கிருஷ்ண சந்திர கஜபதி
கிருஷ்ண சந்திர கஜபதி (Krushna Chandra Gajapati) (26 ஏப்ரல் 1892 - 25 மே 1974), மகாராஜா சிறீ சிறீ கிருஷ்ண சந்திர கஜபதி நாராயண தேவன் என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு முக்கிய ஆளுமையாகவும், கட்டிடக் கலைஞராகவும் கருதப்படுகிறார். 1936 ஆம் ஆண்டு ஒடிசா மாநிலம் உருவாவதில் முக்கியப் பங்காற்றினார். இவர் பரலகேமுண்டி தோட்டம் (அப்போது ஒடிசாவின் கஞ்சாம் மாவட்டம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் வட்டம்) மற்றும் ஒடிசாவின் பூரி மாவட்டத்தின் தெலங்குத் தோட்டம் ஆகியவற்றின் உரிமையாளராக இருந்தார். இவரது குடும்பம் கீழைக் கங்க வம்சத்தைச் சேர்ந்தது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஒடிசாவின் முதல் பிரதமரானார். ஒடிசாவின் இன்றைய கஜபதி மாவட்டம் இவரது பெயரால் அழைக்கப்படுகிறது. [1] சொந்த வாழ்க்கைகிருஷ்ண சந்திரன், 1892 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி பரலகேமுண்டி ஜமீந்தார் கௌர சந்திர கஜபதி மற்றும் அவரது மனைவி இராதாமணி தேவி ஆகியோருக்குப் பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை பரலகேமுண்டியில் உள்ள உள்ளூர் மகாராஜா உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர் மேல்படிப்புக்காக சென்னையிலுள்ள நியூவிங்டன் கல்லூரிக்குச் சென்றார். சென்னையில் படிக்கும் போது, தந்தையை இழந்தார். தனது கல்வியை முடித்த பிறகு, பரலகேமுண்டிக்குத் திரும்பிய இவர், 1913 ஆம் ஆண்டில் கர்சவான் மாநிலத்தின் இளவரசியை மணந்தார். அதே ஆண்டில் 1913 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி தனது தோட்டத்தின் அடுத்த ஜமீந்தாரானார். சுதந்திர ஒடிசா மாநிலம் உருவாவதில் பங்குஇவர், ஒடிசாவில் சமூக மற்றும் தொழில் புரட்சி ஏற்படக் காரணமாக இருந்த உத்கல் சம்மிலானியின் மற்ற முக்கிய உறுப்பினர்களான உத்கல் கௌரவ் மதுசூதன் தாசு, உத்கலமணி கோபபந்து தாஸ், பகிர் மோகன் சேனாபதி ஆகியோருடன் சேர்ந்து ஒரிசா-பீகார்-வங்காள மாகாணத்தில் உள்ள ஒரியா பேசும் பகுதிகளை இணைத்து தனி ஒடிசா மாநிலத்தைக் கோரினார். [2] இவர்களின் முயற்சியால் 1 ஏப்ரல் 1936 இல் ஒடிசா தனி மாநிலம் உருவாக்கப்பட்டது [3] இவரது நெடிய அரசியல் போராட்டத்தால் சிதறி இருந்த ஒடிசா மாநிலத்தை ஒன்றிணைத்து 1936ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் நாள் புதிய ஒடிசா மாநிலம் உருவாக்கப்பட்டது. இந்த நாளை ஆண்டுதோறும் மக்கள் ஒடிசா நாளாகக் கொண்டாடி வருகின்றனர். விசாகப்பட்டணம் மாவட்டத்தில் இருந்த இவரது தோட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது - தலைநகரமும் மேலும் சில முக்கிய பகுதிகளும் ஒடிசாவின் கீழ் வந்தது. மீதமுள்ள தெலுங்கு பெரும்பான்மையான பகுதிகள் சென்னை மாகாணத்தில் இருந்தன. 1937 இல், ஒடிசாவின் முதல் ஆளுநர் சர் ஜான் ஆஸ்டின் அப்பேக் கிருஷ்ண சந்திரனை அமைச்சரவை அமைக்க அழைத்தார். 1 ஏப்ரல் 1937 முதல் ஜூலை 18, 1937 வரை ஒடிசாவின் முதல் பிரதமராக இருந்தார். 24 நவம்பர் 1941 இல் இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 30 ஜூன் 1944 வரை தொடர்ந்து பணியாற்றினார். சமூக மற்றும் பரோபகார சேவைகள்உத்கல் பல்கலைக்கழகம், எஸ்சிபி மருத்துவக் கல்லூரி, கட்டாக்கின் வித்யாதர்பூரில் உள்ள புகழ்பெற்ற மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம், பெர்காம்பூரில் உள்ள எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவுவதில் இவர் முக்கியப் பங்காற்றினார். இவர் பல மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், நவீன விவசாய பண்ணைகள் மற்றும் 1281 நீர்ப்பாசன ஏரிகள் அல்லது குளங்கள் போன்றவற்றை நிறுவினார். இந்த காரணத்திற்காக, பிரிக்கப்படாத கஞ்சாம் மாவட்டத்திற்கு 'ஒடிசாவின் அரிசி கிண்ணம்' என்றழைக்கப்படுகிறது. கஜபதியின் கீழ், மனிதநேயம், அறிவியல், விவசாயம், மருத்துவம் மற்றும் பொறியியல் போன்றவற்றில் ஆயிரக்கணக்கான ஏழை மற்றும் திறமையான மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. இவை தவிர, பல்வேறு துறைகளில் கலை மற்றும் ஆராய்ச்சி அறிஞர்களின் நன்கு அறியப்பட்ட புரவலராக இருந்தார். பத்மஸ்ரீ டாக்டர் சத்யநாராயண ராஜ்குருவின் வரலாற்று ஆராய்ச்சி மற்றும் புகழ்பெற்ற ஒடிசி இசைக்கலைஞரும் இவரது அரசவை இசைக்கலைஞரும் நண்பரும் ஆன அப்பன்னா பாணிகிரகி கிராமபோன் பதிவுகளை தயாரிப்பதை இவர் ஆதரித்தார். பழங்காலக் கவிஞர்கள் மீது, குறிப்பாக பரலகேமுண்டியின் கவிஞர் கோபாலகிருஷ்ணனிடம் ஈடுபாடுடன் இருந்தார். பண்டைய ஒடிய இசை மற்றும் இலக்கியத்தில் நிபுணராகவும் இருந்தார். மேலும் இவருக்கு மனு ஜௌ நஹி மா, ராதாதாரா சுமதுரா போன்ற பல அசல் இசையமைப்புகள் உள்ளன. அரசியல் சேவைகள் மற்றும் மரியாதைகள்கிருஷ்ண சந்திரா முதல் உலகப் போரில் படைத் தளபதியாகப் பணியாற்றினார். போரின் போது இந்திய ராணுவத்திற்கு இவர் ஆற்றிய சேவைகளை பாராட்டி, 1920ல் அப்போதைய இந்திய தலைமை ஆளுநர் சனத் என்ற பட்டம் வழங்கினார். லின்லித்கோ பிரபுவின் தலைமையில் விவசாயத்திற்கான அரச கழக உறுப்பினராக இருந்தார். மேலும், சென்னை சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார். இவருக்கு உத்கல் பல்கலைக்கழகம் மற்றும் பெர்கம்பூர் பல்கலைக்கழகம் கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது. மேலும் 1946 புத்தாண்டு மரியாதையில் இந்தியப் பேரரசின் நைட் கமாண்டர் ஆக நியமிக்கப்பட்டார். கிருஷ்ண சந்திரா 1974 மே 25 அன்று தனது 82வது வயதில் காலமானார். ஒடிசாவின் பரலகெமுண்டியில் முழு அரச மரியாதையுடன் இவரது உடல் தகனம் செய்யப்பட்டது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia