இந்தோர் (Indore) என்பது இந்தியாவின்மத்திய பிரதேச மாநிலத்தின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும்.[16] இது இந்தோர் மாவட்டம் மற்றும் இந்தோர் கோட்டம் ஆகியவற்றின் தலைமையகமாகவும் செயல்படுகிறது. இது மாநிலத்தின் கல்வி மையமாகவும் கருதப்படுகிறது. இங்கு இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் இந்திய மேலாண்மை கழகம் ஆகிய இரண்டு கல்வி நிலைய வளாகங்களைக் கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 553 மீட்டர் (1,814 அடி) உயரத்தில்,[17]மால்வா பீடபூமியின் தெற்கு விளிம்பில் அமைந்துள்ளது. இது நடு இந்தியாவில் உள்ள முக்கியமான நகரங்களில் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ளது. இந்த நகரம் மாநில தலைநகரான போபாலுக்கு மேற்கே 190 கி.மீ. (120 மைல்) தொலைவில் உள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தோரில் 1,994,397 ( மாநகராட்சி) [10] மற்றும் 3,570,295 ( புற நகர் ) மக்கள் தொகை கொண்டுள்ளது.[11] இந்த நகரம் வெறும் 530 சதுர கிலோமீட்டர் (200 சதுர மைல்) நிலப்பரப்பில் பரவியுள்ளது. இந்தோர் மத்திய மாகாணத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட முக்கிய மாநகரமாக உள்ளது.
மத்திய இந்தோரில் உள்ள இந்தோரின் நிதி மாவட்டம், மத்தியப் பிரதேசத்தின் பொருளாதாரத் தலைநகராக செயல்படுகிறது. மேலும் மத்தியப் பிரதேச பங்குச் சந்தையின் அமைவிடமாக உள்ளது.
சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ் சீர்மிகு நகராக உருவாக்கப்படும் 100 இந்திய நகரங்களில் ஒன்றாக இந்தோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.[19] இது சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் முதல் சுற்றுக்கு தகுதி பெற்றது. மேலும் சீர்மிகு நகரங்களாக உருவாக்கப்படும் முதல் இருபது நகரங்களில் ஒன்றாக இது தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தோர் தூய்மையான நகரக் குறித்த கணக்கெடுப்பின் முடிவில் 2016 ஆண் ஆண்டு 25-ஆவது இடத்தைப் பெற்றது.[20] 2017, 2018, 2019, 2020, 2021, 2022-ஆம் ஆண்டுகளுக்கான தூய்மை கணக்கெடுப்பின்படி, தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகளாக இந்தியாவின் தூய்மையான நகரமாக இது தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.[21][22]
சொற்பிறப்பியல்
குப்தர் காலக் கல்வெட்டுகள் இந்தோரை 'இந்திரபுரா' என்று அழைக்கின்றன.[23]இந்திரன் முதன்மைக் கடவுளாக இருக்கும் இந்திரேஷ்வர் மகாதேவர் கோயிலின் நினைவாக இந்த நகருக்கு இப்பெயர் இடப்பட்டது என்று நம்பப்படுகிறது.[24] இந்த இடத்தில் இந்திரன்தவம் செய்ததார் என்றும், இந்திரபுரி முனிவர் முனிவர் கோயிலை நிறுவியதாகவும் நம்பப்படுகிறது. பின்னர், மராத்தியர்களின் ஹோல்கர் குலத்தைச் சேர்ந்தவரும், இந்தோரின் சிற்றரசரான துகோசி ராவ் ஓல்கர் கோயிலைப் புதுப்பித்தார்.[25]
வரலாறு
குப்தர் காலம்
குப்தப் பேரரசின் காலத்திய, கி.பி. 465-ஆம் ஆண்டைச் சேர்ந்த, இந்தோர் செப்பேட்டில் இந்தோரை இந்திரபுரா நகரம் என்று குறிப்பிடுகிறது. இதுவே இந்தோரைப் பற்றிய ஆரம்பகால குறிப்பு ஆகும்.[26] இந்திரபுரா (இன்றைய இந்தோர்) அதன் சூரியன் கோயிலுக்காக அறியப்பட்டது, அங்கு கி.பி. 464-65-இல், குப்த மன்னர் ஸ்கந்தகுப்தர் நகரில் உள்ள சூரியன் கோயிலின் பராமரிப்புக்காக ஒரு நிவந்தம் அளித்தார். அந்தக் கோயிலானது அச்சலவர்மன், பிருகுந்தசிம்மா என்னும் இரு வணிகர்களால் கட்டப்பட்டதாகும்.
பண்டைய இந்தியாவைச் சேர்ந்த குப்தர் கால சாசனம். இது 1888-ஆம் ஆண்டில் ஜான் பிளீட்டால் வெளியிடப்பட்ட செப்பேட்டுப் பிரதியின் ஒளிப்படம். இதில் ஆரம்பகால குப்த மன்னர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள் குறித்து உள்ளது.
மராத்திய இராச்சியம் (ஓல்கர் காலம்)
முகலாயர்களின் மேலாதிக்கத்தின் கீழ், இந்தோரின் கம்பேலின் சமீன்தார்களின் தலைவராக இருந்த ராவ் நந்த்லால் சௌத்ரி,[27][28] இந்தோர் மற்றும் அதன் அருகிலுள்ள சில பகுதிகளைக் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்.[29]
நகரத்தில் அதிகரித்து வரும் வணிக நடவடிக்கை காரணமாக. 1720 வாக்கில், உள்ளூர் பர்கனாவின் தலைமையகம் காம்பலில் இருந்து இந்தோருக்கு மாற்றப்பட்டது. 18 மே 1724-இல், மராத்தியபேஷ்வாபாஜி ராவுக்கு அப்பகுதியின் சௌத் (வரி) வசூலிக்கும் உரிமையை ஐதராபாத் நிஜாம் ஒப்புக்கொண்டார். 1733-ஆம் ஆண்டில், பேஷ்வா மால்வாவின் முழு கட்டுப்பாட்டையும் ஏற்றுக்கொண்டார். மேலும் அவரது தளபதி மல்கர் ராவ் ஓல்கரை மாகாணத்தின் சுபேதாராக (ஆளுநர்) நியமித்தார்.[30]
அகில்யாபாய் ஓல்கர் ஒரு உன்னதமான, தைரியமான பெண்ணாக பெருமையுடன் நினைவுகூரப்படுகிறார். அவர் பல தசாப்தங்களாக இந்தோர் இராச்சியத்தை (அப்போது பரந்த மராத்தியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது) ஆட்சி செய்தார். அவரது ஆட்சி இந்தோரின் வரலாற்றில் பொற்காலமாக நினைவுகூரப்படுகிறது. வேளாண் குடும்பப் பின்னணியில் இருந்து வந்த அவர், இந்தோரின் இளவரசர் காண்டே ராவை மணந்தார். அதன் பிறகு, அவர் அரச மாளிகையில் தங்கினார். பின்னர், அவர் அரசு நிர்வாகத்தில் பயிற்சி பெற்றார். பல சந்தர்ப்பங்களில் இராணுவத்துடன் போருக்குச் சென்றார். அப்போது மராட்டியப் பேரரசு ( சிவாஜியால் நிறுவப்பட்டது) அதன் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தது. வெளிநாட்டவர்களுக்கு எதிராகவும் உள்நாட்டுப் பகைகளுக்கு எதிராகவும் அடிக்கடி சண்டைகள் நடந்தன. 1754-இல் நடந்த ஒரு போரில், அகியால்யாபாயின் கணவர் கொல்லப்பட்டார். அவரது மாமனார் ( மல்கர் ராவ் ) தன் மகனின் மரணத்தால் உடைந்து போனார். தான் மிகவும் அன்பு பாராட்டிய அகில்யாபாயை அழைத்து, “நீ இப்போது என் மகன். என் இராச்சியத்தை நீதான் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார். மல்கர் ராவ் ஓல்கர் 1766-இல் இறந்தார். அவரது மகன் கந்தே ராவ் இறந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு. மல்கர் ராவின் பேரனும், கந்தே ராவின் ஒரே மகனுமான மாலே ராவ் ஓல்கர் 1766-ஆம் ஆண்டில் அகில்யா பாயினால் இந்தோரின் ஆட்சியாளரானார். ஆனால் அவரும் சில மாதங்களில் 1767 ஏப்ரலில் இறந்தார். அகில்யா பாய் தன் மகன் காண்டே ராவ் இறந்த பிறகு இந்தோரின் ஆட்சியாளரானார். இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான கோயில்கள் மற்றும் தர்மசாலைகளை கட்டினார். முந்தைய நூற்றாண்டில் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பால் இடிக்கப்பட்ட இந்துக்கள் புனித யாத்திரை செல்லும் சில புனிதத் தலங்களை புதுப்பித்து, புனரமைத்ததற்காக அவர் சிறப்பாகப் புகழ் பெற்றார். அவர் திரும்மணி செய்த சில தலங்கள்:
அயோத்தி - இராமர் கோயில், சரயு படித்துறை கட்டுமானம்
பத்ரிநாத் - கேதாரேஷ்வர் கோயில் மற்றும் அரி கோயில், தர்மசாலாக்கள் (ரங்கதாசத்தி, பிதார்சாதி, வியாசகங்கா, துங்கநாத், பவாலியில்), தேவப்பிரயாகையில் ஒரு தோட்டம், பசுக்களுக்கான மேய்ச்சல் நிலம்.
ஓங்காரேஸ்வரர் - மாமலேஸ்வர் மகாதேவர், அமலேஸ்வர் மற்றும் திரம்பகேஸ்வர் கோவில்களை புதுப்பித்தல், கௌரி-சோமநாதர் கோவில் கட்டுமானத்தை முடித்தல், தர்மசாலை மற்றும் குளம் வெட்டுதல், சிவலிங்கத்துக்கு வெள்ளி கவசம் நன்கொடை
இராமேசுவரம் - அனுமன் கோவில், இராதா கிருஷ்ணர் கோவில், ஒரு தர்மசாலை, கிணறு, தோட்டம் மற்றும் பல.
1818-ஆம் ஆண்டில், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போரின்போது, மகித்பூர் போரில் ஓல்கர்கள்ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டனர். இதனால் தலைநகரம் மீண்டும் மகேஷ்வரில் இருந்து இந்தோருக்கு மாற்றப்பட்டது. இந்தோரில் பிரித்தானிய குடியிருப்பாளர்களுக்கு ஒரு குடியிருப்பு நிறுவப்பட்டது. ஓல்கர்கள் திவானான தாத்யா ஜோக்கின் முயற்சியின் காரணமாக இந்தோர் அரசு ஒரு சமஸ்தானமாக தொடர்ந்து ஆட்சியில் நீடித்தது. அந்த நேரத்தில், இந்தோரில் பிரித்தானிய நடுவன் முகமையின் தலைமையகம் நிறுவப்பட்டது. முதலில் மால்வாவின் வணிக மையமாக உஜ்ஜயினி இருந்தது. ஆனால் ஜான் மால்கம் போன்ற பிரித்தானிய நிர்வாகிகள் உஜ்ஜயினிக்கு மாற்றாக இந்தோரை உயர்த்த முடிவு செய்தனர். ஏனெனில் உஜ்ஜயினின் வணிகர்கள் பிரித்தானிய எதிர்ப்புக் கருத்துகளை ஆதரித்தனர்.[31]
1906-ஆம் ஆண்டில் நகரத்தில் மின்சார பகிர்மானம் தொடங்கப்பட்டது. 1909-ஆம் ஆண்டில் தீயணைப்புப் படை நிறுவப்பட்டது, மேலும் 1918-ஆம் ஆண்டில், நகரத்தின் முதல் பெருந் திட்டம் (மாஸ்டர் பிளான்) புகழ்பெற்ற கட்டிடக் கலைஞரும் நகரத் திட்டமிடுபவருமான பேட்ரிக் கெடெசால் உருவாக்கப்பட்டது. இரண்டாம் துகோஜிராவ் ஓல்கர் (1852-86) காலத்தில் இந்தோரின் திட்டமிட்ட வளர்ச்சி மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1875-இல் தொடருந்து அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், சிவாஜிராவ் ஓல்கர், மூன்றாம் துகோஜிராவ் ஓல்கர் மற்றும் இரண்டாம் யசுவந்த்ராவ் ஓல்கர் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் இந்தோரில் வணிகம் செழித்தது.
காஷிராவ் ஓல்கர், மகாராஜா இரண்டாம் துக்கோஜிராவ் ஓல்கரின் அண்ணன்.
இரண்டாம் துகோஜிராவ் ஓல்கர், இந்தூர், டபிள்யூ. கார்பென்டர், ஜூன். வரைந்த ஓவியத்திலிருந்து," இல்லஸ்ட்ரேட்டட் லண்டன் நியூஸ், 1857-இல் இருந்து.
1947-இல் இந்திய விடுதலைக்குப் பிறகு, ஓல்கர் சமஸ்தானம், பல அண்டை சமஸ்தானங்களுடன் சேர்ந்து இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. 1948-இல், மத்திய பாரதம் உருவானவுடன், இந்தோர் புதிய மாநிலத்தின் கோடைகால தலைநகராக மாறியது. 1, நவம்பர் 1956-இல், மத்திய பாரதம்மத்தியப் பிரதேசம் என பெயர் மாற்றப்பட்டது. மாநிலத் தலைநகரம் போபாலுக்கு மாற்றப்பட்டது. இன்று கிட்டத்தட்ட 4.5 மில்லியன் (2018) மக்கள் வசிக்கும் நகரமான இந்தோர், பாரம்பரிய வணிக நகர்ப்புற மையம் என்பதிலிருந்து மாநிலத்தின் நவீன வணிகத் தலைநகராக மாற்றப்பட்டுள்ளது.
காலநிலை
இந்தூர் ஈரப்பதமான மிதவெப்ப மண்டல காலநிலை ( கோப்பென் காலநிலை வகைப்பாடு ) மற்றும் வெப்பமண்டல சவன்னா காலநிலை ஆகியவற்றுக்கு இடையேயான காலநிலையைக் கொண்டுள்ளது. இந்த நகரம் அதிக உயரத்தில் இருப்பதால், வெப்பமான மாதங்களில் கூட இரவுகள் ஒப்பீட்டளவில் குளிராக இருக்கும். இது ஷாப்-இ-மால்வா என்று அழைக்கப்படுகிறது. இங்கு கோடை, பருவமழை, குளிர்காலம் என மூன்று வெவ்வேறு பருவங்கள் காணப்படுகின்றன. குளிரான வெப்பநிலை 1936 சனவரியில் 1.1 °C (34.0 °F) ஆக பதிவாகி உள்ளது.[32]
தென்மேற்கு பருவமழை காரணமாக சூன்-செப்டம்பர் மாதங்களில் இந்தோரில் 700 முதல் 800 மில்லிமீட்டர்கள் (28 முதல் 31 அங்குலம்) வரை மிதமான மழை பெய்யும்.
தட்பவெப்ப நிலைத் தகவல், இந்தோர் (1981–2010, அதிகபட்சம் 1949–2012)
இந்தோர் மத்திய பிரதேசத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக உள்ளது. இது மத்திய இந்தியாவின் மிகப்பெரிய பெருநகரம் ஆகும். 2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தோர் நகரத்தின் மக்கள் தொகை (மாநகராட்சி மற்றும் வளர்ச்சியின் கீழ் உள்ள பகுதி) 1,994,397 ஆகும்.[10][38] இந்தோர் பெருநகரத்தின் மக்கள்தொகை (அண்டை புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கி) 2,170,295 ஆகும்.[11] 2011-ஆம் ஆண்டில், நகரத்தின் மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர மைலுக்கு 25,170 பேர் (சதுர கி.மீ.க்கு 9,718) ஆகும். இது மத்தியப் பிரதேசத்தில் 100,000 க்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட அனைத்து நகராட்சிகளிலும் மிகவும் அடர்த்தியான மக்கள்தொகை கொண்டது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 1,502,775 பேர் கல்வியறிவு பெற்றவர்கள், இது மொத்த மக்கள்தொகையில் 75.4% ஆகும்.
இந்தோர் நகரத்தின் அதிகாரப்பூர்வ மொழியாக இந்தி உள்ளது. அது பெரும்பான்மையான மக்களால் பேசப்படுவதாக உள்ளது. மால்வி, நிமாடி, புந்தேலி போன்ற பல இந்தி பேச்சுவழக்குகள் கண்ணியமான எண்ணிக்கையில் பேசப்படுகின்றன.
↑"Census of India 2011"(PDF). censusindia.gov. Directory of Census Operations. 2011. Archived from the original(PDF) on 31 May 2016. Retrieved 13 March 2016.
↑"Malvi - Ethnologue". Eberhard, David M., Gary F. Simons, and Charles D. Fennig (eds.). 2019. Ethnologue: Languages of the World. Archived from the original on 30 March 2019. Retrieved 30 March 2019.