பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு
பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு (obsessive–compulsive disorder, OCD) அல்லது எண்ண சுழற்சி நோய் என்பது ஒரு உளப் பிறழ்ச்சி ஆகும். இதனால் பாதிக்கப்பட்ட ஒருவர் சில நடைமுறைகளை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய அவசியத்தை ("சடங்குகள்") உணர்கிறார், அல்லது சில எண்ணங்களை மீண்டும் மீண்டும் யோசித்துக் ("மிகை எண்ணங்கள்") கொண்டிருப்பார்.[1] பாதிப்புக்குள்ளானவர்களால் சிறிது நேரத்திற்கும் மேல் தங்கள் எண்ணங்கள் அல்லது செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியாது.[1] பொதுவாக இவர்கள் செய்யும் செயல்களில் கை கழுவுதல், பொருட்களை எண்ணுதல் மற்றும் கதவு பூட்டப்பட்டுள்ளதா என்று பார்த்தல் போன்றவை இருக்கும்.[1] சிலருக்குப் பொருட்களைத் தூக்கி வீசவும் கடினமாக இருக்கும்.[1] இந்த நடவடிக்கைகள் அந்த நபரின் தினசரி வாழ்க்கையை எதிர்மறையாகப் பாதிக்கும் அளவிற்கு இருக்கும்.[1] இது பொதுவாக ஒரு நாளில் ஒரு மணிநேரத்திற்கும் மேல் நீடிக்கலாம்.[2] பெரும்பாலான பெரியவர்களுக்கு தாங்கள் அவ்வாறு நடந்துகொள்வது தெரிவதில்லை.[1] இதனுடன் தொடர்புடைய நிலைமைகளாக உடல் நடுக்கங்கள், பதகளிப்புக் கோளாறு, ஆகியவை உள்ளன, முடிவாகத் தற்கொலை செய்துகொள்ளும் ஆபத்தும் உள்ளது.[2][3] இந்நோய்க்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.[1] சில மரபுக் கூறுகள் காரணமாக ஒத்த இரட்டையர்களுக்கு, ஒத்ததாக இல்லாத இரட்டையர்களை விடப் பாதிப்பு அதிகம் இருக்கலாம்.[2] அபாயக் காரணிகளில் குழந்தைகளிடம் தவறான நடத்தை அல்லது பிற மன அழுத்த-தூண்டும் நிகழ்வுகள் அடங்கும்.[2] சிலருக்கு நோய்த்தொற்றுக்களால் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.[2] நோயறிதல் அறிகுறிகளின் அடிப்படையில் இருக்கும், பிற போதைப்பொருள் சார்ந்த அல்லது மருத்துவக் காரணங்கள் கணக்கில் கொள்ளப்படாது.[2] யேல்–பிரவுன் பெருவிருப்ப கட்டாய அளவீடு (Y-BOCS) போன்ற மதிப்பீட்டு அளவுகளின் அடிப்படையில் நோயின் தீவிரநிலை அறியப்படுகிறது.[7] இதே போன்ற அறிகுறிகள் கொண்ட பிற பாதிப்புகளில், பதகளிப்புக் கோளாறு, பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு, உண்ணுதல் கோளாறு, உடல் நடுக்கப்பாதிப்புகள் மற்றும் பெருவிருப்பக்-கட்டாய ஆளுமை மனப்பாதிப்பு ஆகியவை அடங்கும்.[2] இதற்கான சிகிச்சைகளில் புலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சை (CBT) போன்ற ஆலோசனைகள், மற்றும் சில நேரங்களில் மன அழுத்த மேம்பாட்டுச் சிகிச்சைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட செரோடோனின் மறு உபயோகத் தடுப்பான்கள் (SSRIகள்) அல்லது குலோமிபிராமின் போன்ற உளச்சோர்வு போக்கிகள் பயன்படுத்தப்படலாம்.[4][5] OCD-க்கான CBT-இல் மீண்டும் மீண்டும் ஒன்றைச் செய்வதை அனுமதிக்காமல் எதனால் சிக்கல்கள் ஏற்படுகின்றன என்பதை அதிகரித்தல் அடங்கியுள்ளது.[4] SSRIகளில் குலோமிபிராமின் வேலை செய்வது, அதிகளவில் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதால், அது இரண்டாம் நிலை சிகிச்சையாகவே இருக்கும்.[4] இயல்பற்ற மனக்குழப்பநீக்கிகளை SSRI உடன் இணைத்து சிகிச்சை-எதிர்ப்பு நிலைமைகளின் போது கொடுப்பதில் உதவலாம் எனினும் இதிலும் அதிகமான பக்க விளைவுகளின் ஆபத்து உள்ளது.[5][8] சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை எனில், இந்த நிலைமை பல ஆண்டுகளுக்கும் தொடரலாம்.[2] பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு, 2.3% மக்களை அவர்களின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு காலகட்டத்தில் பாதிக்கிறது.[6] ஒரு குறிப்பிட்ட ஆண்டில் இது சுமார் 1.2% அளவிற்கு உள்ளது, மேலும் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.[2] 35 வயதிற்குப் பிறகு பொதுவாக இந்நோய்க்கான அறிகுறிகள் ஆரம்பமாவதில்லை. பாதிக்கப்படுபவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்களுக்கு இது 20 வயதுக்கும் முன்பாகவே ஏற்படுகிறது.[1][2] ஆண் பெண் பேதமில்லாமல் இது பாதிக்கிறது.[1][9] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia