் 2023 அன்று வெளியிடப்பட்டது. [8][9]
"கூச முனிசாமி வீரப்பன்" முதலில் ஜீ5 இல் 8 திசம்பர் 2023 அன்று திரையிட திட்டமிடப்பட்டது. ஆனால் சென்னையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக வெளியீடு திசம்பர் 14ஆம் நாளுக்கு தள்ளி வைக்கப்பட்டது. [10] இந்தத் தொடர் இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் பார்க்கக் கிடைக்கும்.
வரவேற்பு
"கூச முனிசாமி வீரப்பன்" பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. தி நியூ இந்தியன் எக்சுபிரசு இந்தத் தொடர் "முக்கியமான எதிர் நாயகனின் கதையில் விருவிருப்பான தொடர் கோவை" என்று கருத்து தெரிவித்தது. [11]சவுத் ஃபர்ஸ்ட் வெளியிட விமர்சனத்தில், "உண்மையை அறிய வேண்டுமானால், கூச முனிசாமி வீரப்பன் ஆவணப்படத்தை பார்வையாளர்கள் தவறவிடக்கூடாது." [12] என்.டி.வி. (இந்தியா) இதற்கு 5 நட்சத்திரங்களில் 3 மதிப்பெண்களை அளித்து, பார்க்க வேண்டிய தொடர் என்று அழைத்தது. [13]