சாகரவ் பரிசு
சாகரவ் பரிசு (Sakharov Prize) அலுவல்முறையாக கருத்துரிமைக்கான சாகரவ் பரிசு திசம்பர் 1988இல் ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் மனித உரிமைகளுக்காகவும் சிந்தனைச் சுதந்திரத்திற்காகவும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த தனிநபர்கள்/குழுவினரை பெருமைப்படுத்தும் வண்ணம் உருசிய அறிவியலாளர் ஆந்திரே சாகரவ் நினைவாக நிறுவப்பட்ட பரிசாகும்.[2] ஐரோப்பிய நாடாளுமன்ற வெளியுறவுக் குழுவும் வளர்ச்சிக் குழுவும் தயாரிக்கும் வரைவுப் பட்டியலிலிருந்து வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்படுகின்றது.[1] பரிசுத் தொகையாக €50,000 வழங்கப்படுகின்றது.[1] முதன்முறையாக இப்பரிசு தென்னாப்பிரிக்க நெல்சன் மண்டேலாவிற்கும் உருசிய அனடோலி மார்ச்சென்கோவிற்கும் இணைந்து வழங்கப்பட்டது. 1990 ஆண்டிற்கான பரிசு ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்டபோதும் சிறையில் இருந்தமையால் 2013ஆம் ஆண்டுதான் வழங்க முடிந்தது. முதல் அமைப்பொன்றுக்கு வழங்கிய பரிசு அர்கெந்தீனாவின் பிளாசா டெ மாயோவின் மதர்களுக்கு 1992இல் வழங்கப்பட்டது. சாகரவ் பரிசு பெற்றவர்களில் சிலர் இன்னமும் கடுமையான அரசியல் ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றனர். பெலருசிய இதழாளர் சங்கம் (2004), டாமாசு டெ பிளாங்கோ, கிலெர்மோ பாரினாசு (கூபா, 2005 & 2010), அலெக்சாண்டர் மிலின்கீவிச் (பெலாரசு, 2006), கூ யா (சீனா, 2008) ஆகியோர் சிலராவர். 2011இல் பரிசு பெற்ற ரசான் சைதூனே 2013இல் கடத்தப்பட்டார்; இன்னமும் காணக்கிடைக்கவில்லை. 2012இல் பரிசு பெற்ற நஸ்ரன் சோடூதெ செப்டம்பர் 2013இல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்; நஸ்ரனும் அவருடன் பரிசு பெற்ற சாபர் பனாகியும் இன்னமும் ஈரானை விட்டு வெளியேறத் தடை செய்யப்பட்டுள்ளனர். சாகரவ் பரிசு பெற்ற மூவருக்கு பின்னர் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது: நெல்சன் மண்டேலா, ஆங் சான் சூச்சி, மலாலா யூசப்சையி. 20 அக்டோபர் 2021 அன்று சாகரவ் பரிசு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ருசியா எதிர்கட்சித் தலைவர் அலெக்சேய் நவால்னிக்கு வழங்கப்பட்டது.[3] சாகராவ் பரிசு பெற்றவர்கள் பட்டியல்
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia