திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள்![]() திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள் என்னும் தலைப்பின் கீழ், கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக 2013, மார்ச்சு 13ஆம் நாள் பொறுப்பேற்ற திருத்தந்தை பிரான்சிசு வத்திக்கான், இத்தாலி மற்றும் வெளிநாடுகளுக்குத் திருப்பயணியாகச் சென்று, தமது சமயப்பணியை ஆற்றிட மேற்கொண்ட முக்கிய பயணங்கள் தரப்படுகின்றன. பயணப் பட்டியல்
திருத்தந்தை பிரான்சிசின் இலங்கைப் பயணம் (சனவரி 13-15, 2015) பற்றி சில தகவல்கள்2013, மார்ச்சு 13ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிசு 1.2 பில்லியன் மக்களைக் கொண்ட கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகப் பொறுப்பேற்றார். உலகின் எல்லாப் பகுதிகளிலும் பரவியிருக்கின்ற கத்தோலிக்க திருச்சபையின் மக்களை நேரில் சந்தித்து உரையாட அவர் பல பயணங்களை மேற்கொண்டார். 2013-2014 ஆண்டுகளில் அவர் பன்னாட்டுப் பயணம் சென்ற நாடுகளுள் கீழ்வருவன அடங்கும்: பிரேசில், நடு ஆசியா (இசுரயேல், யோர்தான், பாலத்தீனம்), தென் கொரியா, அல்பேனியா, பிரான்சு, துருக்கி. 2015ஆம் ஆண்டு அவர் மேற்கொண்ட முதல் பன்னாட்டுப் பயணம் இலங்கை, பிலிப்பீன்சு ஆகிய இரு ஆசிய நாடுகளுக்கு ஆகும். இந்த ஆசியப் பயணத்தில் இலங்கையும் உள்ளடங்கியிருப்பது சிறப்பு. திருத்தந்தை ஒருவர் இலங்கைக்குப் பயணமாகச் செல்வது இது மூன்றாவது தடவை ஆகும். முதலில் திருத்தந்தை ஆறாம் பவுல் 1970இல் இலங்கை சென்றார். அப்போது அங்கே அவர் தங்கியது இரண்டு மணி நேரமே மட்டுமே. 1995இல் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இலங்கை சென்றார். அவ்வமயம் அவர் அங்கே ஒரு நாள் முழுதும் செலவிட்டார். ஆனால் இப்போது திருப்பயணியாக இலங்கை செல்கின்ற திருத்தந்தை பிரான்சிசு அங்கே மூன்று நாள்கள் (சனவரி 13-15, 2015) தங்குவது சிறப்பு. இலங்கையில் கிறித்தவம்21 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கையில் 72% மக்கள் பவுத்தமதத்தைச் சார்ந்தவர்கள். 12% இந்துக்கள்; 9% முசுலிம்கள்; சுமார் 7% கிறித்தவர்கள் (சுமார் 6.1% கத்தோலிக்கர்; 1.3% பிற கிறித்தவர்கள்). 1.2 மில்லியன் கத்தோலிக்க மக்கள் 12 மறைமாவட்டங்களில் ஆயர்களின் ஆளுகைக்குள் அமைவர். கொழும்பு மட்டுமே உயர் மறைமாவட்டம். அதன் தலைவர் கர்தினால் மால்கம் ரஞ்சித். கத்தோலிக்கர் எண்ணிக்கை கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்கிளப்பு, மன்னார், திருக்கோணமலை போன்ற மறைமாவட்டங்களில் கணிசமாக உள்ளது. கத்தோலிக்கர் நடுவே பல இன்னல்களுக்கு நடுவே உழைத்தவர்களுள் தலைசிறந்தவராகக் கருதப்படுபவர் அருளாளர் யோசேப்பு வாஸ் என்னும் குரு. இவர் இந்தியாவின் கோவாவிலிருந்து இலங்கை சென்று, தமிழ் மக்கள் நடுவிலும் சிங்கள மக்கள் நடுவிலும் பணிபுரிந்தார். 17ஆம் நூற்றாண்டில் இலங்கையில் கால்வினிய சபை சார்ந்த டச்சு நாட்டவர் குடியேற்ற ஆதிக்க ஆட்சி நடத்திய காலத்தில் கத்தோலிக்கர் துன்புற்றனர். அவர்களுக்குப் பணிசெய்வதில் யோசேப்பு வாஸ் (1651-1711) ஈடுபட்டார். அவருடைய பக்தி வாழ்வையும் பணியையும் போற்றும் வகையில் அவருக்கு அருளாளர் பட்டத்தைத் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 1995இல் தமது இலங்கைப் பயணத்தின் போது வழங்கினார். இருபது ஆண்டுகளுக்குப் பின், இலங்கைக்குப் பயணமாக வருகின்ற திருத்தந்தை பிரான்சிசு யோசேப்பு வாசுக்குப் புனிதர் பட்டம் வழங்குகிறார் (சனவரி 14, 2015). விமான நிலையத்தில் வரவேற்புதிருத்தந்தை பிரான்சிசுக்கு கொழும்பு பன்னாட்டு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் மகிந்த ராஜபக்சே ஆட்சி முடிவுற்று புதிய அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா பதவியேற்ற சில நாள்களில் திருத்தந்தையின் வருகை நிகழ்ந்ததால் அவரை வரவேற்க புதிய அதிபர் சிறீசேனா விமான நிலையம் வந்திருந்தார். மேள தாளம் முழங்க, நடனக்காரர்கள் அசைய, வண்ணங்கள் நிறைந்த கம்பளிகளால் அலங்கரிக்கப்பட்ட 40 யானைகள் எழிலுற அணிவகுத்து நிற்க, திருத்தந்தை பிரான்சிசுகு வரவேற்பு அளிக்கப்பட்டது. இளைஞர்கள் பாடல் குழு ஆங்கிலம், இத்தாலியம், சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் வரவேற்புப் பாடல் எழுப்பியது. இராணுவ மரியாதை அளிக்கும் வகையில் 21 வேட்டுகள் வெடிக்கப்பட்டன. ஊர்வலம்வழக்கமான குண்டுதுளைக்காத வாகனம் தமக்கு வேண்டாம் என்று திருத்தந்தை பிரான்சிசு கூறிவிட்டதால் அவர் திறந்த வாகனத்திலேயே பயணம் செய்து ஊர்வலமாக வந்தார். மக்கள் கூட்டம் வழிநெடுக வெள்ளையும் மஞ்சளும் இணைந்த வத்திக்கான் கொடிகளையும் இலங்கைக் கொடிகளையும் அசைத்தவாறு அவருக்கு வரவேற்பு அளித்தனர். 20 கிலோமீட்டர் தொலை இவ்வாறே கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திருத்தந்தை பயணம் சென்றார். அமைதித் தூதுவிமான நிலையத்தில் இறங்கிய நேரத்திலிருந்தே திருத்தந்தை பிரான்சிசு தமது பயணத்தின் குறிக்கோள்களை எடுத்துக் கூறினார். தாம் இலங்கை நாட்டுக்கு அமைதியின் தூதுவனாக வருவதாக அவர் கூறினார். இந்தியப் பெருங்கடலின் முத்துப் போல விளங்குகின்றது இலங்கைத் தீவு என்று அவர் புகழ்ந்தார். “ஒரு பயங்கரவாதப் போராட்டத்தை முறியடித்தபிறகு எமது அரசு எல்லா மக்களிடையேயும் அமைதியையும் நட்பையும் வளர்ப்பதில் ஈடுபட்டுள்ளது” என்று அதிபர் சிறீசேனா கூறினார். திருத்தந்தை வழங்கிய வாழ்த்துரைஆங்கிலத்தில் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிசு கூறியது கீழே தமிழில் தரப்படுகிறது: “எழில்மிகு இலங்கைத் தீவு இந்தியப் பெருங்கடலின் முத்து என்று அறியப்படுகிறது. அதைவிடவும் மேலாக இங்கு வாழ்கின்ற மக்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். கலாச்சார, சமயச் செல்வங்கள் இங்கு ஏராளமாகவே உள்ளன. இங்கு நான் ஒரு திருப்பணியாளனாக வருகிறேன். கத்தோலிக்க திருச்சபையின் உலகளாவிய தலைவர் என்ற முறையில் இங்கு வாழ்கின்ற கத்தோலிக்க மக்களை சந்தித்து அவர்களுக்கு ஊக்கமூட்ட வருகிறேன். எனது பயணத்தின் ஒரு சிறப்பு நிகழ்வு அருளாளர் யோசேப்பு வாசுக்குப் புனிதர் பட்டம் வழங்குகின்ற கொண்டாட்டம் ஆகும். அவர் கிறித்தவ நற்பண்புகள் கொண்டவராக, சமய இன வேறுபாடு பாராட்டாமல் எல்லா மனிதரையும் சமமாக ஏற்று மதித்தார். அவர் காட்டிய முன்மாதிரிகை நமக்கு இன்றும் பொருந்தும். மேலும் கத்தோலிக்க திருச்சபை, இலங்கையில் வாழ்கின்ற அனைத்து மக்கள் மட்டிலும் அன்பும் மரியாதையும் கொண்டுள்ளது என்பதற்கும் எனது வருகை ஓர் அடையாளமாக உள்ளது. இலங்கை நாட்டு சமூகத்தில் கத்தோலிக்க திருச்சபையும் பங்கேற்க விரும்புவதையும் காட்டுகிறது.” “நாம் வாழும் உலகில் எத்தனையோ மக்கள் குழுக்கள் தமக்குள்ளேயே போர்ச்செயல்களில் ஈடுபட்டுள்ளன என்பது துயரமான ஓர் உண்மை. கடந்தகால, சமகால வேறுபாடுகளையும் கருத்து வேற்றுமைகளையும் களைந்து, தமக்குள்ளே நல்லுறவுகளை ஏற்படுத்த இயலாத நிலையில் இனம், சமயம் சார்ந்த இழுபறி நிலைகள் ஏற்பட்டு, சில வேளைகளில் வன்முறை மோதல்களும் நிகழ்ந்துவிடுகின்றன. இலங்கையில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நிகழ்ந்தது. அதன்பிறகு அமைதியை மீண்டும் கொணர்வதற்கும், போரினால் விளைந்த காயங்களைக் குணப்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த கால அநீதிகளையும் போரின் விளைவாக எழுந்த பகைமை, வெறுப்பு போன்றவற்றையும் களைந்துவிடுவது எளிதன்று. நன்மை செய்வதன் வழியாக(காண்க: உரோமையர் 12:21), அமைதி, நல்லுறவு, ஒத்துழைப்பு ஆகிய நற்பண்புகளைச் செயல்படுத்துவதன் வழியாக மட்டுமே இது சாத்தியமாகும்.” “நல்லிணக்கமும் நல்லுறவும் உருவாக வேண்டும் என்றால் உண்மையை அறிகின்ற முயற்சியும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதனால் பழைய காயங்களை மீண்டும் திறக்க வேண்டும் என்று பொருளாகாது, மாறாக உண்மை வெளிவந்தால் மட்டுமே உண்மையான நீதியும், ஒன்றிப்பும், நலமும் மீண்டும் நிலைபெறும்.” “அன்பு நண்பர்களே, இலங்கையில் நடைபெறுகின்ற நல்லிணக்க உருவாக்க முயற்சியிலும், அமைதிநிலவும் சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியிலும் பல மதங்கள் ஈடுபட்டுள்ளன. அவை தம் பணிகளை இன்னும் மேம்படுத்த வேண்டும். மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படவேண்டும் என்றால் எல்லாரும் இணைந்து ஒத்துழைக்க வேண்டும். அனைவரின் குரலும் கேட்க வேண்டும். அனைவரும் தங்கள் விருப்புகள், கவலைகள், தேவைகள், பயங்கள் போன்றவற்றை எடுத்துக் கூற வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். முக்கியமாக, அவர்கள் ஒருவர் ஒருவரை ஏற்றுக்கொள்ளும் மனநிலை பெற வேண்டும். தமக்குள்ளே நிலவுகின்ற நியாயமான வேறுபாடுளை மதிக்க வேண்டும். இவ்வாறு ஒரே குடும்பமாக வாழ்ந்திடக் கற்றுக்கொள்ள வேண்டும். பணிவோடும் திறந்த மனத்தோடும் ஒருவர் ஒருவருக்குச் செவிமடுக்கும்போது அவர்களது பொது எதிர்பார்ப்புகளும் மதிப்பீடுகளும் இன்னும் அதிகத் தெளிவாகத் துலங்கும். வேற்றுமை என்பது அஞ்சத்தக்கதாகத் தோன்றாது, மாறாக, அனைவரின் வளர்ச்சிக்கும் ஒரு தூண்டுகோலாக அமையும். இவ்வாறு, நீதி, ஒன்றிப்பு, சமூக நல்லுறவு ஆகியவற்றை அடைகின்ற வழிமுறையும் தெளிவாகத் தெரியும்.” “இந்த நாட்டில் நிகழ்கின்ற மறுசீரமைப்பு மக்களது வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்படுகின்ற கட்டுமானப் பணிகள், உடல்சார் தேவைகள் ஆகியவற்றை மட்டுமே சார்ந்ததன்று. அதற்கும் மேலாக, மனித மாண்பை மேம்படுத்தல், மனித உரிமைகளை மதித்தல், ஒவ்வொருவரையும் சமூகத்தில் முழுமையாகச் சேர்த்துக்கொள்ளுதல் போன்றவை செயலாக்கம் பெற வேண்டும். இலங்கையின் அரசியல், சமய, கலாச்சார அமைப்புகளும் தலைவர்களும் தமது சொற்களாலும் செயல்களாலும் இலங்கைவாழ் மக்கள் அனைவருக்கும் நன்மை விளையவும் நலம் ஏற்படவும் உழைப்பதாக இருந்தால் இங்கு பொருள்வளம் மட்டுமன்று, அருள்வளமும் பெருகிப் பலுகும்.” “அதிபர் அவர்களே, நண்பர்களே, நீங்கள் எனக்கு அளித்த வரவேற்புக்கு மீண்டும் நன்றுகூறுகிறேன். உங்களோடு நான் செலவிடப்போகின்ற இந்நாட்கள் நம்மிடைய நட்பையும் உரையாடலையும் ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும். இலங்கை நாட்டின்மீது இறை ஆசி நிறைவாகப் பொழியப்பட வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன். இந்தியப் பெருங்கடலின் முத்தாக விளங்குகின்ற இந்த எழில்மிகு நாடு மக்களுக்கு வளமையையும் அமைதியையும் கொணர வேண்டும் என்று உளமார வாழ்த்துகின்றேன்.”[19] அருளாளர் யோசேப் வாசுக்குப் புனிதர் பட்டம் வழங்கப்படுதல்2015 சனவரி 14 அன்று திருத்தந்தை பிரான்சிசு கொழும்பில் காலிமுகத் திடலில் (Galle Face Green) வைத்து அருளாளர் யோசேப் வாசைப் புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.[20] யோசேப் வாசு 1651, ஏப்ரல் 21ஆம் நாள் இந்தியாவின் கோவாவில் பக்திநிறைந்த கத்தோலிக்கப் பெற்றோருக்குக் குழந்தையாகப் பிறந்தார். அப்போது கோவா போர்த்துகீசியரின் குடியேற்ற ஆதிக்கத்தில் இருந்தது. யோசேப் வாசு கோவா மறைமாவட்டத்தின் குருவாக 1676இல் திருநிலைப்படுத்தப்பட்டார். கோவாவில் “புனித பிலிப்பு நேரியின் மன்றாட்டுக் குழு” (Oratory of St. Philip Neri) என்னும் குழுமத்தை உருவாக்கி, கிறித்துவின் நற்செய்தியை மிகுந்த ஆர்வத்தோடு அறிவிக்கத் தொடங்கினார். இலங்கையில் கத்தோலிக்க மக்கள் கால்வினிய புரட்டஸ்தாந்து குழுவைச் சார்ந்த குடியேற்ற ஆதிக்கத்தவரான டச்சுக்காரர்களால் துன்புறுத்தப்படுகிறார்கள் என்றும், அவர்களுக்கு ஆன்மிக உதவி தேவைப்படுகிறது என்றும் அறிந்த யோசேப் வாசு உடனேயே கோவாவிலிருந்து இலங்கைக்குப் புறப்பட்டார். ஆனால் கத்தோலிக்க மறைப்பணியாளர்கள் நாட்டில் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்ததால் யோசேப் வாசு ஓர் ஏழைத் தொழிலாளியாகத் தம்மை மாற்றிக்கொண்டு அந்த வேடத்தில் இலங்கைக்குள் நுழைந்து, அங்கு தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் நடுவே கத்தோலிக்க நம்பிக்கையை உறுதிப்படுத்தினார். அவர் நோயாளருக்குச் செய்த சேவையைப் பாராட்டி, கண்டி அரசர் அவருக்குப் பாதுகாப்புக் கொடுத்தார். சுமார் 24 ஆண்டுகள் இலங்கையில் பணிபுரிந்த யோசேப் வாசு தமிழிலும் சிங்களத்திலும் பல கத்தோலிக்க மன்றாட்டு நூல்களை எழுதினார். மக்கள் பணியிலும் இறைவன் பணியிலும் தம் வாழ்க்கையைச் செலவிட்ட யோசேப் வாசு கண்டியில் 1711, சனவரி 16ஆம் நாள் உயிர் நீத்தார். அவருக்குத் திருத்தந்தை யோவான் பவுல் தமது இலங்கைப் பயணத்தின்போது 1995, சனவரி 21ஆம் நாள் அருளாளர் பட்டம் வழங்கினார். புனிதர் பட்ட நிகழ்ச்சிதிருத்தந்தை பிரான்சிசு அருளாளர் யோசேப்பு வாசுக்குப் புனிதர் பட்டம் அளித்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தது. ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இந்நிகழ்ச்சிக்காக காலிமுகத் திடலில் கூடியிருந்தனர். திருத்தந்தை பிரான்சிசு சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்குத் திறந்த ஊர்தியில் வந்தார். வழியில் அவ்வப்போது குழந்தைகளை ஆசிர்வதித்தார். ஊர்தியிலிருந்து கீழே இறங்கி, சக்கர வண்டிகளில் இருந்த ஊனமுற்றோரைத் தொட்டு ஆசிர்வதித்தார். ஒரு வயதுமுதிர்ந்த பெண்மணி அவருடைய கையில் ஒரு சிறிய தாளைத் திணித்தார். அதைப் பெற்றுக்கொண்ட திருத்தந்தை அதைத் தம் துணைவர் ஒருவரிடம் கொடுத்தார். திருத்தந்தை வருகைதந்த வேளையில் வரவேற்புப் பாடலும் நடனமும் தமிழிலும் சிங்களத்திலும் நிகழ்ந்தது. பின்னர் திருப்பலி தொடங்கியது. திருத்தந்தை ஆங்கிலத்திலும் இலத்தீனிலுமாக திருப்பலி செபங்களை மொழிந்தார். அவருடைய மறையுரை ஆங்கிலத்தில் வழங்கப்பட்டாலும், அதன் மொழிபெயர்ப்பு சிங்களத்திலும் தமிழிலும் வழங்கப்பட்டன. திருப்பலியின் தொடக்கத்தில் ”தூய ஆவியே எழுந்தருளி வாரும்” என்ற பாடலும், தொடர்ந்து புனிதர் பிரார்த்தனையில் இலத்தீன் மொழியில் பாடப்பட்டன. பின் திருத்தந்தை பிரான்சிசு, யோசேப் வாஸ் அவர்களைப் புனிதர் நிலைக்கு உயர்த்தி, புனிதர் வரிசையில் சேர்ப்பதாக அறிவித்தார். உடனே கோவில் மணிகள் முழங்கின. “என்னையே முழுவதும் உன்னிடம் தருகின்றேன்” என்ற தமிழ்ப் பாடல் காணிக்கைப் பாடலாக, பல்லிசை அமைப்பில் இசைக்கப்பட்டது. திருத்தந்தை ஆற்றிய மறையுரைதிருத்தந்தை ஆற்றிய மறையுரையின் சில பகுதிகள்: ”அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே, இன்று நாம் ஜோசப் வாஸ் அவர்களின் புனிதர்பட்ட நிகழ்வை, பெருவிழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றோம். உலகின் எல்லைவரை வெளிப்படும் தமது அன்பையும், இரக்கத்தையும் பற்றிய இறைவிருப்பத்தை, இந்தத் திருப்பலி வாசகங்கள் எடுத்துரைக்கின்றன. தாம் அனுப்பிய திருமகனும், நம் ஆண்டவருமான இயேசு கிறிஸ்து, நற்செய்தியை அனைத்துலகிற்கும் அறிவிக்க தேர்ந்தெடுத்தத் திருத்தூதர்கள் வழியாக, ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ற மறைபரப்புப் பணியாளர்கள் வழியாக, இறைவன் தன் அன்பை வெளிப்படுத்தினார். இலங்கை மக்கள்பால் இறைவன் கொண்டுள்ள அன்பின் வல்லமைமிக்க அடையாளத்தை புனித ஜோசப் வாஸ் அவர்களில் நாம் காண்கிறோம். அத்துடன், நற்செய்திக்குப் பிரமாணிக்கமாக இருக்கவும், புனிதத்துவத்தில் வளர்ந்திடவும், மன்னிப்பு, இரக்கம், நட்புறவு எனும் கிறிஸ்துவின் செய்திக்கு சாட்சிகளாய் திகழவும் கிடைத்த ஓர் அழைப்பாகவும் காண்கிறோம். புனித ஜோசப் வாஸ் அவர்கள், நமக்கு ஒரு முன் உதாரணமாகத் திகழ்கின்றார். மூன்று காரணங்களை இவண் குறிப்பிடலாம்: முதலாவதாக, அவர் ஓர் எடுத்துக்காட்டான குருவாகத் திகழ்ந்தார். இறைவனுக்கும், அயலவருக்குமான பணிக்கு அர்ப்பணிப்பு என்பதன் பொருளை புனித ஜோசப் வாஸ் அவர்கள் நமக்குக் கற்றுத் தருகிறார். அவரைப் போல நாமும் இறைவேண்டலில் ஈடுபடுகின்ற மக்களாக, அனைவருக்கும் கிறித்துவை அறிவித்து அவர்களை அன்புசெய்வோராக மாறிடவேண்டும். அவர் நற்செய்திக்காகத் துன்புற்றார்; மனமுவந்து மறைபணி ஆற்றினார்; மக்கள்பால் அன்பும் பரிவும் காட்டினர். இவ்வாறு அவர் நமக்கு எடுத்துக்காட்டாக உள்ளார். இரண்டாவதாக, பிறர் எந்த இனத்தவர், சமயத்தவர், சமூக நிலையினர் என்று வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் நாம் அன்புசெய்ய வேண்டும் என்பதை புனித ஜோசப் வாஸ் நமக்குக் காட்டுகிறார். இன்றும் கூட, புனிதரின் எடுத்துக்காட்டானது இலங்கைத் திருச்சபையின் கல்வி, சுகாதார நிறுவனங்கள் மற்றும் இரக்கச் செயல்பாடுகள் வழியே தொடர்கின்றது. அனைத்து மக்களும் உண்மையை அறிந்திடவும், வெளிப்படையாக தமது மத நம்பிக்கைகளை வெளிப்படுத்தவும் சுதந்திரம் கொண்டவர்களாக இருக்கவேண்டும். நம் இறைவழிபாடு உண்மையில் ஊன்றியிருக்கும்போது, அது இனப் பாகுபாடு, வெறுப்பு, வன்முறை ஆகியவற்றை விளைவிக்காது, மாறாக, மனித உயிரின் புனிதத் தன்மை, மற்றவரின் மாண்பு, சுதந்திரம் மட்டில் மரியாதை, பொது நலனிற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை அது விளைவிக்கும் என்பதை புனித ஜோசப் வாஸ் அவர்களின் வாழ்வு நமக்குச் சொல்லித்தருகிறது. இறுதியாக, புனித ஜோசப் வாஸ் அவர்கள், கிறித்தவ நம்பிக்கையைப் பிறரோடு பகிர்ந்துகொள்கின்ற ஆர்வத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார். பல்வேறு மதச் சூழலில், அர்ப்பணிப்பு, தளரா முயற்சி மற்றும் தாழ்ச்சியுடன், நற்செய்தியின் உண்மையையும், அழகையும் எவ்வாறு எடுத்துரைப்பது என்பதை அவர் அறிந்திருந்தார். இத்தகைய அணுகுமுறை, இயேசுவின் இந்நாள் சீடர்களுக்கும் பொருந்தும். புனித ஜோசப் வாஸ் அவரக்ளைப் பின்பற்றி, இந்நாட்டின் கிறிஸ்தவ மக்கள் விசுவாசத்தில் உறுதிப்படுத்தப்படவும், இலங்கை சமூகத்திலே சமாதானம், நீதி மற்றும் ஒப்புரவுக்காக தங்கள் மேலான பங்களிப்பை வழங்கிடவும் நான் இறைவனை வேண்டுகிறேன். உங்கள் அனைவரையும் எமது புதிய புனிதரின் வேண்டுதல்களுக்குக் கையளிக்கும் அதேவேளையில், எனக்காக மன்றாடும்படி உங்களை வேண்டி நிற்கின்றேன்.” சமய சுதந்திரம் பற்றிய வரலாற்று ஏடுதிருப்பலியின் இறுதியில், கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் எழுபதாயிரம் டாலரை, திருத்தந்தையின் பிறரன்புப் பணிக்கென அவரிடம் கொடுத்தார். எங்கள் நாடு ஏழை நாடு, ஆயினும் திருத்தந்தையின் பிறரன்புப் பணிக்கு உதவ விரும்புகிறோம் என்று சொல்லி, அந்த அன்பளிப்பை வழங்கினார். திருத்தந்தையும், 17ம் நூற்றாண்டில் கண்டி மன்னர் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கே, இலங்கைத் திருச்சபைக்கு வழங்கிய ஆவணத்தின் பிரதியை இலங்கைத் தலத்திருச்சபைக்குப் பரிசாகக் கொடுத்தார். பெரும்பாலான சிங்கள மக்கள் மத்தியில் கிறிஸ்தவர்களாக விரும்புவர்களுக்கு அனுமதி அளிக்கும் அந்த ஆவணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது.[21] திருத்தந்தை பிரான்சிசு மடுமாதா கோவிலைச் சந்தித்தல்திருத்தந்தை பிரான்சிசின் இலங்கைப் பயணத்தின் ஒரு முக்கிய கட்டம் அவர் மன்னார் மறைமாவட்டத்தில், காட்டுப் பகுதியில் அமைந்துள்ள புகழ்மிக்க மடுமாதா கோவிலுக்குச் சென்று, மக்களை சந்தித்து அன்னை மரியாவிடம் வேண்டுதல் நடத்திய நிகழ்ச்சி ஆகும்.[22] 2015, சனவரி 14ஆம் நாள் பிற்பகுதியில் திருத்தந்தை பிரான்சிசு மடு நகரில் தூய செபமாலை அன்னை ஆலயத்திற்குப் பவனியாக வந்தார். சுமார் 20 நிமிடங்கள் நீடித்த அந்தப் பவனியின்போது அவர் திறந்த ஊர்தியில் வந்துகொண்டிருக்க, மேள தாளம் ஒலிக்க, நாதசுரம் தமிழ்ப் பாணியில் இசைக்கப்பட்டது. சக்கர வண்டியில் அமர்ந்திருந்தோரை சந்தித்தார். வழியில் மக்களோடு கலந்து நடந்தார். கோவில் படிகளை வந்தடைந்ததும் அவர் குத்துவிளக்கு ஏற்றினார். அமைதியின் அடையாளமாக ஒரு புறாவைப் பறக்கவிட்டார். மன்னார் மறைமாவட்ட ஆயர் யோசேப்பு இராயப்பு, திருத்தந்தையை வரவேற்று உரை ஆற்றினார். அதன் தமிழாக்கம்: பெருமதிப்புக்குரிய திருத்தந்தையே, இன்று இங்கு கூடியுள்ள ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் சார்பாக பிள்ளைகளுக்குரிய வாழ்த்தைத் தெரிவிக்கிறேன். உண்மை, நீதி, ஒப்புரவு ஆகிய இவற்றில் அடிப்படையைக் கொண்ட அமைதியின் தூதுவராக தாங்கள் எங்களின் இலங்கை நாட்டுக்கு வந்துள்ளீர்கள். நம் ஆண்டவர் மற்றும் புனித அசிசி பிரான்சிசின் அடிச்சுவடுகளில் ஏழைகள் மற்றும் துன்புறுவோர்மீது தாங்கள் கொண்டுள்ள வியத்தகு அன்புக்கு நன்றி. ஆசியாவில் முதல் கிறிஸ்தவ மறைசாட்சிகளைக் கொண்டிருக்கும் இடமாக மன்னார் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வட பகுதியிலிருந்த யாழ்ப்பாண மன்னரால் 1544ம் ஆண்டில் 600 மன்னார் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மன்னார் மறைசாட்சிக் கிறிஸ்தவர்களின் இரத்தம் வடக்கு மற்றும் இலங்கை முழுவதன் விசுவாசத்தின் வித்தாக மாறியுள்ளது. கடுமையான காட்டுப் பகுதியில் 400 ஆண்டுகளாக இருக்கும் மடு திருத்தலமும் வளமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. செபமாலை அன்னை திருத்தலமாகிய இங்கு மக்கள் விசுவாசத்தில் ஆழப்படுகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி அன்னையின் விண்ணேற்பு விழாவன்று 6 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வருகின்றனர். திருத்தந்தையே தங்களின் இப்பயணமும், செபங்களும் எம் தாய் நாட்டுக்கு அமைதியையும் வளமையையும் கொண்டு வருவதாக. இந்நேரத்தில் நாங்கள் எங்களின் பிள்ளைகளுக்குரிய அன்பையும் பணிவையும் மதிப்பையும் தங்களுக்குத் தெரிவிக்கிறோம். திருஅவையையும் பரந்த உலகையும் தூண்டி வழிநடத்தும் தங்களின் மேய்ப்புப்பணிகளில் கடவுள் தங்களை ஆசீர்வதிப்பாரக. அன்னை மரியா தங்களை அவருக்கு நெருக்கமாக வைத்திருப்பாராக.”[23] தொடர்ந்து அன்னை மரியா வணக்கம் தொடர்பான வேண்டுதல்கள் நிகழ்ந்தன. “ஓ, பரிசுத்த ஆவியே, என் ஆன்மாவின் ஆன்மாவே, நான் உம்மை ஆராதனை செய்கின்றேன்” என்ற பாடல் தமிழில் பாடப்பட்டது. மத்தேயு நற்செய்தியிலிருந்து கீழ்வரும் பகுதி வாசிக்கப்பட்டது: “துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது” (மத்தேயு 5:4,9-10). மடுத்திருத்தலத்தில் திருத்தந்தையின் உரைதிருத்தந்தை, அங்கு அன்னை கன்னி மரியா திருவழிபாட்டில் கலந்துகொண்டு உரையாற்றி நாட்டில் அமைதிக்காகச் செபித்தார். திருத்தந்தை ஆங்கிலத்தில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்: ”அன்புமிக்க சகோதர, சகோதரிகளே, நாம் நம் அன்னையின் இல்லத்தில் இருக்கின்றோம், மருதமடு அன்னையின் இத்திருத்தலத்தில் ஒவ்வொரு திருப்பயணியும் தன் சொந்த வீட்டில் இருப்பதைப் போல உணர முடியும். ஏனெனில், இங்குதான் மரியாள், தமது திருமகன் இயேசுவின் பிரசன்னத்திற்கு நம்மை இட்டுச் செல்கின்றார். தமிழர்களும், சிங்களவர்களும் இலங்கையராக, ஒரே குடும்பத்தின் உறுப்பினராக, இங்கு வருகை தருகின்றனர். தமது இன்ப, துன்பங்களையும், எதிர்பார்ப்புக்களையும், தேவைகளையும் அவரிடம் சமர்ப்பிக்கின்றனர். இலங்கை நாட்டின் இதயத்தையே பிளந்த நீண்ட காலப் போரினால் துன்பப்பட்ட குடும்பங்கள் இன்று இங்கே பிரசன்னமாக இருக்கின்றன. பயங்கர வன்முறை மற்றும் இரத்தக்களரிகளின் ஆண்டுகளில், வடக்கிலும் தெற்கிலுமாக எத்தனையோ மக்கள் உயிரிழந்துள்ளனர். இத்திருத்தலத்தோடு சம்பந்தப்பட்ட துயர நிகழ்வுகளை எந்தவோர் இலங்கையரும் மறக்கவே முடியாது. இலங்கையில் ஆரம்பக் கிறிஸ்தவர்களின் வருகையோடு தொடர்புடைய, வணக்கத்துக்குரிய மரியாவின் திருஉருவம் அவரின் திருத்தலத்திலிருந்து (பாதுகாப்பு கருதி) எடுத்துச் செல்லப்பட்ட அந்தச் சோகமான நாளையும் மறக்கவே முடியாது. ஆனாலும்கூட நம் அன்னை உங்களோடு எப்போதும் உடனிருந்தார். ஒவ்வோர் இல்லத்திற்கும், காயம்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் அமைதியான வாழ்வுக்குத் திரும்ப விரும்பும் அனைவருக்கும் அவர் அன்னையாக இருக்கிறார். இலங்கை வாழ் மக்களை, கடந்த கால மற்றும் நிகழ் காலத்தின் அனைத்து ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றி வருவதற்காக இன்று நன்றி கூறுகிறோம். நம் அன்னையின் பிரசன்னத்திற்காக இன்று நாம் அவருக்கு நன்றி கூற விழைகின்றோம். காயங்களைக் குணமாக்கி, உடைந்த உள்ளங்களில் அமைதியை மீண்டும் தரக்கூடிய ஆற்றல் கொண்டவர் இயேசு மட்டுமே. அவரை நமக்குத் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் அன்னைக்கு நன்றி கூறுகின்றோம். மேலும், இறை இரக்கத்தின் அருளை நம்மேல் பொழிந்திட வேண்டுகிறோம். அத்துடன் நமது பாவங்கள், மற்றும் இந்நாடு எதிர்கொண்ட அனைத்துத் தீமைகளுக்கும் பரிகாரம் செய்ய, தேவையான அருளை வேண்டுகிறோம். இதனைச் செய்வது, இலகுவானதல்ல. ஆனாலும் கூட, ஒருவரையொருவர் உண்மையான மனஸ்தாபத்துடன் அணுகவும், உண்மையான மன்னிப்பைக் கொடுக்கவும் அதனை நாடவும், இவ்வாறாக, நாம் இறை அருளைப் பெற்றுக்கொள்ள முடியும். மன்னிக்கவும், மற்றும் சமாதானத்தை அடைவதற்குமான கடினமான இந்த முயற்சியிலே, அன்னை மரியா இங்கிருந்து நம்மை ஊக்கமூட்டுகிறார், வழி நடத்துகிறார், அழைத்துச் செல்கிறார். தமிழ், சிங்கள மொழி பேசும் சமூகங்களை உள்ளடக்கிய இலங்கை மக்கள், இழந்துவிட்ட ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்புகின்ற முயற்சியில் அன்னை மரியாள் தன் பரிந்துரைகள் வழியாக, துணை நிற்க வேண்டுவோம். போரின் முடிவில் அன்னையின் திருச் சுரூபம் மடுத் திருத்தலத்திற்கு மீண்டும் வந்ததுபோல், அன்னையவரின் அனைத்து இலங்கை மக்களும் ஒப்புரவு மற்றும் தோழமையைப் புதுப்பிக்கும் உணர்வுடன் இறைவனிடம் திரும்பி வந்துசேர மன்றாடுவோம். அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே, நாம் ஒருவர், ஒருவருக்காக மன்றாடுவோம். இந்தத் திருத்தலமானது, செபத்தின் இல்லமாக, அமைதியின் இருப்பிடமாகத் திகழ வேண்டுவோம். மருதமடு அன்னையின் பரிந்துரையால், ஒப்புரவு, நீதி, சமாதானம் நிறைந்த எதிர்காலம் இந்நாட்டின் அனைத்து மக்களுக்கும் உரித்தாவதாக. ஆமென்.”[24] பொது மன்றாட்டு தமிழில் இசையமைப்பிலும், சிங்களத்திலும் எடுத்துரைக்கப்பட்டன. இலங்கையில் நீதி, அமைதி, சம உரிமை நிலவிட மன்றாட்டுகள் எழுப்பப்பட்டன. திருத்தந்தை சிறப்பு ஆசி வழங்கியபோது மக்கள் செபமாலை, சிறு சுரூபங்கள் மற்றும் படங்களை உயர்த்திப் பிடித்துக்கொண்டிருந்தனர். “சர்வேசுரா சுவாமி, இரக்கமாக எங்களைப் பாரும். கன்னி மரியாயே, மருதமடுமாதாவே, எங்களுக்காக இயேசுவை மன்றாடும்” ஆகிய மன்றாட்டுகளை மக்கள் எல்லாரும் சேர்ந்து பாடினார்கள். மடுமாதா சுருபத்தைக் கைகளில் வாங்கிக்கொண்டு, அதைக்கொண்டு மக்களுக்குத் திருத்தந்தை ஆசி வழங்கினார். திருத்தந்தைக்கு மரத்தில் செதுக்கப்பட்ட மடு அன்னையின் சுரூபம் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது. அதைப் பெற்று முத்தம் அளித்த பிரான்சிசு, அதை இறுதிவரைத் தம் கைகளில் தாங்கிக்கொண்டிருந்தார். அப்போது “எங்கள் ஞானத் தந்தையர்க்கு இறைவனே ஆசி அளித்திடுவீர்” என்ற கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் பிரான்சிசு மடுமாதா சுரூபத்திற்கு ஒரு செபமாலையை அணியாகச் சூட்டினார். திருத்தந்தையின் பிலிப்பீன்சு பயணம் பற்றிய சில தகவல்கள்திருத்தந்தையின் பிலிப்பீன்சு பயணம் அவருடைய ஆசியப் பயணத்தின் இரண்டாம் கட்டம் ஆகும். இலங்கையில் பயணத்தை முடித்துக்கொண்டு நேரடியாக அவர் பிலிப்பீன்சு வந்தார். ஆசியாவில் கத்தோலிக்கர் மிகப் பெரும்பான்மையராக உள்ள நாடு இது. சுமார் 100 மில்லியன் மக்களைக் கொண்ட இந்த நாட்டில் சுமார் 80 மில்லியன் பேர் கத்தோலிக்கர். 1521இல் இங்கு எசுப்பானியக் குடியேற்ற ஆதிக்கம் தொடங்கியது. அதோடு கத்தோலிக்கமும் பரவியது. பிலிப்பீன்சு மக்களின் கத்தோலிக்க நம்பிக்கையை உறுதிப்படுத்துவதும், அந்நாட்டில் வாழ்கின்ற எண்ணிறந்த ஏழைமக்களுக்கு வளமான வாழ்வு அமைக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதும், 2013இல் கடும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதும் தமது பயணத்தின் நோக்கங்கள் என்று திருத்தந்தை கூறினார். பிலிப்பீன்ஸ், தென்கிழக்கு ஆசியாவில், மேற்கு பசிபிக் பெருங்கடலில் 7,107 தீவுகளைக் கொண்டுள்ள ஒரு நாடு. இந்நாடு, பசிபிக் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ளதாலும், நில நடுக்கோட்டுக்கு அண்மையில் உள்ளதாலும், நிலநடுக்கங்களும் கடும் புயல்களும் அடிக்கடி ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளது. இந்த இயற்கையின் சீற்றத்தைத் திருத்தந்தையின் பயணத்தின்போது உணர முடிந்தது. பிலிப்பீன்சில் பயணம் செய்யும் திருத்தந்தை பிரான்சிசு சனிக்கிழமை, சனவரி 17ஆம் நாள் உள்ளூர் நேரம் காலை 8.15 மணிக்கு மனிலாவிலிருந்து விமானத்தில் லெய்ட்டே (Leyte) தீவுக்குச் சென்றார். 650 கிலோ மீட்டர் தூரத்தை ஒரு மணி 15 நிமிடங்கள் பயணம் செய்து அத்தீவின் முக்கிய நகரங்களில் ஒன்றான தக்லோபான் அடைந்தார். ஆனால் அந்நாட்டு வானிலை அறிக்கையின்படி இன்று இத்தீவில் கடும் புயல் அடிக்கும் என விமான ஓட்டுனர்கள் எச்சரித்தனர். அதிலும் மதியம் ஒரு மணிக்குமேல் புயலின் வேகம் அதிகரிக்கும், விமானப் பயணம் கடினம் என்று கூறியதால் இந்நகரில் திருப்பலியை நிறைவேற்றிய பின்னர் பிற்பகலில் மனிலா வந்து சேர்ந்தார் திருத்தந்தை பிரான்சிசு. திருத்தந்தை பிரான்சிசின் பயண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அங்கு செல்லவிருந்த ஆயிரக்கணக்கான மக்களாலும் அங்கு செல்ல இயலவில்லை. இச்சனிக்கிழமையன்று கன மழையுடன் மெக்கால (Mekkhala) புயல் வீசிய இதே லெய்ட்டே (Leyte) தீவும், தக்லோபான் நகரமும்தான் 2013ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி ஹையான் கடும் புயலால் கடுமையாய்த் தாக்கப்பட்டன. ஏழு மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பி கடும் சேதத்தை விளைவித்தன. இப்பகுதியில் இதுவரை இடம்பெற்ற கடும் புயல் இது என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த ஹையான் கடும் புயலில் தக்லோபான் நகரின் ஏறக்குறைய 90 விழுக்காடு அழிந்தது. லெய்ட்டே தீவின் ஆறு மாநிலங்கள் மற்றும் 44 மாவட்டங்களில் ஒரு கோடியே 45 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டனர். ஏறக்குறைய பத்து இலட்சம் மக்கள் வீடுகளை இழந்தனர். ஹையான் கடும் புயல் வீசி 14 மாதங்கள் கழித்து, பிலிப்பீன்ஸ்க்கு மூன்று நாள் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிசு ஹையான் புயலில் கடுமையாய்ப் பாதிப்படைந்த மக்களை நேரில் கண்டு தனது அன்பைத் தெரிவிப்பதற்கு மிகவும் ஆவல்கொண்டு தனது பயணத் திட்டங்களில் முக்கியமானதாக தக்லோபான் செல்வதைக் குறித்திருந்தார். அத்திட்டத்தின்படி சனவரி 17, சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை பத்து மணிக்குத் திருப்பலி நிகழ்த்தினார். ஆனால் மோசமான வானிலை காரணமாக திருப்பலியை வேகமாக முடிக்க வேண்டியிருந்தது. கொட்டும் மழையில் பல்லாயிரக்கணக்கான விசுவாசிகள் மஞ்சள் நிறத்தில் மழைப்பாகையை அணிந்துகொண்டு திருப்பலியில் பக்தியோடு பங்கெடுத்தனர். திருத்தந்தையும் மஞ்சள் நிறத்தில் மழைப்பாகை அணிந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினார். இத்திருப்பலிக்கென ஏற்கனவே ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டிருந்த மறையுரையை வழங்காமல் எசுப்பானிய மொழியில் சுருக்கமாக தனது உள்ளத்துணர்வுகளை மக்களோடு பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை. அவர் இஸ்பானிய மொழியில் சொல்லச் சொல்ல ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பும் நடைபெற்றது. தக்லோபான் நகரில் நிறைவேற்றிய திருப்பலியின் இறுதியில், அம்மக்களுக்காகச் செபித்து ஆசீர் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். கன மழையையும் பொருட்படுத்தாது பல்லாயிரக் கணக்கில் இத்திருப்பலியில் மக்கள் கலந்துகொண்டனர். இத்திருப்பலிக்குப் பின்னர், அங்கிருந்து 12 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பாலோ பேராயர் இல்லத்தில் ஹையான் புயலில் கடுமையாய்ப் பாதிப்படைந்த 30 குடும்பங்களுடன் திருத்தந்தை மதிய உணவு அருந்துவதாகப் பயணத் திட்டத்தில் இருந்தது. கன மழை புயல் காரணமாக இந்நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டது. இம்மக்களுக்கு பாலோவில் வத்திக்கானின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள திருத்தந்தை பிரான்சிசு மையத்தைத் திருத்தந்தை ஆசீர்வதிக்கவேண்டியிருந்தது. அந்நிகழ்வும் இரத்துச் செய்யப்பட்டது. மாலை 3.30 மணிக்கு பாலோ பேராலயத்தில் ஆயர்கள், குருக்கள், துறவிகள், குருத்துவ மாணவர்கள் மற்றும் ஹையான் புயலில் பாதிப்படைந்த குடும்பத்தினரைத் திருத்தந்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. இந்நிகழ்வை இத்திருப்பலிக்குப் பின் சுருக்கமாக நடத்தினார் திருத்தந்தை. பாலோ பேராலயத்தில் அனைவரையும் ஆசீர்வதித்து, பாதுகாப்பாக மனிலா வந்து சேர்ந்தார் திருத்தந்தை பிரான்சிசு. பிரான்சிசு ஆற்றிய மறையுரை"எனது இதயத்துக்கு மிகவும் நெருக்கமான ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். உரோமையில் இந்த ஹையான் புயலின் கடும் சேதங்களைப் பார்த்தபோது நான் இங்கு இருப்பதற்கு விரும்பினேன். அந்த நாள்களிலே இங்கு நான் வர விரும்பினேன். சிறிது தாமதமாக வந்தாலும் நான் இப்போது உங்களோடு இருக்கிறேன். இயேசுவே ஆண்டவர் என்பதைச் சொல்வதற்காக இங்கு வந்துள்ளேன். அவர் ஒருபோதும் நம்மைச் சோர்வுறவிடமாட்டார், நம்மை விழத்தாட்டமாட்டார். ஆனால் தந்தையே, எனது வீடு, வாழ்வாதாரங்கள் என பல பொருள்களை நான் இழந்துவிட்டேன், அதனால் மனம் சோர்ந்துள்ளேன் என்று நீங்கள் சொல்லலாம். இப்படி நீங்கள் சொன்னால் அது உண்மையே, உங்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். ஆயினும் சிலுவையில் அறையுண்ட இயேசு இங்கிருக்கிறார். இதிலிருந்து அவர் நம்மை சோர்வுறவிடமாட்டார். நாம் அனுபவிக்கும் அனைத்துத் துன்பங்களையும் அவர் அனுபவித்துள்ளார். இயேசுவே ஆண்டவர். நம் வாழ்வின் இன்னல் நிறைந்த நேரங்களில் நம்மோடு கண்ணீர் சிந்தி நம்மோடு நடக்கும் ஆண்டவரை நாம் கொண்டிருக்கிறோம்." "உங்களில் பலர் எல்லாவற்றையும் இழந்துள்ளீர்கள். என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. ஆயினும் உங்களுக்கு என்ன சொல்ல வேண்டுமென்பதை இயேசு அறிந்திருக்கிறார். உங்களில் பலர் உங்கள் குடும்பங்களில் ஒரு பகுதியினரை இழந்துள்ளீர்கள். அமைதியாக இருந்து எனது அமைதியான இதயத்துடன் உங்களோடு இருப்பதை மட்டுமே என்னால் செய்ய முடியும். ஆண்டவரே, இத்துன்பம் ஏன் என உங்களில் பலர் கேட்கலாம். உங்கள் ஒவ்வொருவரின் இதயத்திடமும், கிறிஸ்து சிலுவையிலிருந்து தம் இதயத்தோடு பதில் சொல்கிறார். இதற்குமேல் சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. கிறிஸ்துவை நோக்குவோம். அவர் ஆண்டவர்." "அவரது சிலுவையருகில் அவரின் தாய் நிற்கிறார். நாம் அதிகத் துன்பங்களை அனுபவிக்கும் நேரங்களில் சிறு குழந்தைகள்போல் நாம் இருக்கிறோம். அச்சமயங்களில் நாம் எதையும் புரிந்துகொள்வதில்லை. “மம்மி” என்று தாயின் கரங்களை மட்டுமே நாம் பிடித்துக்கொண்டிருக்க முடியும். குழந்தை பயப்படும்போது மம்மி என்று சொல்கிறது. நம் துன்ப நேரங்களில் “மம்மி” என்ற வார்த்தையை மட்டுமே நம்மால் சொல்ல முடியும். சிலுவையடியில் மௌனமாக நின்ற தாயை உற்று நோக்குவோம். சிறு குழந்தை போல, அத்தாயிடம், அம்மா எனச் சொல்வோம். நமக்கு ஒரு தாய் இருக்கிறார். மாபெரும் சகோதரர் இயேசு இருக்கிறார். நாம் தனியாக இல்லை. பேரிடர் துன்ப நேரங்களில் பல சகோதரர்கள் உதவி செய்வதற்கு வந்தார்கள். ஏனெனில் நாம் ஒருவருக்கொருவர் சகோதர சகோதரிகளாக உணருகிறோம்." "இதுவே எனது இதயத்தில் தோன்றியவை. வேறு எதுவும் சொல்லாமல் விட்டிருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். இயேசு ஒருபோதும் நம்மைச் சோர்வுறவிடமாட்டார் என்பதை தயவுகூர்ந்து அறிந்திருங்கள். அன்னைமரியாவின் கனிவு உங்களைச் சோர்வுறவிடாது என்பதையும் அறிந்திருங்கள். அன்னைமரியாவையும், இயேசுவையும் பற்றிக்கொண்டு சகோதர சகோதரிகளாக ஆண்டவரில் ஒன்றிணைந்து நடப்போம்." கியூபா, ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கான பயணம் - செப்டம்பர் 19-28, 2015கியூபாவில் சமய சுதந்திரம் வளர வேண்டும் என்னும் கோரிக்கைதிருத்தந்தை பிரான்சிசு, கியூபா நாட்டைச் சென்று சேர்ந்த உடனேயே, அலுவல்முறையில் இறைநம்பிக்கை இல்லா நாடு என்று தன்னை அறிமுகப்படுத்துகின்ற கியூபா நாட்டில் சமய சுதந்திரத்திற்குப் போதிய இடம், விரிவு, வகைமுறை அளிக்கப்பட வேண்டும் என்று பிரான்சிசு கேட்டுக் கொண்டார். கியூபா நாட்டு அதிபர் ராவுல் காஸ்ட்ரோ, ஐக்கிய அமெரிக்க நாடுகள், கியூபாவில் அமைத்துள்ள குவாண்டானமோ விரிகுடா தடுப்பு முகாம் தளத்தை உடனே மூட வேண்டும் என்று கேட்டார். மேலும் முதலாளித்துவ பொருளாதார அமைப்பு இன்றைய புவியுலகை மாசுறச் செய்கிறது என்றும் அந்நிலை மாற வேண்டும் என்றும் கூறினார். இருப்பினும், ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் கியூபா நாட்டிற்கும் இடையே நல்லுறவுகள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இந்த நல்லுறவை ஏற்படுத்துவதில் திருத்தந்தை பிரான்சிசு முக்கிய பங்காற்றுகிறார் என்பதும் தெரிகிறது. பிரான்சிசு தம் உரையில், “கியூபா நாட்டிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் இடையே நல்லுறவு ஏற்படுவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். இது உலகம் முழுவதற்கும் நாடுகளுக்கிடையே நல்லுறவு ஏற்படுவதற்கு ஒரு சீரிய முன்னுதாரணமாக அமையட்டும்” என்று குறிப்பிட்டார்.[25] பிரான்சிசு கியூபாவின் முன்னாள் அதிபர் பிடெல் காஸ்ட்ரோவை சந்திக்கிறார்திருத்தந்தை பிரான்சிசின் கியூபா பயணத்தின் ஒரு உச்சக்கட்டம் அவர் பிடெல் காஸ்ட்ரோவை சந்தித்தது ஆகும்.[26] இரு தலைவர்களும் உலக நடப்புப் பற்றியும், சுற்றுச் சூழல் சீரழிவு பற்றியும் பொதுவாக உரையாடியதாகத் தெரிகிறது. இரு தலைவர்களும் சில நூல்களைப் பரிசாகப் பரிமாறிக்கொண்டார்கள். பிரான்சிசு தாம் எழுதிய இரு சுற்றுமடல்களை (”மகிழ்ச்சிதரும் நற்செய்தி”, “சுற்றுச் சூழல் பாதுகாப்பு”) பரிசாகக் கொடுத்தார். மேலும் ஆன்மிக வாழ்வு பற்றிய ஒரு நூலையும் கொடுத்தார். பிடெல் காஸ்ட்ரோவுக்கு ஆசிரியராகப் பணிபுரிந்து, பின்னர் பிடெல் காஸ்ட்ரோவின் புரட்சிக்குப் பின் கியூபா பொதுவுடைமைக் கொள்கையைத் தழுவியபோது நாடுகடத்தப்பட்ட அமாந்தோ யொரேந்தே (Amando Llorente) என்ற இயேசு சபைக் குரு எழுதிய நூலையும் திருத்தந்தை பிரான்சிசு, பிடெல் காஸ்ட்ரோவுக்குப் பரிசாகக் கொடுத்தார்.[27] பிடெல் காஸ்ட்ரோ தாம் எழுதிய “பிடெலும் சமயமும்” (“Fidel and Religion”) என்ற நூலை பிரான்சிசுக்குப் பரிசாகக் கொடுத்தார். அந்நூல், பிடெல் காஸ்ட்ரோ, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டை சந்தித்ததின் சுருக்கம் ஆகும். அந்நூலின் முகப்புப் பக்கத்தில் “திருத்தந்தை பிரான்சிசுக்கு, கியூபா நாட்டிற்கு ஒரு சகோதரரைப் போன்று அவர் வருகை தந்ததை முன்னிட்டு, கியூபா மக்களின் பாசமிகு வாழ்த்துகளோடு, பிடெல் வழங்கும் அன்புப் பரிசு” (“For Pope Francis, on the occasion of your fraternal visit to Cuba, with the admiration and respect of the Cuban people. Fidel.”) அவானா நகரின் புரட்சி வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிசு திருப்பலி நிறைவேற்றினார். 200,000 மக்கள் குழுமியிருந்த வளாகத்தில் மறையுரை ஆற்றியபோது, ஏழை எளியோருக்கும் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டோருக்கும் ஆதரவு அளிப்பது தான் உண்மையான சமய நம்பிக்கை என்று பிரான்சிசு கூறினார். இளையோருக்கு உரையாற்றுகையில், “அன்புமிக்க இளையோரே, நீங்கள் ஒளிமயமானதோர் உலகம் உருவாகும் என்று கனவு காண வேண்டும்” என்று கூறினார். மேலும், “கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பொதுநன்மையை முன்னிறுத்தி அனைவரும் ஒத்துழைக்க முடியும், ஒத்துழைக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார். ”பண ஆசைக்கு அடிமைகள் ஆகிவிடாமலும், எளியோரை உதறித் தள்ளாமலும் நாம் செயல்பட வேண்டும்” என்றும் அவர் எடுத்துரைத்தார்.[28] திருத்தந்தை பிரான்சிசின் ஐக்கிய அமெரிக்க நாடுகள் பயணம்கியூபாவில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு, அங்கிருந்து நேரடியாக ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தலைநகரான வாசிங்டனுக்குத் திருத்தந்தை பிரான்சிசு வருவதில் ஆழ்ந்த பொருள் உள்ளது. அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக எதிரிகள் போல செயல்பட்டுவந்த இந்த இரண்டு நாடுகளும் பகைமை அகற்றி நல்லுறவுகள் ஏற்படுத்திட திருத்தந்தை பிரான்சிசு உழைத்தார். இரு நாடுகளின் பிரதிநிதிகளும் கூடி வந்து பேச்சு வார்த்தை நடத்த அவரே ஏற்பாடு செய்தார். எனவே, ஒரு விதத்தில் இந்த இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவைக் கொணர்வதில் பிரான்சிசு ஒரு பாலமாக அமைகின்றார். அதிபர் ஒபாமா, திருத்தந்தை பிரான்சிசை வெள்ளை மாளிகையில் வரவேற்கிறார்செப்டம்பர் 23, புதன் காலை 9 மணியளவில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா திருத்தந்தை பிரான்சிசை வெள்ளை மாளிகைத் தோட்ட வளாகத்தில் வரவேற்றார். சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களுக்கும் ஏழைகளுக்கும் ஆதரவு அளிப்பதிலும், சுற்றுச் சூழல் மாசுறுவதைத் தடுத்து புவியுலகத்தை உலக மக்கள் அனைவரும் வாழ உகந்த இல்லமாக மாற்றுவதிலும், சமயச் சுதந்திரத்தை ஆதரிப்பதிலும் திருத்தந்தை தலைசிறந்த விதத்தில் உழைத்து வருகிறார் என்று தம் வரவேற்புரையில் கூறிய அதிபர் ஒபாமா, திருத்தந்தை பிரான்சிசை அமெரிக்க மக்கள் பெயரால் வரவேற்றார். தமது ஏற்புரையின் போது, திருத்தந்தை இரு முக்கிய கருத்துக்களை வலியுறுத்தினார். அமெரிக்க நாடு வெளிநாடுகளிலிருந்து வந்து குடியேறிய மக்களின் ஒத்துழைப்பால் உருவானது என்றும், இந்நாட்டில் குடியேற விரும்பும் மக்களுக்கு வரவேற்பு கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். அதுபோலவே, சுற்றுச் சூழல் மற்றும் புவியுலகு பாதுகாப்பில் அமெரிக்கா எடுக்கின்ற முயற்சிகளைப் பாராட்டிய பிரான்சிசு, அம்முயற்சிகள் தொடர வேண்டும் என்றும் கூறினார்.[29] புலம்பெயர்ந்து, அடைக்கலம் தேடி வருவோரை வரவேற்றல் வேண்டும்திருத்தந்தை தமது பயணத்தின்போது வலியுறுத்திய ஒரு முக்கிய கருத்து, புலம்பெயர்ந்து, அடைக்கலம் தேடி வருகின்ற மக்களை வரவேற்றல் வேண்டும் என்பதாகும். அவர் வெள்ளை மாளிகைத் தோட்ட வளாகத்தில் ஆற்றிய உரையின்போது, “நானும் புலம்பெயர்ந்து குடியேறிய ஓர் குடும்பத்தில் பிறந்தவன் தான்” என்றார். திருத்தந்தையின் பெற்றோர் இத்தாலி நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து அர்ஜெண்டீனா நாட்டில் குடியேறினார். அங்குதான் பிரான்சிசு பிறந்தார். எசுப்பானிய மொழி பேசுகின்ற கத்தோலிக்கர் பெருமளவில் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் குடியேறியுள்ளனர். அவர்களுள் சிலர் குடியேற்ற ஆவணங்கள் இல்லாமல் உள்ளனர். அவர்களை மீண்டும் அவர்களுடைய நாடுகளுக்கே திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்றொரு கருத்தை சிலர் முன்வைக்கின்ற வேளையில் திருத்தந்தை பிரான்சிசு புலம்பெயர்வோரை ஆதரிக்க வேண்டும் என்று கேட்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பல்லாயிரக்கணக்கான அகதிகள் சிரியா, லிபியா, சூடான் போன்ற நாடுகளிலிருந்து ஐரோப்பா செல்ல முயல்கின்ற பின்னணியில் அவருடைய வேண்டுகோள் பலமாகவே ஒலிக்கின்றது.[30] ஐக்கிய அமெரிக்க நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு திருத்தந்தை பிரான்சிசு உரையாற்றுகின்றார்அரசியம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்ற இந்த உரையின்போது திருத்தந்தை அமெரிக்கா என்பது ஒரு பெருநிலம். அதில் வடக்கு நோக்கிச் சென்று வேலை வாய்ப்புத் தேடுவோரை, புலம்பெயர்ந்து வருவோரை கைவிரித்து ஏற்கவேண்டும் என்றார் திருத்தந்தை. அமெரிக்க வரலாற்றில் சிறப்பு மிக்க மனிதர்களாக விளங்கிய ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லுத்தர் கிங், டோரதி டே, தாமஸ் மெர்ட்டன் ஆகிய நால்வரைப் பெயர் சொல்லிக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிசு, அந்த வரலாற்று உணர்வோடு ஐக்கிய அமெரிக்க நாட்டு மக்கள் செயல்படுவது உலக அமைதிக்கும், புவியுலகப் பாதுகாப்புக்கும் தேவை என்றார். ஆபிரகாம் லிங்கன் அடிமைமுறையை ஒழிக்க பாடுபட்டார். மார்ட்டின் லுத்தர் கிங் கருப்பு இன மக்களின் சம உரிமைக்காக உழைத்தார். டோரதி டே என்பவர் சமூக நீதிக்காகவும் உழைப்பாளர் வளர்ச்சிக்காகவும் தம் வாழ்க்கையை அர்ப்பணித்தார். தாமஸ் மெர்ட்டன் என்பவர் வன்முறை களைந்து, பல்சமய உரையாடல் வழி மக்களிடையே நல்லிணக்கம் வளர வேண்டும் என்று வலியுறுத்தினார். இத்தகைய பெருமனிதர்களின் வழிவருகின்ற ஐக்கிய அமெரிக்க நாட்டு மக்கள் தங்கள் வரலாற்றுப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிசு வலியுறுத்தினார்.[31] ஹஜ் திருப்பயண நிகழ்வில் இறந்தோருக்கு இரங்கல்செப்டம்பர் 24, வியாழக்கிழமை மாலையில் திருத்தந்தை பிரான்சிசு நியூயார்க் நகரில் அண்மையில் புதுப்பிக்கப்பட்ட புனித பாட்ரிக் பெருங்கோவில் வழிபாடு நடத்தினார். அப்போது தம் உரையைத் தொடங்குமுன், அவர் வியாழன் காலையில் மெக்காவில் ஹஜ் பயணம் சென்ற முஸ்லிம்களும் சுமார் 700 பேர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தற்கு இரங்கல் தெரிவித்தார். அவர் பின்வருமாறு கூறினார்: “இசுலாமியருக்குப் புனித நாளான தியாகத் திருநாளான இன்று அனைவருக்கும் எனது உளம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரத்தில், இன்று மெக்காவில் உயிரிழந்தோரை நினைத்து இரங்கல் தெரிவிக்கின்றேன். இத்துயரத்தில் நானும் பங்கேற்கின்றேன். இறைவனை நோக்கி மன்றாட்டுகளை எழுப்புகின்றேன்.” [32] ஐக்கிய நாடுகள் பொதுப் பேரவையில் திருத்தந்தை பிரான்சிசின் உரைஐக்கிய நாடுகள் அவை 70ஆம் ஆண்டினைக் கொண்டாடுகின்ற இத்தருணத்தில் திருத்தந்தை ஐ.நா. பொதுப்பேரவையில் உரையாற்றினார். செப்டம்பர் 25, வெள்ளி காலை 9 மணியளவில் வழங்கப்பட்ட உரைக்கு முன், பொதுச்செயலர் பான் கி மூன் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். பின்னர் திருத்தந்தை ஐ.நா. அவை அலுவலர்களுக்கு உரையாற்றி, அவர்களது பொறுப்பை வலியுறுத்தினார். ஐ.நா. தரப்பில் உலகின் பல பகுதிகளில் அமைதிக் குழு, மக்கள் நல முன்னேற்றக் குழு போன்ற பணிகளை ஆற்றியபோது வன்முறைக்கு உள்ளாகி உயிரிழந்த ஐ.நா. உழைப்பாளர்களின் நினைவகத்தின் முன் சிறிது நேரம் அமைதியாக நின்று அஞ்சலி செலுத்தினார். 193 உலக நாடுகளை முழுநிலை உறுப்பினர்களாகவும், வத்திக்கான் (திருப்பீடம்) போன்ற சில பார்வைநிலை உறுப்பினர்களையும் கொண்ட மாபெரும் உலக நிறுவனமாகிய ஐ.நா. அவையின் பொதுப்பேரவை அமர்வுக்குத் தொடக்கவுரை ஆற்றும் பணி்யை ஒரு திருத்தந்தை ஆற்றுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. திருத்தந்தை பிரான்சிசு ஐ.நா. அவையில் ஆற்றிய உரையின் சில பகுதிகள்:1. சுற்றுச் சூழல் பேணுதல் பற்றி: ”சுற்றுச் சூழலுக்கு நாம் ஊறு இழைக்கும் போதெல்லாம், மனித குலத்திற்கே ஊறு விளைவிக்கின்றோம்.” 2. புவி வெப்பநிலை மாற்றம் வறுமைக்குக் காரணமாதல் பற்றி: ”சுற்றுச் சூழலுக்கு ஊறு இழைப்பதால் ஏற்படுகின்ற விளைவுள் ஏழைமக்களை மிகக் கடுமையாக பாதிக்கின்றன. இதற்கான காரணங்கள் மூன்று: ஏழைகள் சமுதாயத்தால் ஒதுக்கப்படுகிறார்கள்; ஒதுக்கிக் கழிக்கப்படுபவையே ஏழைகளின் வாழ்வு ஆதாரம் ஆகிறது; சுற்றுச் சூழல் சீரழிப்பினால் அநியாயமான விதத்தில் துன்புற நேரிடுகிறது. இன்று சமுதாயத்தில் மெதுவாக, ஆனால் பரவலாகப் பரவி வருகின்ற ‘கழிவுமுறைக் கலாச்சாரத்தின்’ பிடியில் ஏழைகள் சிக்கி அவதிப்படுகிறார்கள்.” 3. உலக நாடுகளின் தலைவர்கள் என்ன முயற்சிகள் மேற்கொள்ளலாம் என்பது பற்றி: ”உலக நாடுகளின் தலைவர்கள், எந்தவொரு மனிதரோ மக்கள் குழுவோ, சமுதாயத்தாலோ பொருளாதார அமைப்பில் பங்கேற்பதிலிருந்தோ அநீதியாக ஒதுக்கப்படாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இத்தகைய சமுதாய மற்றும் பொருளாதார ஒதுக்குமுறை நிகழ்கின்ற இடங்களில் பலவிதமான தீய விளைவுகள் ஏற்படுகின்றன. உதாரணமாக, மனிதர்களை விலைக்கு வாங்கி விற்கின்ற கொடுமை, மனித உடலுறுப்புகளையும் திசுக்களையும் விலைபேசுகின்ற கொடுமை, சிறுவர்களையும் சிறுமியரையும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குகின்ற கொடுமை, மனிதர்களை அடிமைகளாக்கி வேலை வாங்கும் கொடுமை, அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கொடுமை, போதைப்பொருள்களையும் போர்க்கருவிகளையும் கடத்தி விற்கும் கொடுமை, பயங்கர வாத நடவடிக்கை, பன்னாட்டளவில் திட்டமிட்டு நிகழ்த்தப்படுகின்ற கொடுங்குற்றங்கள் போன்ற கொடுமைகள் எல்லாம் மேற்கூறிய சமுதாய மற்றும் பொருளாதார ஒதுக்குமுறையின் விளைவுகளே.” 4. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பெரும் பொறுப்புப் பற்றி: ”ஐக்கிய நாடுகள் அமைப்பு மனித குலத்திற்கு மாபெரும் பணி ஆற்றிட கடமைப்பட்டுள்ளது. நாம் வகுக்கின்ற திட்டங்களும் சரி, கொள்கைச் செயல்பாடுகளும் சரி, அவை எல்லாம் வெறும் திட்ட வகையாக நின்றுவிடக்கூடாது. மாறாக, ஒவ்வொரு நாளும் வறுமையில் உழன்று, உரிமைகள் இழந்து, வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எண்ணிறந்த மனிதர் உண்மையிலேயே முன்னேற்றம் பெறும் வகையில் திட்டங்களும் செயல்பாடுகளும் அமைய வேண்டும். அரசியல் மட்டத்திலும் பொருளாதார மட்டத்திலும் மேற்கொள்ளப்படுகின்ற செயல்பாடுகள் நீதியை மையமாகக் கொண்டு அமைய வேண்டும். நடைமுறையில் மக்களுக்கு, குறிப்பாக எளியோருக்கு, பயன் நல்குகின்றனவாக அமைய வேண்டும்.” 5. உலகளாவிய வறுமை நிலையை ஒழிக்க மக்களால் முடியும் என்பது பற்றி: ”உலக மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமான வளர்ச்சியில் பங்கேற்க வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். அனைத்து மக்களின் மாண்பும் மதிக்கப்பட வேண்டும். ஆனால் இவற்றை மக்கள் மேல் வலிந்து திணிப்பது முறையாகாது. ஒவ்வொரு தனி மனிதரும், குடும்பமும், பிறரோடு இணைந்து, சமுதாயத்தின் பல்வேறு நிலை உறவுகளைப் பேணி அவற்றின் வழியாக மட்டுமே நல வாழ்வு அடைய முடியும். இத்தகைய உறவு நிலைகளை உருவாக்குவதில் நண்பர்கள், சிறு குழுக்கள், ஊர்கள், நகரங்கள், கல்விக்கூடங்கள், வர்த்தக அமைப்புகள், தொழிலாளர் சங்கங்கள், மாநிலங்கள், நாடுகள் முதலியவை ஆக்கப்பூர்வமான விதத்தில் ஈடுபட முடியும், ஈடுபடவும் வேண்டும்.” 6. அடிப்படை உரிமைகள் பற்றி: ”ஒவ்வொரு மனிதருக்கும் அடிப்படை உரிமைகளாக அமைபவை இவை: தங்கியிருக்க வீடு, திறமைக்கேற்ற வேலை வாய்ப்பு, தேவைக்கான சொத்து (lodging, labor and land).” 7. ஐ.நா. அமைப்பின் “சீரான வளர்ச்சிக்கு 2030 திட்டத்தொகுப்பு” (2030 Agenda for Sustainable Development) பற்றி: ”சீரான வளர்ச்சிக்கு ஐ.நா. அமைப்பு வகுத்துள்ள திட்டத்தொகுப்பு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட வேண்டும். மனித வாழ்க்கைக்குத் தேவையான பொருள்சார்ந்த மற்றும் அருள்சார்ந்த நலன்கள் எல்லா மக்களுக்கும் தங்குதடையின்றி, நடைமுறையில் கிடைப்பதே அந்த வெற்றிக்கு அடையாளம். இத்தகைய நலன்களுள் கீழ்வருவன அடங்கும்: வீட்டு வசதி, போதிய ஊதியம் தருகின்ற வேலை வாய்ப்பு, போதிய உணவு, குடிநீர், சமயச் சுதந்திரம், மற்றும் பொதுவாக கல்வி போன்றவை.” 8. மனித மாண்பு பற்றி: ”நாம் வாழ்கின்ற உலகம் எல்லா மனிதருக்கும் உரித்தான ஒரு பொது இல்லம், வீடு ஆகும். உலகில் வாழ்கின்ற அனைத்து மனிதருமே ஒருவர் ஒருவருக்கு உடன்பிறப்புகள் என்ற உணர்வு வளர வேண்டும். மனித உயிர் மாண்புமிக்கது என்ற உறுதிப்பாடு நிலைபெறவேண்டும். எல்லா உயிர்களுமே போற்றப்பட வேண்டும். இத்தகைய அடிப்படைகள் ஏற்கப்படும்போது, ஆண் அல்லது பெண் என்ற வேறுபாட்டிற்கு அங்கு இடமில்லை. ஏழைகளானாலும், குழந்தைகள் ஆனாலும், முதியோர் ஆனாலும், வலுவற்றோர் ஆனாலும், கருவில் உருவாகும் உயிரானும், வேலைவாய்ப்பின்றித் தவிப்போரானாலும், கைவிடப்பட்டோர் ஆனாலும், ஒன்றுக்கும் உதவாதோர் என்று ஒதுக்கப்படுவோர் ஆனாலும் அனைவருக்குமே பொதுவான இல்லமாக, வீடாக நமது உலகம் உள்ளது என்பதே உண்மை.”[33] திருத்தந்தையின் ஆப்பிரிக்கப் பயணம் (கென்யா, உகாண்டா, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு) பற்றிய சில தகவல்கள்திருத்தந்தை 2015 நவம்பர் 25-30 நாட்களில் முதன்முறையாக ஆப்பிரிக்கக் கண்டத்திற்குத் திருப்பயணமாகச் சென்றார். அப்பயணத்தின்போது அவரை சந்திக்கவும் அவருடைய ஆசியைப் பெறவும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் பிறரும் பல்லாயிரக் கணக்காகக் கூடிவந்தனர். அவர் ஆற்றிய உரைகள் வழியாகவும், அவர் சந்தித்த மக்கள் வழியாகவும், அவருடைய செயல்கள் வழியாகவும் அவர் வழங்கிய செய்தி பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.
வெளி இணைப்புகள்குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia