எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணை
எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணை (Spanish Inquisition) அல்லது புனித அலுவலகத்தின் திரிபுக் கொள்கை விசாரணைக்கான நீதிமன்றம் (Tribunal of the Holy Office of the Inquisition) என்பது கத்தோலிக்க ஆட்சியாளர்களாகிய அரகோனின் இரண்டாம் பெர்டினான்டு மற்றும் முதலாம் இசபெல்லா ஆகியோரால் 1478ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் நோக்கம் கத்தோலிக்க மரபினை நாட்டில் பாதுகாக்கவும், திருத்தையின் கட்டுப்பாட்டில் இருந்த மத்தியக்கால சமய விசாரணையின் மாற்றாகவும் இருக்க அமைக்கப்பட்டது. உரோமை திரிபுக் கொள்கை விசாரணை மற்றும் போத்துக்கீய திரிபுக் கொள்கை விசாரணையோடு இதுவும் மிகப்பெரிய திரிபுக் கொள்கை விசாரணையாக கருதப்படுகின்றது. யூதம் மற்றும் இசுலாமிலிருந்து கத்தோலிக்கத்திற்கு மதம் மாறியவர்கள் அதில் நிலைத்திருக்கின்றார்களா எனக்கண்டறியவே இது முதன்முதலில் உருவாக்கப்பட்டது. 1492 மற்றும் 1501இல் யூதர் மற்றும் இசுலாமியர், கத்தோலிக்கத்திற்கு மதம் மாறவேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது. அப்போது மதம் மாறியவர்களை ஒழுங்குபடுத்தவே இது இயற்றப்பட்டது. தங்களின் அரசியல் பலத்தைக்கூட்டவும், எதிரிகளின் பலத்தை குறைக்கவும், சமுதாய அமைதியைக்காக்கவும், உள்நாட்டுப் போரினைத்தடுக்கவும், இவ்வமைப்பினால் குற்றம் சாட்டப்பட்டவரின் உடமைகளை கவரவும் இது இயற்றப்பட்டதாக நம்பப்படுகின்றது. இவ்வமைப்பு எசுப்பானிய அரசின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. 1834இல் எசுப்பானியாவின் இரண்டாம் இசபெல்லாவின் ஆட்சிவரை இவ்வமைப்பு நடப்பில் இருந்தது. வரலாறு![]() அலென்சோ ஹோஜெடா என்னும் தொமினிகன் சபைத்துறவி, அரசி இசபெல்லாவிடம் கத்தோலிக்கத்துக்கு பல யூதர்கள் போலியாக மதம் மாறியதை 1477-1478இல் தான் கண்டதாகக் கூறினார். செவெலியின் பேராயர் பெத்ரோ மென்டோசாவினால் சமர்பிக்கப்பட்ட ஆய்வறிக்கை இதனை உறுதிசெய்தது. இதனால் ஒரு திரிபுக் கொள்கை விசாரணையினை துவங்க அரசு முடிவு செய்து திருத்தந்தையிடம் அனுமதி கேட்டது. துருக்கியருக்கெதிரான போரில் உதவ மாட்டோமெனக்கூறிய போப்பாண்டவர் நான்காம் சிக்ஸ்துசினை பயமுறுத்தி அனுமதி வாங்கப்பட்டது. நவம்பர் 1, 1478இல் திருத்தந்தை நான்காம் சிக்ஸ்துஸ் Exigit Sinceras Devotionis Affectus என்னும் ஆணையில் ஒரு திரிபுக் கொள்கை விசாரணை குழுவினை எசுப்பானிய அரசே அமைக்கவும் அதனை மேற்பார்வையிடவும் அனுமதியளித்தார். மிகுயேல் தெ மொரில்லோ மற்றும் யுவான் தெ சன் மார்தின் ஆகியோரை நீதிபதிகளாகக் கொண்டு இரண்டுவருடங்கள் கழித்து செப்டம்பர் 27, 1480இல் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் முதல் விசாரனை பெப்ரவரி 6, 1481இல் நடத்தப்படு அதன் முடிவில் ஆறுபோர் குற்றவாளிகளாக தீர்பிடப்பட்டு உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டனர். 1492க்குள் எட்டு இடங்களில் இவ்வகை நீதிமன்றங்கள் நிருவப்பட்டிருந்தன. திருத்தந்தை நான்காம் சிக்ஸ்துஸ் பல உண்மைகிறித்தவர்கள் சொந்த பழிவாங்கும் நோக்கிற்காக போலியாக குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்படுவதைக்கண்டு இவ்வமைப்பு அரகோனில் அமைக்கப்பட தடை விதிக்கதார்.[1] அந்தலூசியாவிலிருந்த 1483இல் எல்லா யூதர்களும் வெளியேற்றப்பட்டனர். அரசர் பெர்டினான்டு திருத்தந்தையினை வற்புறுத்தி[2] அக்டோபர் 17, 1483 அன்று அரகோனின் திரிபுக் கொள்கை விசாரணை தலைமை நீதிபதியாக தாமசு தெ தொர்குயிமடாவை நியமித்தார். தொர்குயிமடா தனது பணியின் ஆரம்பத்தில் 33 நாள் அருள் காலம் அளித்து அதில் பதுங்கியிருக்கும் போலிகத்தோலிக்கரை வெளிப்படையாக வந்து மன்னிப்புக்கோர வாய்ப்பு அளித்தார். ஆனாலும் ஓய்வுநாளில் சமைக்காமல் இருப்பவர்கள் (சமயல் புகைக்கூண்டில் புகைவரா வீடுகள்), ஓய்வுநாளுக்கு முன்தினம் அதிகமாக காய்கறி வாங்குபவர், மதம் மாறிய கசாப்புக்கடைக்காரரிடம் மட்டும் கறிவாங்குபவர் ஆகியோர் இனம்காணப்பட்டு விசாரணைக்காக அழைக்கப்பட்டனர். முதலில் சிறு தண்டனைகள் விதிக்கப்பட்டாலும், மீண்டும் தவறியவர்களுக்கு உயிருடன் தீயிட்டு கொல்லப்பட மரணதண்டனை விதிக்கப்பட்டது.[3] 1484இல் திருத்தந்தை எட்டாம் இன்னசெண்ட் இத்தீர்ப்புகளுக்கு தன்னிடம் மேல்முறையீடு செய்யலாம் என அறிவித்தபோதும், அதனை ஏற்காமல் பெர்டினான்டு டிசம்பர் 1484இலும் மீண்டும் 1509இல் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டவர்களை அரச அனுமதியில்லமல் கொல்லவும், உடைமைகளை பறிக்கவும் கட்டளையிட்டார்.[4] இதனால், இவ்வமைப்பு அரச சேவையில் ஒரு பயனுள்ள கருவியாகவும், எசுப்பானிய முடியாட்சியின் அனைத்து பகுதிகளிலும் முழு அதிகாரம் பெற்ற ஒரே நிறுவனமும் ஆனது. எனினும் இதனை தொடர்ந்து எதிர்த்து வந்த அரகொன் மக்கள், 1484 முதல் 1485 வரை கிளர்ச்சியிலும் ஈடுபட்டனர். ஆயினும் செப்டம்பர் 15, 1485இல் நடந்த நீதிபதி பெத்ரோ அரூபெசின் கொலையானது மக்களை யூதர்களுக்கெதிராக திருப்பி திரிபுக் கொள்கை விசாரணைக்கு ஆதரவளிக்க வைத்தது. இவ்விசாரணை 1480 மற்றும் 1530க்கு இடையே மிகவும் தீவிரமாக நடந்தது. பல்வேறு ஆதாரங்கள் இந்த காலத்தில் நடந்த மரணதண்டனைகளின் எண்ணிக்கையில் மாறுபட்ட மதிப்பீடுகளை அளிக்கின்றன; ஹென்றி காமென், சுமார் 2000 பேர் கொல்லப்பட்டிருக்காலாம் என்கின்றார். இதில் பெரும்பாலானோர் யூதர்கள்.[5] விளைவுகள்இதன் மூலம் விசாரிக்கப்பட்ட யூதர்கள் மற்றும் பிறரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சரிவர தெரியவில்லை. குவாதலூப்பே என்னும் சிறிய நகரில் ஒரு ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட செல்வம், ஒரு அரச குடியிருப்பு கட்டும் அலவுக்குப்போதுமானதாக இருந்தது என்பர்.[6] இவ்விசாரணை மக்களிடமிருந்து திருட அரசால் திட்டமிட்டப்படது என பல எசுப்பானியர் கருதியதாக பதிவுகள் உள்ளன. செல்வந்தர் மட்டுமே இவ்விசாரணைக்கு அழைத்துவரப்பட்டு அவர்களின் செல்வங்கள் பரிமுதல் செய்யப்பட்டதாகவும் நம்பப்படுகின்றது.[7] ![]() கார்சியா கார்செல் இதன் மூலம் விசாரிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 150,000 என்றும் இதில் 3% பேர் கொல்லப்பட்டனர் என்றும் மதிப்பிட்டுள்ளார். மொத்தமாக நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை 3,000 மற்றும் 5,000 இடையே இருக்க வாய்ப்பு உள்ளது. (ஒப்பீட்டுக்காக: இதே காலத்தில் ஐரோப்பாவில் சூனியக்காரிகள் வேட்டையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,000 ஆகும்.[8]) தற்கால வரலாற்றாளர்கள் இவ்வமைப்பின் ஆவண பதிவுகளை ஆய்வு செய்யத்தொடங்கியுள்ளனர். 1540 முதல் 1700க்கு இடையேயான இவ்வாவனங்கள் எசுப்பானிய தேசிய ஆவனக்காப்பகத்தில் உள்ளன. இவை அளிக்கப்பட்ட 44.674 தீர்ப்புகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது. இதனை ஆய்வாளர்கள் குஸ்தாவ் ஹெனிங்க்சன் மற்றும் ஜெமி கான்ட்ரியசும் ஆராயும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆயினும் இவ்வாவனங்களில் பல கால இடைவெளி இருப்பதாலும், பல குற்றங்கள் ஆவனப்படுத்தப்படவில்லை என நம்பப்படுவதாலும், இது வரலாற்றின் உண்மை நிலையினை முழுவதுமாக எடுத்துக்காட்டாது.[9] வில்லியம் மான்டர் என்பவர் 1530 முதல் 1630 வரை 1000 பேரும் 1630 முதல் 1730 வரை 250 பேரும் கொல்லப்படிருக்கலாம் என்கின்றார்.[10] இதனையும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia