சுதந்திரச்சங்கு (இதழ்)
வரலாறு1930களின் ஆரம்ப வருடங்களில், காலணா விலையுள்ள வாரப் பத்திரிகையாக சுதந்திரச்சங்கு வளர்ந்தது. காந்திய இலட்சியத்துடன், இந்திய விடுதலைப் போராட்டத்தில், சங்கு தீவிரமான பங்கு ஆற்றியது. விறுவிறுப்பும் வேகமும் நிறைந்த கட்டுரைகள் இதில் வந்தன. அதன் விளைவாக, பிரித்தானிய ஆட்சியின் அடக்குமுறைக்கு இது இலக்காயிற்று. பின்னர், 1932இல் ‘சுதந்திரச் சங்கு‘ மீண்டும் தோன்றியது. “தமிழ்த் தொண்டுதான் சங்குக்கு மூச்சு” என்று அறிவித்து வளர்ந்த இது மாதம் இருமுறை இதழாக வெளிவந்தது. தி. ஜ. ரங்கநாதன் இதன் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். சமூகப் பிரச்னைகள் பற்றிய கட்டுரைகள், சிந்தனைகள், ‘சங்கு‘ வில் இடம் பெற்றிருந்தன. வ. ரா., ந. பிச்சமூர்த்தி, கு. ப. ராஜகோபாலன், சிட்டி ஆகியோர் இதில் தொடர்ந்து எழுதியிருக்கிறார்கள். புதுமைப்பித்தனின் ஆரம்பகாலக் கதைகள் சிலவும் இதில் இடம் பெற்றுள்ளன. சி. சு. செல்லப்பாவின் கதை ‘சுதந்திரச் சங்கு‘வில்தான் பிரசுரமாயிற்று. அதன் பிறகு அவ்வப்போது அவர் அதில் கதை எழுதியுள்ளார். ‘சுதந்திரச் சங்கு‘ பத்திரிகையில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது அதன் ஆசிரியர் பக்கம் ஆகும். சங்கு ஆசிரியர் புதிய எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளித்து உற்சாகம் ஊட்டினார். திறமையைக் கண்ட இடத்து, அதை வரவேற்றுப் பாராட்டி அதன் வளர்ச்சிக்கு உதவும் வகையில் யோசனைகள் கூறி ஆதரித்தார். தமிழ்ச் சிறுகதைகளின் வளர்ச்சிக்கான ஆலோசனைகள், உரைநடை பற்றிய கருத்துக்கள், கட்டுரை சம்பந்தமான சிந்தனைகள் - இப்படிப் பலவகைகளிலும் பயனுள்ள விஷயங்களை ஆசிரியர் பக்கம் எடுத்துச் சொன்னது. சங்கு சுப்பிரமணியமும் தி. ஜ. ர. வும் இத்தகைய எண்ணங்களை எழுதி வழிகாட்டியிருக்கிறார்கள்.[1] இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன. உசாத்துணைகள்மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia