1993 ஆர். எஸ். எஸ் அலுவலக குண்டு வெடிப்பு என்பது சென்னையில் உள்ள தமிழக ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்க அலுவலகத்தில் 1993 ஆகத்து 8 அன்று நடந்த குண்டு வெடிப்பை குறிக்கிறது. இந்த குண்டு வெடிப்பில் 11 பேர் இறந்தனர் மற்றும் 7 பேர் காயமுற்றனர். இது சம்பந்தமாக அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா, ஜிகாத் கமிட்டி நிறுவனர் பழனி பாபா, இமாம் அலி உட்பட 18 பேர் மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தற்போது இல்லாத தடா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டியது.[1] வழக்கு விசாரணையில் 224 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.[2] விசாரணை நடைபெற்ற காலத்திலேயே 1997 இல் பழனி பாபாவும், 2002 இல் இமாம் அலியும் இறந்தனர். குற்றம் சாட்டப்பட்ட 11 நபர்களுக்கு 2007 ஆம் ஆண்டு ஜூன் 21 இல் தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனையை விதித்தது.[3] பின்னர் உச்சநீதிமன்றம் மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை இரத்து செய்து விடுவித்தது.[4] தலைமறைவாக இருந்த முஷ்டாக் அகமது 24 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்டோர்
குமரி பாலன், காசிநாதன், ராமசுப்பிரமணியன், ராமகிருஷ்ணரெட்டி, ராஜேந்திரன், சேஷாத்ரி, தேசிகன், பிரேம்குமார், மோகனா, லலிதா, ரவீந்திரன் ஆகிய பதினொரு நபர்கள் இறந்தனர்.[5]
வழக்கு விசாரணை
இந்த குண்டு வெடிப்பு வழக்கை நடுவண் புலனாய்வுச் செயலகம் விசாரணை செய்து வருகிறது. இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையதாகக் கருதப்படும் முக்கியக் குற்றவாளி முஸ்தாக் அகமதுவை சி பி ஐ அதிகாரிகள் 24 ஆண்டுகள் கழித்து 5 சனவரி 2018 அன்று கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளனர்.[6][7]