கிளாசுக்கோ பன்னாட்டு வானூர்தி நிலையம்
கிளாசுக்கோ பன்னாட்டு வானூர்தி நிலையம் ( Glasgow International Airport) (ஐஏடிஏ: GLA, ஐசிஏஓ: EGPF) (முன்னதாக கிளாசுக்கோ அப்பாட்சிஞ்ச் வானூர்தி நிலையம்) இசுக்கொட்லாந்திலுள்ள ஓர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இது கிளாசுக்கோவின் மையத்திலிருந்து மேற்கே 6 கடல் மைல்கள் (11 km; 6.9 mi) தொலைவில்[1] ரென்ப்ரெசையரில் ரென்ப்ரெக்கும் பாய்சுலேக்கும் அண்மையில் அமைந்துள்ளது. இந்த வானூர்தி நிலையத்தின் ஊடாக 2011ஆம் ஆண்டில் ஏறத்தாழ 6.9 மில்லியன் பயணியர் பயணித்துள்ளனர். இது 2010ஆம் ஆண்டு எண்ணிக்கையை விட 5.1% கூடுதலாகும். இசுக்கொட்லாந்தில் எடின்பர்கு வானூர்தி நிலையத்திற்கு அடுத்ததாக இரண்டாவது பெரிய வானூர்தி நிலையமாக இது விளங்குகிறது. மேலும் ஐக்கிய இராச்சியத்தில் எட்டாவது போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக உள்ளது. இந்த நிலையத்தை பயன்படுத்தும் முதன்மை வான்பறப்புச் சேவை நிறுவனங்கள்: பிரித்தானிய வான்வழி, லோகான்ஏர். லோகான்ஏர் இதனை தனது அச்சுநிலையமாக பயன்படுத்துகிறது. மற்ற பெரிய சேவை நிறுவனங்கள்: பிஎம்ஐ பிராந்திய சேவை, பிளைபெ, ஈசிஜெட், ஜெட்2, தாமசு குக் எயர்லைன்சு, தாம்சன் ஏர்வேசு. கிளாசுக்கோ வானூர்தி நிலையம் 1966இல் திறக்கப்பட்டது. துவக்கத்தில் இங்கிருந்து ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பாவின் சேரிடங்களுக்கே சேவைகள் வழங்கப்பட்டன. 1975இல் பிரித்தானிய வானூர்திநிலைய ஆணையம் கையகப்படுத்தியது. 1980இலிருந்து பன்னாட்டுச் சேவைகள் உலகின் பல பகுதிகளுக்கு வழங்கப்படலாயிற்று. சூன் 30, 2007 இல் கிளாசுக்கோ வானூர்தி நிலையம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானது. புரொப்பேன் மாழைக்குப்பிகளை நிரப்பிய செரூக்கீ ஜீப் ஒன்று முதன்மை முனையக் கட்டிடத்தினுள் ஒட்டிவரப்பட்டது. குறிப்பிட்டளவு சேதம் விளைவித்த இந்நிகழ்வில் தீவிரவாதி ஒருவர் உயிரிழந்தார்; நால்வர் காயமடைந்தனர்.[4] மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia