பிரெட்டன் வுட்சு முறைமைபிரெட்டன் வுட்சு முறைமை (Bretton Woods system) இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி காலத்தில் உலகின் பெரும் முன்னேற்றமடைந்த நாடுகளில் வணிக மற்றும் பொருளியல் தொடர்புகளுக்காக ஏற்படுத்தப்பட்ட விதிகளை நிலைநிறுத்தும் நிதி மேலாண்மை முறைமையாகும்.தன்னாட்சி பெற்ற நாடுகளிடையே முற்றிலும் கலந்துரையாடி ஏற்படுத்தப்பட்ட நிதி மேலாண்மை அமைப்பிற்கு பிரெட்டன் வுட்சு முறைமை ஓர் முதல் எடுத்துக்காட்டாகும். இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருக்கும்போதே பன்னாட்டு பொருளாதார அமைப்புகளை வலுப்படுத்தி மீளமைக்க 44 நேச நாடுகளைச் சேர்ந்த 730 பேராளர்கள் அமெரிக்காவின் நியூ ஹாம்சயரில் பிரெட்டன் வுட்சு நகரிலுள்ள மவுண்ட் வாஷிங்டன் தங்குவிடுதியில் ஐக்கிய நாடுகள் செலாவணி மற்றும் நிதி மாநாட்டில் பங்கேற்று உரையாடினர். 1944ஆம் ஆண்டு சூலை மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் இவர்களின் கலந்துரையாடலின் பயனாக கையெழுத்தானதே பிரெட்டன் வுட்சு உடன்பாடுகள். பன்னாட்டுச் செலாவணி அமைப்பை கட்டுப்படுத்த வேண்டிய விதிகள், அமைப்புகள் மற்றும் செயல்முறைகளை நிறுவிட பிரெட்டன் வுட்சு திட்டவியலாளர்கள், தற்போது உலக வங்கிக் குழுமத்தின் அங்கங்களாக உள்ள, பன்னாட்டு நாணய நிதியம் (IMF) மற்றும் பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (IBRD) ஆகியவறை உருவாக்கினர். இவை தேவையான அளவில் நாடுகள் ஏற்புறுதி வழங்கிபின் 1945ஆம் ஆண்டிலிருந்து செயலாற்றத் தொடங்கின. பிரெட்டன் வுட்சு முறைமையின் முதன்மை சிறப்புக்கூறுகளாக ஒவ்வொரு உடன்பட்ட நாடும் தங்கள் நாணயக் கொள்கையை டாலருடன் இணைத்த நாணய மாற்று வீதம் இருக்குமாறு அமைத்துக் கொள்வதை கட்டாயமாக்குவதும் பன்னாட்டு நாணய நிதியம் தற்காலிக கையிருப்புத் துண்டை சரிசெய்ய கடன் தருவதுமாகும். ஆகத்து 15, 1971 அன்று ஐக்கிய அமெரிக்கா யாரையும் கலக்காது தன்னிச்சையாக தனது டாலரை தங்கத்திற்கு மாற்றக்கூடிய தன்மையை விலக்கிக் கொண்டது. இதனால் "பிரெட்டன் வுட்சு முறைமை முடிவிற்கு வந்தது;டாலர் அமெரிக்க அரசு வழங்கும் உறுதிமொழியை மட்டும் கொண்ட தாள் நாணயமாக மாறியது"[1]. நிக்சன் அதிர்ச்சி என அறியப்பட்ட இந்த நிகழ்வு பல நாடுகளையும் டாலரை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய நிலையை உருவாக்கியது. மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia