கலைவாணன்
கலைவாணன் (Kalaivaanan) 1959 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். பி. புல்லையாவின் இயக்கத்தில் [1] உருவான இத் திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், அஞ்சலிதேவி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்.[2][3] திரைக்கதைவிஸ்வநாதனும் அவர் மனைவி பார்வதியும் விஸ்வநாதனின் தம்பி காசிநாத்தை தங்கள் பிள்ளையாக வளர்த்து வருகின்றனர். காசிநாத் தனது குருவாகிய ஏகம்பவாணனிடம் இசை பயின்று சிறந்த இசைக் கலைஞன் ஆகிறான். அவர்களது ஊருக்கு ஒரு இசை நடனக் குழு வருகிறது. அக்குழுவில் மாலா என்ற பெண் ஆடுவதிலும் பாடுவதிலும் வல்லவள். அவளோடு காசிநாத் போட்டி போட்டு அவளை வெல்கிறான். ஆனால் குறைந்த ஜாதிப் பெண்ணோடு ஒரே மேடையில் பாடியதால் காசிநாத்தை அவனது குரு விலக்கி விடுகிறார். இசைக்கும் கலைகளுக்கும் எந்த பேதமும் கிடையாது என காசிநாத் வாதாடுகிறான். ஆனால் ஊர் தர்மாதிகாரி தீர்ப்புப்படி காசிநாத்தை அண்ணன் வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார். காசிநாத் மாலாவை திருமணம் செய்கிறான். இருவரும் பல இடங்களில் மக்களுக்கு இசை நடன விருந்தளிக்கின்றனர். அந்நாட்டு அரசன் தனது அரசவைக் கலைஞனாக காசிநாத்தை நியமிக்கிறான். இது தர்மாதிகாரிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. அரண்மனை நாட்டியக்காரியான அமிர்தத்துடன் சேர்ந்து ஒரு திட்டம் போடுகிறார். அமிர்தம் காசிநாத்தை குடிப்பழக்கத்துக்கு அடிமையாக்கி விடுகிறாள். அவன் குடிகாரனாகிவிட்டபடியால் அரண்மனையை விட்டு வெளியேற்றுமாறு மன்னனுக்கு அமிர்தம் சொல்கிறாள். காசிநாத்தின் தாய் போன்ற அண்ணி பார்வதி தன் கணவனின் கோபத்தையும் பொருட்படுத்தாமல் எவ்வாறு காசிநாத்தை பழைய நிலைக்குக் கொண்டு வருகிறாள் என்பதே மீதிக் கதையாகும். நடிகர்கள்
தயாரிப்புக் குழு
தயாரிப்பு விபரம்1947 ஆம் ஆண்டு வி. சாந்தாராம் மராத்தி மொழியில் லோக்சாஹிர் ராம் ஜோஷி என்ற தலைப்பிலும் இந்தி மொழியில் மத்வாலா ஷயர் ராம் ஜோஷி என்ற தலைப்பிலும் உருவாக்கிய திரைப்படங்களின் கதையை அடிப்படையாகக் கொண்டு தயாரானது இத் திரைப்படம். முதலில் ஜெயபேரி என்ற பெயரில் தெலுங்கில் தயாரிக்கப்பட்ட பின்னர் தமிழிலும் தயாரானது. தமிழ்ப் படத்தை விற்பனை செய்ய முடியாத நிலையில் தயாரிப்புக்கு முதலீடு செய்த டி. வி. எஸ். பிரதிபா சாஸ்திரி தனது நண்பரான எம். ஜி. ராமச்சந்திரனை அணுகினார். தெலுங்குப் படத்தை எம். ஜி. ஆர். பார்த்தார். ஜாதி பேதமற்ற சமூகத்தை உருவாக்க விருப்பம் கொண்டிருந்த அவருக்கு படம் பிடித்துவிட்டது. தன்னை வைத்து இப்படத்தைத் தமிழில் தயாரிக்குமாறு கேட்டாராம் எம். ஜி. ஆர். ஆனால் ஏற்கெனவே ஏ. நாகேஸ்வர ராவை வைத்து தமிழ்ப் படம் தயாரிக்கப்பட்டிருப்பது தெரிய வந்ததும் தனக்குத் தெரிந்த விநியோகஸ்தர்களை அழைத்து 'ஒரு சகோதரர் ஒரு படம் தயாரித்திருக்கிறார். அதைப் பார்த்து வாங்குங்கள்' என்று சொன்னாராம். கலைவாணன் நன்றாக ஓடவில்லை; என்றாலும் எம். ஜி. ஆரின் தலையீட்டால் தயாரிப்பாளர்களுக்கு அதிக நஷ்டம் ஏற்படவில்லை. பாடல்கள்திரைப்படத்துக்கு இசையமைத்தவர் பெண்டியாலா நாகேஸ்வர ராவ். பாடல்களை இயற்றியோர்: தஞ்சை ராமையாதாஸ், ஏ. மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கம்பதாசன், பழனிச்சாமி ஆகியோர். பின்னணி பாடியோர்: டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், கண்டசாலா, எஸ். சி. கிருஷ்ணன், பி. பி. ஸ்ரீநிவாஸ், ரகுநாத் பானிக்கிரஹி, எம். எல். வசந்தகுமாரி, ஜிக்கி, பி. சுசீலா, எஸ். ஜானகி ஆகியோர்.
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia