காந்தி சாகர் அணைக்கட்டு
இந்தியாவின் சம்பல் ஆற்றில் கட்டப்பட்ட நான்கு பெரிய அணைகளில் காந்தி சாகர் அணை ஒன்றாகும். இந்த அணை மத்திய பிரதேச மாநிலத்தின் மண்டோசோர், நீமச் மாவட்டங்களில் அமைந்துள்ளது. இது 62.17 மீட்டர் (204.0 அடி) உயரம் கொண்ட கல்கட்டு ஈர்ப்பு அணையாகும். 22,584 சதுர கிலோ மீட்டர் (8,720 சதுர மைல்கள்) நீர்ப்பிடிப்பு பகுதியிலிருந்து அணைக்கு நீர் வரத்து இருக்கிறது. இந்த அணையின் மொத்த சேமிப்பு திறன் 7.322 பில்லியன் கன மீட்டர் ஆகும். இந்தியப் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு 7 மார்ச் 1954 அன்று [2] இந்த அணைக்கு அடிக்கல் நாட்டினார். பிரதான அணையின் கட்டுமானத்தை முன்னணி ஒப்பந்தக்காரர் துவாரகா தாஸ் அகர்வால் & அசோசியேட்ஸ் நிறுவனம் மேற்கொண்டது. 1960 ஆம் ஆண்டில் அணை கட்டி முடிக்கப்பட்டது. நீரோட்டத்தின் கீழ்ப்பகுதிகளில் கூடுதல் அணை கட்டமைப்புகள் 1970 களில் கட்டி முடிக்கப்பட்டன. இந்த அணை தனது அடிவாரத்தில் 115 மெகாவாட் நீர்மின்சார நிலையத்தைக் கொண்டுள்ளது. 23 மெகாவாட் உற்பத்தி செய்யும் அலகுகள் ஐந்து உள்ளன. இவற்றின் மொத்த ஆற்றல் உற்பத்தி 564 ஜிகாவாட் ஆகும்.[3] மின் உற்பத்திக்கான பயன்பாட்டிற்குப் பின்னர் வெளியிடப்படும் நீரால் 427,000 எக்டேர்கள் (1,060,000 ஏக்கர்கள்) பாசனப் பரப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது. இதற்கு கோட்டா தடுப்பணை உதவிகரமாக உள்ளது. இந்த கோட்டா தடுப்பணை இந்த அணையின் கீழ்ப்பகுதியிலிருந்து 104 கிலோமீட்டர்கள் (65 மைல்கள்) தொலைவில் ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா நகருக்கு அருகில் அமைந்துள்ளது.[2][4][5] அணையின் நீர்த்தேக்கம் பகுதி இந்தியாவில் இரண்டாவது பெரியது ( ஹிராகுட் நீர்த்தேக்கத்திற்குப் பிறகு) ஆகும். மேலும் ஆண்டு முழுவதும் பல வலசை போகின்ற மற்றும் வலசை போகாத பறவைகளை ஈர்க்கிறது. சர்வதேச பறவை வாழ்வு நிறுவனம் (ஐபிஏ) "A4iii" அளவுகோல்களின் கீழ் இந்த நீர்த்தேக்கமானது தகுதி பெற்றுள்ளது. சில இடங்களில் நீர்ப்பறவைகளின் எண்ணிக்கை 20,000 ஐத் தாண்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவியல்சம்பல் நதி (பண்டைய காலங்களில் சம்ரண்யாவதி நதி என்று அழைக்கப்படுகிறது) விந்திய மலைத்தொடரில் 853 மீட்டர்கள் (2799 அடி) உயரத்தில் உற்பத்தியாகிறது. இந்தூருக்கு அருகிலுள்ள மோவ் நகரின் மேற்கு-தென்மேற்கு திசையில் 15 கிலோமீட்டர்கள் (9.3 மைல்கள்) தொலைவில் இந்நதியின் உற்பத்தியிடம் அமைந்துள்ளது. இந்நதி மத்தியப் பிரதேசம் வழியாக வடக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கிப் பாய்ந்து ஒரு குறிப்பிட்ட நேரம் ராஜஸ்தானில் பாய்ந்து பின்னர் ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் இடையே எல்லையை உருவாக்கி தென்கிழக்கு திசைியல் திரும்பி உத்தரப்பிரதேசத மாநிலத்தின் யமுனை நதியோடு சேர்கிறது. இந்நதி உற்பத்தியாகும் இடத்திலிருந்து யமுனா நதியுடன் சங்கமிக்கும் வரை இந்நதியின் மொத்த நீளம் 900 கிலோ மீட்டர்கள் (560 மைல்கள்) ஆகும் [6] சம்பலும் அதன் துணை நதிகளும் வடமேற்கு மத்தியப் பிரதேசத்தின் மால்வா பகுதியைத் தங்கள் வடிநிலப் பகுதியாகக் கொண்டுள்ளன. அதே நேரத்தில் அதன் துணை நதியான பனாஸ் நதி , ஆரவல்லி மலைத்தொடரில் உற்பத்தியாகி, தென்கிழக்கு ராஜஸ்தான் நோக்கிச் செல்கிறது. யமுனாவுடன் அதன் சங்கமத்தில், சம்பல் மற்ற நான்கு நதிகளுடன் (யமுனா, காளி சிந்து ஆறு, குவாரி ஆறு, பாகுஜ் ஆறு) இணைகிறது. இந்த நதிகள் சங்கமிக்கும் இடம் உத்தரப்பிரதேச மாநிலத்தில், பிண்டு மாவட்டம் மற்றும் இட்டாவா மாவட்டம் ஆகியவற்றின் எல்லையில் பாரேவிற்கு அருகில் பச்நாடா எனுமிடத்தில் உள்ளது.[7][8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia