தேசியக் கல்விக் கொள்கை 2020 (NEP 2020) இந்திய மத்திய அமைச்சரவையால் 2020 சூலை 29 அன்று ஒப்புதலளிக்கப்பட்டது. இக்கல்விக் கொள்கை, இந்தியாவின் புதிய கல்வி முறையின் தொலைநோக்கினைக் கோடிட்டுக் காட்டுகிறது.[1] இந்த புதிய கொள்கை முந்தைய தேசியக் கல்விக் கொள்கைக்கு (1986) மாற்றாக நடைமுறைக்கு வருகிறது. இந்தக் கொள்கை தொடக்கக் கல்வி தொடங்கி உயர் கல்வி வரைக்குமான விரிவான மற்றும் முழுமையான வடிவமைப்பாகும். மேலும் இந்தக் கல்விக் கொள்கை கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில் கல்வியோடு இணைந்த தொழிற்பயிற்சியையும் முன் வைக்கிறது. இந்தக் கல்விக் கொள்கை 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் கல்வி முறையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இக்கொள்கையின்படி, 2025ஆம் ஆண்டு முதல் தானியங்கி நிரந்தர கல்விக் கணக்குப் பதிவேடு மூலம் மாணவ மாணவிகளுக்கு 12 இலக்க எண்கள் கொண்ட நிரந்தர அடையாள அட்டை வழங்கப்படுகிறது.[2][3][4][5]
கொள்கை வெளியான சிறிது நேரத்திலேயே, எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் படிக்க யாரும் கட்டாயப்படுத்தப்படமாட்டார்கள் என்றும், கற்பித்தல் ஊடகம் ஆங்கிலத்திலிருந்து எந்த பிராந்திய மொழிக்கும் மாற்றப்படாது என்றும் அரசாங்கம் தெளிவுபடுத்தியது. தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மொழிக்கொள்கை இயற்கையில் ஒரு பரந்த வழிகாட்டுதலும்ஆலோசனையும் ஆகும். இதனை செயல்படுத்துவது குறித்து மாநிலங்கள், நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் முடிவு செய்ய வேண்டும். [6] இந்தியாவில் கல்வி என்பது மாநில மற்றும் மத்திய அரசுகளின் ஒருங்கியல் அதிகாரப் பட்டியலில் உள்ள ஒன்றாகும்.[7]
பின்னணி
தேசிய கல்விக் கொள்கை 2020 ஆனது 1986 ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக அமைந்துள்ளது. [a][8]2014 மக்களவைத் தேர்தலுக்கானபாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஒரு புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதை முன் வைத்தது.[9] ஜனவரி 2015 இல், முன்னாள் அமைச்சரவை செயலாளர் டி.எஸ்.ஆர் சுப்பிரமணியனின் கீழ் ஒரு குழு புதிய கல்விக் கொள்கைக்கான ஆலோசனை செயல்முறையைத் தொடங்கியது. இந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், ஜூன் 2017 இல், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு 2019 இல் தேசிய கல்விக் கொள்கையின் வரைவினை சமர்ப்பித்தது. தேசிய கல்விக் கொள்கை (வரைவு) (டி.என்.இ.பி.) 2019, பல கட்ட பொது ஆலோசனைகளுக்குப் பின்னர் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது.[10] தேசிய கல்விக் கொள்கையின் வரைவு 484 பக்கங்களைக் கொண்டிருந்தது. [11] வரைவுக் கொள்கையை வகுப்பதில் அமைச்சகம் கடுமையான ஆலோசனை நடவடிக்கைகளை மேற்கொண்டது: 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகள், 6,600 தொகுதிகள், 6,000 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் , 676 மாவட்டங்களில் இருந்து இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகள் பெறப்பட்டன.
ஆகஸ்ட் 7, 2020 அன்று பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட தேசிய கல்விக் கொள்கை - 2020 குறித்த இணைய வழி மாநாடு. இடதுபுறத்தில் கி.கஸ்தூரிரங்கன்.
தேசிய கல்விக் கொள்கை 2020 குறித்து நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுடன் விவாதிக்கப்படுகிறது. பிட்ஸ் பிலானி, ஜாமியா, பஞ்சாப் பல்கலைக்கழகம், தேஜ்பூர் பல்கலைக்கழகம், அசாம் மற்றும் சி.யு கேரளா ஆகியவை காணப்படுகின்றன.
தேசிய கல்விக்கொள்கை 2020 இந்தியாவின் கல்விக் கொள்கையில் பல மாற்றங்களைச் செய்கிறது. கல்விக்கான மாநில செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4% முதல் 6% வரை விரைவில் உயர்த்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. [13]
மாற்றங்கள் மற்றும் நோக்கங்கள்:
மொழிகள்
இந்தக் கல்விக்கொள்கை தாய்மொழி மற்றும் பிராந்திய மொழிகளின் முக்கியத்துவத்தை முன் வைக்கிறது; 5 ஆம் வகுப்பு வரையிலும் அல்லது அதற்குப் பின்னாலும் கூட கற்பித்தல் மொழியாக தாய்மொழி இருக்க வேண்டும். [14]சமஸ்கிருதம் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். மாணவர்களுக்கு எந்த ஒரு மொழியும் திணிக்கப்படாது என்றும் கொள்கை கூறுகிறது. [15]
கொள்கை வெளியான சிறிது நேரத்திலேயே, தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள மொழிக்கொள்கை ஒரு பரந்த வழிகாட்டுதலாகும் என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியது; மற்றும் அதை செயல்படுத்துவது தொடர்பாக மாநிலங்கள், நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் தான் தீர்மானிக்க வேண்டும். [6] 2021 ஆம் ஆண்டில் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பில் ஒரு விரிவான மொழி உத்தி வெளியிடப்படும். 60 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய மொழிக்கொள்கையை சர்தார் படேல் வித்யாலயா போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 1986 ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கை மற்றும் கல்வி உரிமைச் சட்டம், 2009 ஆகிய இரண்டுமே தாய்மொழியின் பயன்பாட்டை ஊக்குவிப்பதை ஒரு வழிகாட்டு நடைமுறையாகக் கொண்டிருந்தன. [16]
பள்ளிக் கல்வி
" 10 + 2 " அமைப்பு " 5 + 3 + 3 + 4 " மாதிரியால் மாற்றப்படும். [15] இது பின்வருமாறு செயல்படுத்தப்படும்: [17][18]
அடித்தள நிலை: இது மேலும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: 3 ஆண்டு பாலர் பள்ளி அல்லது அங்கன்வாடி, அதைத் தொடர்ந்து ஆரம்ப பள்ளியில் 1 மற்றும் 2 வகுப்புகள். இது 3-8 வயதுடைய குழந்தைகளை உள்ளடக்கும். கல்வியின் கவனம் செயல்பாடு சார்ந்த கற்றலில் இருக்கும்.
தயாரிப்பு நிலை: 3 முதல் 5 வகுப்புகள், இது 8-11 வயதுடையவர்களை உள்ளடக்கும். இது படிப்படியாக பேசுவது, வாசித்தல், எழுதுதல், உடற்கல்வி, மொழிகள், கலை, அறிவியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களை அறிமுகப்படுத்தும்.
நடுத்தர நிலை: 6 முதல் 8 வகுப்புகள், 11 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளை உள்ளடக்கியது. இது கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கலை மற்றும் மனிதநேயம் ஆகிய பாடங்களில் மாணவர்களுக்கு மிகவும் சுருக்கமான கருத்துக்களை அறிமுகப்படுத்தும்.
இரண்டாம் நிலை: 9 முதல் 12 வரையிலான வகுப்புகள், 14-19 வயதுடையவர்கள். இது மீண்டும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: 9 மற்றும் 10 வகுப்புகள் முதல் கட்டத்தை உள்ளடக்கியது, 11 மற்றும் 12 வகுப்புகள் இரண்டாம் கட்டத்தை உள்ளடக்கியது. இந்த 4 ஆண்டு படிப்பானது ஆழமான மற்றும் விமர்சன சிந்தனையுடன் இணைந்து பலதரப்பட்ட படிப்பை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது. பாடங்களைத் தேர்வு செய்வதற்கு பல விதமான விருப்ப வாய்ப்புகள் வழங்கப்படும்.
ஒவ்வொரு கல்வியாண்டிலும் நடைபெறும் தேர்வுகளுக்கு பதிலாக, பள்ளி மாணவர்கள் 3, 5 மற்றும் 8 வகுப்புகளில் மூன்று தேர்வுகளை மட்டுமே எதிர்கொள்வார்கள். [15]
வாரிய தேர்வுகள் 10 மற்றும் 12 வகுப்புகளுக்கு தொடர்ந்து நடத்தப்படும், ஆனால் அவை மறு வடிவமைக்கப்படும். இதற்கான தரநிலைகள் பரக் என்ற மதிப்பீட்டு அமைப்பால் நிறுவப்படும். [b][15] அவற்றை எளிதாக்குவதற்கு, இந்தத் தேர்வுகள் வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படும், மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு இரண்டு முயற்சிகள் வரை வாய்ப்பு வழங்கப்படும்.[20] தேர்வில் இரண்டு பகுதிகள் இருக்கும், அதாவது கொள்குறி வகை மற்றும் விளக்கமாக பதில் எழுதும் வகை ஆகிய வகைகளைக் கொண்டிருக்கும். [1]
இந்த புதிய கல்விக்கொள்கையானது மாணவர்களுக்கு கலைத்திட்ட சுமையினைக் குறைப்பதனையும் அதே நேரத்தில் பல்துறை அறிவைப் பெறுவதையும், பல்மொழி அறிவைப் பெறுவதையும் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. உதாரணமாக, இயற்பியலையும், ஆடை வடிவமைப்பையும் சேர்ந்து கற்க விரும்பும் (அல்லது) வேதியியலுடன் அடுமனைத் தொழில் சார்ந்த படிப்பையும் தொடர ஆசைப்படும் மாணவர்களுக்கு அவ்வாறு படிக்க அனுமதிக்கப்படுவர்.[21] மாணவர்களின் முன்னேற்ற அறிக்கையானது முழுமையானதாக, அதாவது மாணவனின் பல்வேறுபட்ட திறன்களையும் குறித்த தகவல்களை அளிப்பதாக இருக்கும்.[1]
கணினி நிரலாக்கம் தொடர்பான படிப்பு ஆறாம் வகுப்பு முதலே தொடங்கப்படும். மேலும், அனுபவம் சார்ந்த கல்வியானது கைக்கொள்ளப்படும்.[22]
இலவச மதிய உணவுத் திட்டம் காலை உணவும் அளிக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும். மாணவர்களின் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். குறிப்பாக, மாணவர்களின் மன நலத்தின் மீது உளவியல் ஆலோசகர்கள் மற்றும் சமூக நலப்பணியாளர்கள் ஆகியோரை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.[23]