கவாஜா நசிமுத்தீன்
சேர் கவாஜா நசிமுத்தீன் (Sir Khawaja Nazimuddin, இந்தியப் பேரரசின் விருது) (Urdu: خواجہ ناظم الدین; Bengali: খাজা নাজিমুদ্দীন; சூலை 19, 1894 – அக்டோபர் 22, 1964) டாக்கா நவாப் குடும்பத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். லியாகத் அலி கான் கொலை செய்யப்பட்ட பிறகு அக்டோபர் 15, 1951 முதல் 1953 வரை 2வது பாக்கித்தான் பிரதமராக இருந்தார்.[1] அகில இந்திய முசுலிம் லீக்கின் உறுப்பினரான நசிமுத்தீன் பிரித்தானிய இந்தியப் பேரரசில் வங்காள மாகாணத்தின் இரண்டாவது பிரதமராக பணியாற்றியுள்ளார். பாக்கித்தான் நிறுவப்பட்ட பின்னர் 1948இல் முகமது அலி ஜின்னாவின் மறைவிற்குப் பின்னர் அதன் இரண்டாவது தலைமை ஆளுநராகப் பொறுப்பேற்றார். பிரதமர் லியாகத் அலி கானின் கொலையை அடுத்து நசிமுத்தீன் இரண்டாவது பிரதமரானார்.[2] தீவிர பழைமைவாதியான நசிமுத்தீன் பொதுமக்கள் விரும்பும் அரசியல்வாதியாக இல்லை. இவரது அரசு இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது;ஆனால் உள்நாட்டுக் குழப்பங்களும் வெளிநாட்டு சிக்கல்களும் ஆட்சி கலைக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தன. 1953 இலாகூர் கலவரங்களை அடுத்து நசிமுத்தீன் முதன்முதலாக பஞ்சாபில் படைத்துறையாட்சியை அறிவித்தார். இவரது ஆட்சியில் வறுமை பெருகியதால் மேற்கு பாக்கித்தானில் சோசலிசக் கருத்துக்களும் கிழக்குப் பாக்கித்தானில் அவாமி லீக்கும் வலுப்பெற்றன. வங்காள மொழி இயக்கம் வலுப்பெற்றதை அடுத்து வளர்ந்த அவாமி லீக்கினால் முசுலிம் லீக்கின் தாக்கம் குறையலாயிற்று. வெளிநாட்டுறவில் ஐக்கிய அமெரிக்காவுடனும் சோவியத் ஒன்றியத்துடனும் இந்தியாவுடனுமான உறவுகள் மோசமடைந்தன; இந்நாடுகளில் பாக்கித்தானுக்கு எதிரான உணர்வுகள் மேலோங்கின. ஏப்ரல் 17, 1953இல் நசிமுத்தீன் அரசு கலைக்கப்பட்டது;1954இல் பொதுத் தேர்தலிலும் தோல்வியுற்றார். வங்காளத்தின் மற்றொரு அரசியல்வாதியான முகமது அலி போக்ரா பிரதமரானார். நீண்ட உடல்நலக் கேட்டை அடுத்து 1964இல் தமது 70ஆம் அகவையில் மரணமடைந்தார். நாட்டு மரியாதையுடன் டாக்காவில் அடக்கம் செய்யப்பட்டார். மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia