கார்த்திக் ராஜ்
கார்த்திக் ராஜ் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகர் ஆவார். இவர் 2011-ஆம் ஆண்டு முதல் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் பிரதானமாக நடிப்பவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அலுவலகக் காதல் தொடர்பான ஆபீஸ் (2013-2015) என்ற தொடரிலும் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குடும்பத் தொடரான செம்பருத்தி என்பதிலும் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இவரது தொலைக்காட்சி தொடர்களின் வெற்றி இவரை தமிழ் தொலைக்காட்சித் துறையில் மிகவும் பாராட்டப்பட்ட நடிகர்களில் ஒருவராக நிலைநிறுத்தியுள்ளது. ஆரம்ப வாழ்க்கைதமிழ்நாட்டின் சென்னையில் கார்த்திக்ராஜ் எனப் பிறந்த கார்த்திக் தனது பெற்றோருக்கு இரு மகன்களில் மூத்தவராகப் பிறந்தார். இவரது தந்தை, காரைக்குடிக்கு அருகிலுள்ள பள்ளத்தூர் எனும் கிராமத்து செல்வந்தர்களின் வம்சாவளியை சேர்ந்தவர், ஆனால் தன் இளவயதில் கால சூழ்நிலையால் சென்னைக்குக் குடிபெயர்ந்திருந்தார்.[1] சென்னையில் திரைப்படத் துறையில் 30 ஆண்டுகள் பணிபுரிந்தவர், ஏ.எல்.ஸ்ரீனிவாசனின் கீழ் தயாரிப்பு மேலாளராகத் பணி செய்யத் தொடங்கி, பின்னர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராகப் பணிபுரிந்து, இறுதியில் நிர்வாகத் தயாரிப்பாளராக உயர்ந்தார்.[1] கார்த்திக் இத்துறையில் நுழைவதற்கு அவரும் ஒரு முக்கிய காரணியாவார். ஒரு சிறந்த மாணவனாக திகழ்ந்தாலும்,[2] படிப்பில் நாட்டமில்லாததால், 12-ஆம் ஆண்டிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்ட கார்த்திக், வரைகலை வடிவமைப்பு பட்டயத்தில் (Diploma of Visual Design) தேர்ச்சிபெறும் எண்ணத்தில் இணைந்துகொண்டார்.[3] இருப்பினும், அவரது குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தால், அவர் தனது மேற்கட்டப் படிப்பை நிறுத்திவிட்டு, ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் வாணிகப் பிரிவில் பணியாற்றத் தொடங்கினார், பின்னர் அந்நிறுவனத்தினுடைய தயாரிப்பகத்தில் உதவி தயாரிப்பாளராக பணியாற்றினார்.[1][4] இதைவிட வருமானம் தரக்கூடிய ஒரு நல்ல வேலையைத் தேடிக்கொண்டிருந்தபோது, அவரது பழைய அயலவர் திரைக்கதை ஆசிரியர், எஸ். ரமண கிரிவாசனால், விஜய் தொலைக்காட்சியின் 'அது இது எது' நிகழ்ச்சியில் கலைஞர் ஒருங்கிணைப்பாளராகப் (Artist Coordinator) பணிபுரிய பரிந்துரைக்கப்பட்டார்.[5] நடிப்புத் துறைஇவர் விஜய் தொலைக்காட்சியில் தொழிலாற்றிய 3-ஆம் வருடத்தில், கனா காணும் காலங்கள்: கல்லூரியின் கதை என்ற தொடரில் நடிப்பதற்கான சந்தர்ப்பம் இவரைத் தேடி வந்தது.[4] விஜய் தொலைக்காட்சியில் 2011-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான அந்தத் தொடரில் 'கார்த்திகேயன்' என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை சாய் பிரமோதித்தா நடித்தார். இதனை அடுத்து, அதே தொலைக்காட்சியில் 2013-ஆம் ஆண்டு பணி சார்ந்த நகைச்சுவைத் தொடரான ஆபீஸ் (2013-2015) எனும் தொடரில் 'கார்த்திகேயன்' என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, இவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ராஜ் நடித்திருந்தார். இத் தொடரின் காதல் காட்சிகள் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி, மக்கள் மத்தியிலும் பெரும் வெற்றியை பெற்றது.[6] மேலும், 2014-ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஜோடி நம்பர் ஒன் பருவம் 8[7] என்ற நடனப்போட்டி நிகழ்ச்சியில் நடிகை நேன்ஸி ஜெனிஃபரின் ஜோடியாக பங்கேற்று, போட்டியின் இடைநடுவில் தோல்வியுற்று வெளியேற்றப்பட்டார். இவரது திரைப் பாத்திரங்களைத் தவிர, 2015-ஆம் ஆண்டு 'நாளைய இயக்குனர்' பருவம் ஐந்தில் வெளியான 'யானும் நீயும்' என்ற குறும்படத்தில் K5 இல் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் பிரேமுக்காகவும் (வெற்றி கதாப்பாத்திரம்) குரல் கொடுத்துள்ளார்.[8] இவர் 2017-ஆம் ஆண்டில் 465[9][10] என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். இதை அடுத்து நாளளவில் வெளியிடப்பட்ட நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல[11] என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். இத் திரைப்படங்கள் மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்க்காது போனதால், எதிர்பார்த்த வெற்றியை ஈன்று கொடுக்கவில்லை. ஆபிஸ் தொடரை அடுத்து, சுமார் ஒரு 3-வருட இடைவெளியின் பின் மீண்டும் இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வந்தார். 2017-ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய செம்பருத்தி என்ற தொடரில் 'ஆதித்யா' என்ற கதாபாத்திரத்தில் நடிகை பிரியா ராமனின் மகனாகவும் மற்றும் புதுமுக அறிமுகமாகிய ஷபானா ஷாஜஹானுடன் ஜோடியாகவும் இணைந்தார்.[12][13] இந்தத் தொடர் இவருக்கு மாபெரும் வெற்றியையும், மக்களிடம் பெரும் வரவேற்பையும், அதீத புகழையும் ஈன்று கொடுத்தது.[14] மேலும் இவர் 2019-இல் ஜீ தமிழினூடாக வெளியிட்ட முகிலன் எனும் இணையவழித் தொடரில் ரம்யா பாண்டியனுடன் இணைந்து நடித்தார். இது அக்காலத்தில் பல தமிழர்களால் அதிகம் பார்க்கப்பட்ட ஒரு உள்நாட்டு இணையவழித் தொடராக சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது. இதற்காக இவர் செம்பருத்தி படப்பிடிப்பின் போதே தனது உடல் எடையை அதிகரிப்பது மற்றும் நீளமான தாடியை வளர்ப்பது உள்ளிட்ட காரியங்களில் ஈடுபட்டார். இந்த மாற்றங்கள், அவரது 'ஆதித்யா' கதாபாத்திரத்தைப் பார்த்துப் பழகிய பார்வையாளர்களிடமிருந்து விமரசனங்களைக் கொணர்ந்தது. இருப்பினும், இவர் இரண்டு படப்பிடிப்புகளுக்கும் அர்ப்பணிப்போடு நேரம் ஒதுக்கி, ஒரே நேரத்தில் 34-நாட்களில் முகிலன் தொடருக்கான படப்பிடிப்பு காரியங்களை செய்து முடித்தார். இத் தொடர் ஐப்பசி 2020-இல் இணைய வாடிக்கை சேவையின் மூலம் வெளியிடப்பட்டது.[15] ஆயினும், மார்கழி 2020-இல், ஜீ தமிழின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டபடி, "எதிர்பாராத காரணங்களால்" கார்த்திக் ராஜ் செம்பருத்தி தொடரிலிருந்து நீங்கினார்.[16][17] இந்தக் காலகட்டத்தில் அவர் 'K Studios' எனும் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி, தனது சுயதயாரிப்பிலும், அவரின் ஆதரவாளர்களின் பங்களிப்பிலும் ஒரு திரைபடத்தை உருவாக்கும் பணிகளைத் தொடங்கினார்.[18] இதற்கான முன் தயாரிப்பு, ஆவணி 2021-இல் தொடங்கியது. படப்பிடிப்பு அதே ஆண்டில் கார்த்திகை மாதத்தில் தொடங்கியது. ஐப்பசி 2022-இல் 'பிளாக் 'n' வைட்' எனப் பெயரிடப்பட்டு, புதுமுகமான ஆர்த்திகாவின் அண்ணனாகவும் மற்றும் நடிகை ஷ்ரவ்னிதா ஸ்ரீகாந்த் உடனும் கார்த்திக் இணைந்து நடித்த இத் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது வைகாசி 2023-இல் ஜீ தமிழினூடாக 2023-இல் நேரடித் தொலைக்காட்சி திரைப்படமாக விநியோகிக்கப்பட்டது.[19] இதனையடுத்து ஒரு 2-வருட இடைவெளியின் பின்னர், மீண்டும் 2022-ஆம் ஆண்டில் நடிகை மீரா கிருஷ்ணனின் மகனாகவும், தன்னுடன் ஏற்கனவே நடித்த ஆர்த்திகாவுடன் ஜோடி சேர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திகை தீபம் என்னும் தொடரில் நடித்து வந்தார்.[20] 600-க்கும் அதிகமான அத்தியாயங்களைத் தாண்டிய[21] இத்தொடரின் 2-ஆவது பருவம் 2024-ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் புதுமுகமான வைஷ்ணவி சதீஷ் இவரது ஜோடியாக நடிக்கிறார்.[22][23] தனிப்பட்ட வாழ்க்கைகார்த்திக் தனது 25வது வயதில் யாஷி என்னும் இஸ்லாமியப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்திருந்தார்,[24] ஆனால் கருத்துவேறுபாட்டால் சில வருடங்களின் பின்பு இருவரும் பிரிந்தனர். இவர்களது விவாகரத்து 2019-2020 காலகட்டத்தில் இடம்பெற்றது. திரைப்படவியல்திரைப்படங்கள்
தொடர்கள்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
விருதுகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia