சதீசு சந்த்ர சமந்தா
சதீசு சந்திர சமந்தா (Sathish Chandra Samanta) (15 திசம்பர் 1900 - 4 சூன் 1983) ஒரு இந்திய விடுதலை இயக்க ஆர்வலரும் மற்றும் 1952-77 வரை மக்களவையில் உறுப்பினராக இருந்தவரும் ஆவார். 15 வயதில் இவர் தனது குருவான சுவாமி பிரஜ்னானந்தா சரசுவதியால் செல்வாக்கு செலுத்தப்பட்டு பிரம்மச்சாரிய வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு மக்களுக்கு சேவை செய்யும் வாழ்க்கையை எடுத்துக் கொண்டார். ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடுவதற்காக வங்காளப் பொறியியல் கல்லூரியில் (பின்னர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் இணைக்கப்பட்ட கல்லூரி) தனது இரண்டாம் ஆண்டு படிப்பில் இருந்து விலகினார். இந்திய தேசிய காங்கிரசின் உள்ளூர் கிளையால் ஏற்பாடு செய்யப்பட்ட நடவடிக்கைகள் மூலம் இவர் பணியாற்றத் தொடங்கினார். பின்னர், இவர் தம்லக் காங்கிரசு குழுவின் தலைவரானார். மேலும், பல தசாப்தங்களாக ஒரு தீவிர காங்கிரசு உறுப்பினராக இருந்தார். இவர் தலைமைத்துவ குணங்கள் மற்றும் பிற ஆக்கபூர்வமான பணிகளுக்கு பெயர் பெற்றவர். இவரது தலைமைத்துவ பண்புகள் தாம்ரலிப்தா தேசிய அரசு என்று பெயரிடப்பட்ட ஒரு இணை அரசாங்கத்தின் உருவாக்கத்தின் போது கவனிக்க முடியும். வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, தம்லக்கில் இந்த அமைப்பு 17 திசம்பர் 1942 இல் உருவாக்கப்பட்டது. சமந்தா, சூன் 1943 இல் கைது செய்யப்படும் வரை அதன் செயல்பாட்டைக் கவனித்து வந்தார். இது செப்டம்பர் 1944 வரை நீடித்தது. இது சூறாவளி நிவாரணப் பணிகளை மேற்கொண்டது, பள்ளிகளுக்கு மானியங்களை வழங்கியது மற்றும் ஆயுதமேந்திய வித்யுத் வாகினியை ஒருங்கிணைத்தது [1] தனது அரசியல் பணிகளுக்கு மேலதிகமாக, குடிமை ஆரோக்கியத்தை மேம்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் கலந்துகொண்டு மக்களுக்கு உதவினார். மலேரியாவைத் தடுப்பதற்காக சாலைகள் மற்றும் மாசுபட்ட குளங்களை சுத்தம் செய்தல், வாந்திபேதி நோயாளிகளுக்கு செவிலிய சேவைகள், இலவச மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்தல், தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் கல்வியறிவைப் பரப்புதல் போன்ற நடவடிக்கைகளை இவர் ஏற்பாடு செய்து வழிநடத்தினார். சுதந்திரத்திற்குப் பிறகு, சதீஷ் சந்திர சமந்தா மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1952 ஆம் ஆண்டில் தாம்லுக் மக்களவைத் தொகுதியிலிருந்து முதலாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், 1957, 1962, 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் அதே தொகுதியிலிருந்து மீண்டும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia