சோ. இளமுருகனார்
புலவர்மணி சோ. இளமுருகனார் (So. Ilamuruganar, சூன் 11, 1908 – திசம்பர் 17, 1975) ஈழத்துத் தமிழறிஞரும், புலவரும் ஆவார். அரசியல் சார்பான தமிழுணர்ச்சி மிக்க ஆக்கங்களை ஆக்கியவர். நாடகாசிரியர், கண்டன ஆசிரியர் எனப் பன்முகம் கொண்டவர். வாழ்க்கைக் குறிப்புஇளமுருகனாரின் இயற்பெயர் பாலசுப்பிரமணியம். இவர் 1908 யூன் 11 (கீலக ஆண்டு வைகாசி 30 வியாழக்கிழமை) அன்று யாழ்ப்பாணம், நவாலியூரில் சோமசுந்தரப் புலவருக்கும் சின்னம்மையாருக்கும் பிறந்தார். நவாலியில் இராமலிங்க உபத்தியாயரிடம் ஆரம்பக் கல்வியைக் கற்று, கிராமப் பள்ளியிலேயே தொடக்கக் கல்வியை முடித்தார். பின்னர் தந்தை ஆசிரியப் பணியாற்றிய வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் ஆங்கிலமும் தமிழும் கற்றார். தந்தையிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களையும், சோதிடக் கலையையும் கற்றுத் தேறினார். பாடசாலைக் கல்வியை முடித்த பின்னர் ஆனைக்கோட்டை அரசினர் வித்தியாசாலை, கட்டுடை சைவத் தமிழ்ப் பாடசாலை, அளவெட்டி அருணோதயக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் இருமொழி ஆசிரியராகப் பணியாற்றினார். பணியில் இருந்துகொண்டே தமிழ்ப் பண்டிதர் தேர்வை எடுத்து 'பண்டிதர்' பட்டம் பெற்றார். பின்னர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று பயிற்சி பெற்ற ஆசிரியரானார்.[1] இளமுருகனார் ஈழத்துத் தமிழறிஞர்களான சி. கணேசையர், பண்டிதர் ம. வே. மகாலிங்கசிவம், பண்டிதமணி சு. நவநீதகிருட்டிண பாரதியார் ஆகியோருடன் நெருங்கிப் பழகினார். தமிழகத்தின் பேரறிஞர்களான மறைமலை அடிகள், திரு. வி. கலியாணசுந்தரனார் ஆகியோரின் தொடர்பும் கிடைத்தது. இளவழகனார் முதலான தமிழ் அறிஞர்களுடன் அஞ்சல் வழியே பழகிக் கொண்டார்.[1] மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் இயக்கத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை 'இளமுருகனார்' என மாற்றிக் கொண்டார்.[2] தமிழ்ப் பாதுகாப்புக் கழகம்பண்டை நாளில் தண்டமிழ்ச் சான்றோர்களாற் போற்றிக் காக்கப்பட்டு வந்த செந்தமிழ் மரபு சிதைந்து போதல் கண்டு மனம் நொந்தார். இந்து சமயம் என்ற போர்வையின் கீழ் சைவ சமயம் வஞ்சிக்கப்படுவதாக உணர்ந்தார். தமிழ்ப் பாதுகாப்புக் குறித்து இவர் பல கட்டுரைகளையும், கண்டனவுரைகளும் ஈழகேசரி, தினகரன் முதலிய பத்திரிகைகளில் எழுதினார். இளமுருகனார் "தமிழ்ப் பாதுகாப்புக் கழகம்" என்ற பெயரில் ஓர் இயக்கத்தை ஆரம்பித்து அதன் தலைவராக 30 ஆண்டுகள் வரை பணியாற்றினார். இவ்வியக்கத்தின் மூலம் தூய தமிழ்ப் பயன்பாட்டை தனது வாழ்நாள் முழுவதும் பரப்பி வந்தார். தமிழ்க் கல்வி இலக்கணப் பாடம் இன்றி வரம்பழிந்து போதல் கண்டு அரசாங்கத்தை அணுகி இலக்கணப்பாடத்திட்டம் வரைந்து பாடநூல்களை எழுதினார். தமிழ் நெடுங்கணக்கை மாற்றியமைக்கவும் சில செயற்கை ஒலிகளைப் புதிதாகப் புகுத்தவும் தமிழக அறிஞர்களும் செய்தித்தாள் ஆசிரியர்களும் முயன்றபோதும் அவற்றை எதிர்த்து பல்வேறு கட்டுரைகளை எழுதினார்.[1] ஆசிரியப் பணிகோப்பாய் அரசினர் ஆசிரிய கலாசாலையில் தமிழாசிரியராக இருந்த ம. வே. மகாலிங்கசிவம் காலமான பின் அப்பதவிக்கு இளமுருகனார் நியமிக்கப்பட்டார். கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக்கழகத்திலும் ஏறத்தாழ 15 ஆண்டுகள் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றினார். இவரது காலத்தில் பல ஆசிரியர்களையும் ஆசிரிய மாணவர்களையும் வண. குருமார்களையும் தமிழ் கற்கத் தூண்டிப் பண்டிதர்களாக ஆக்கியுள்ளார். அதிபர் வண. சிங்கராய சுவாமிகளின் வேண்டுகோளின்படி வில்லியம் சேக்சுபியர் எழுதிய Hamlet நாடகத்தைத் தமிழில் "கமலேசன்" என்ற பெயரில் மொழிபெயர்த்து நடிப்பித்து பாராட்டைப் பெற்றார். திருநெல்வேலிப் பரமேசுவரா ஆசிரிய கலாசாலையில் மாவை நவநீதகிருட்ணபாரதியாருடன் சேர்த்து விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[1] இறுதியாக அவர் பணியாற்றிய உடுவில் மகளிர் கல்லூரியில் தமயந்தி திருமணம், அரிச்சந்திரன், மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய நாடகங்களை எழுதி மாணவிகளைக் கொண்டு நடிப்பித்தார்.[1] தமிழுரிமைப் போர்வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் ஈழத்தில் நிலைபெற்று நின்ற தமிழ் மொழியின் உரிமை பறிக்கப்பட்ட போது எதிர்த்துக் குரல் எழுப்பினார். தந்தை செல்வாவின் தலைமையில் இயங்கிவந்த "சமட்டிக் கட்சி"யின் பெயரைத் தமிழரசுக் கட்சி என மாற்றப் போராடி வெற்றிகண்டார். தமிழ் அரசியற் கட்சிகளுடன் இணைந்து அயராது பாடுபட்டார். அரசியல் மேடைகளில் இளமுருகனாரின் இயல்பான நகைச்சுவையோடு கூடிய அரசியற் பேச்சுக்களைக் கேட்கப் பொதுமக்கள் திரண்டனர். தமிழ் உரிமை வேட்கையை ஊட்டவல்ல பல எழுச்சி இலக்கியங்களைப் படைத்தார். இவர் எழுதிய "திருமலை யாத்திரை", "அறப்போர்க்கு அறைகூவல்", "இலங்கைமாதேவி திருப்பள்ளியெழுச்சி", "குயிற்பத்து" முதலியன புகழ் பெற்றன. தமிழின் தொன்மை, இனிமை, தெய்வத்தன்மை, இலக்கண இலக்கிய வளம், தமிழ்ப் பெருங்குடிகளின் தொன்மை போன்றவற்றை விளக்கிச் செந்தமிழ்ச்செல்வம் என்னும் உயரிய நூலை யாத்து அதன் பொருளை ஆங்கிலத்திலே சுருக்கித் தந்து அன்றைய பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கு அனுப்பி வைத்தார்.[1] படைப்புகள்சோ. இளமுருகனார் பல சிறந்த நூல்களையும், நாடகங்களையும், அரசியற்பாடல்களையும் எழுதியுள்ளார்.[3] தனது படைப்புகள் யாவற்றையும் வடமொழி கலவாத தூய தமிழில் எழுதினார்.[2] இவர் இயற்றிய ஈழத்துச் சிதம்பர புராணம் அறிஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற காப்பிய நூலாகும். பலவகை விருத்தப் பாக்களையும், அணிகளையும் கொண்டது.[2] இளமுருகனாரின் மனைவி பண்டிதர் பரமேசுவரி இதற்கு உரை எழுதினார்.[1] இவற்றை விடத் தனிப் பாடல்களையும் இவர் எழுதியுள்ளார்.[2] நூல்கள்
நாடக நூல்கள்
அரசியற் பாக்கள்
விளக்கவுரைகள்பட்டங்களும் விருதுகளும்இவரின் தமிழ்ப்பணிக்காகப் பல சபைகள் பொன்னாடை போர்த்துப் பொற்கிழி வழங்கியுள்ளன. அன்றியும் தமிழறிஞர்கள் இவரைப் புலவர்மணி எனப் போற்றினார். காஞ்சிபுரம் மெய்கணடார் ஆதீன மகா சந்நிதானமாகிய ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் 'கவிசிந்தாமணி' என்னும் பட்டம் வழங்கிக் கௌரவித்தார்.[1] மறைவுசோ. இளமுருகனார் 1975 திசம்பர் 12 (இராட்சத ஆண்டு மார்கழி முதலாம் திகதி) இரவு ஒரு மணியளவில் தனது 67-ஆவது அகவையில் காலமானார்.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia