இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.
முன்னாள் முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா
தமிழ்நாட்டின்முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவிற்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதையடுத்து, 22 செப்டம்பர் 2016 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட காலத்திற்கு மருத்துவச் சிகிச்சையினைப் பெற்றார். ஒரு கட்டத்தில் அவரின் உடல்நிலை மிகவும் மோசமாகி, 5 டிசம்பர் 2016 அன்று காலமானார். அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த தகவல்களும், அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் நிலவிய அரசியல் நிலவரமும், அரசு நிர்வாகத்தின் செயற்பாடுகளும், அவரின் மரணம் குறித்தான பிணக்குகள் குறித்த விவரமும் இந்தக் கட்டுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மருத்துவமனையில் அனுமதி
22 செப்டம்பர் 2016 அன்று காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.[1]. சிகிச்சை பலன் அளிக்கிறது என்றும் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டுமென்றும் அப்பல்லோ சார்பில் தெரிவிக்கப்பட்டது.[2]
24 செப்டம்பர் 2016 - உடல்நிலை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனையின் அறிக்கை தெரிவித்தது.[3]
25 செப்டம்பர் 2016 - காய்ச்சல் குறைந்திருப்பதாகவும், வழக்கமான உணவுமுறைப்படி உண்கிறார் என மருத்துவமனையின் அறிக்கை தெரிவித்தது.[3]
29 செப்டம்பர் 2016 - மருத்துவமனையில் சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறவேண்டும் என மருத்துவமனையின் அறிக்கை தெரிவித்தது.[3]
30 செப்டம்பர் 2016 அன்று ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக ஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஆபத்துதவி மருத்துவர் வந்தார் [4][5] முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்திகள் வருவதை தடுக்க தமிழக அரசு முதலமைச்சர் செயலலிதாவின் உடல்நிலை குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டுமென திமுக தலைவர் கருணாநிதி கோரினார்.[6][7]
செயலலிதாவிற்கு மூச்சு விடுவதற்கு உதவி செய்யும் கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் சில நாட்களுக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் தங்க அறிவுறுத்தப்பட்டதாகவும் மருத்துவமனை நிருவாகம் தெரிவித்தது.[8][9]
5 அக்டோபர் 2016 அன்று தில்லி எய்ம்சு மருத்துவமனையிலிருந்து 4 பேர் கொண்ட சிறப்பு மருத்துவர்கள் குழு சென்னை வந்தது.[10] நீண்ட நாள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என அப்பல்லோ நிருவாகம் தெரிவித்தது.[11][12] நீண்ட நாள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்பதால் பொறுப்பு ஆளுநர் சி. வித்தியாசாகர் ராவ், செயலலிதா வகித்த துறைகளை ஓ. பன்னீர்செல்வம் கவனிப்பார் என்றும் அமைச்சரவையை அவரே வழி நடத்துவார் என்றும் அறிவித்தார். எந்த துறையையும் கவனிக்காவிட்டாலும் முதல்வராக செயலலிதாவே நீடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது[13]
10 அக்டோபர் 2016 - தில்லி எய்ம்சு மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் கில்நானி அப்பல்லோ மருத்துவக் குழுவை சந்தித்தார்.[3]
21 அக்டோபர் 2016 - இதய சிகிச்சை நிபுணர்கள், தொற்றுநோய் நிபுணர்கள், நீரிழிவு நோய் சிகிச்சை நிபுணர்கள் ஆகியோர் கொண்ட குழு சிகிச்சையளித்தது.[3]
இதய நிறுத்தம்
4 டிசம்பர் 2016
மாலையில் ஜெயலலிதாவிற்கு இதய நிறுத்தம் ஏற்பட்டதையடுத்து, அவரின் உடல்நலன் அபாயத்தில் இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனையின் செய்திக் குறிப்பு தெரிவித்தது.[14] அதன்பிறகு ஈ சி எம் ஓ (ECMO) என்றழைக்கப்படும் இருதயத்தை செயற்கையாக இயக்கும் கருவி, உயிர் காக்கும் பிற மருத்துவக் கருவிகளின் உதவிகொண்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.[15]
பள்ளி, கல்லூரிகள் மறுநாள் இயங்காது என முதலில் தகவல்கள் வெளியாகி பின்னர் மறுக்கப்பட்டது.
நீண்ட தூர பேருந்துகள், தொடர்வண்டிகள், வானூர்திகள் ஆகியவற்றில் பயணச்சீட்டு இரத்துகள் இருந்ததாக தகவல்கள் தெரிவித்தன.
5 டிசம்பர் 2016
நண்பகல் வாக்கில், அவரின் உடல்நலன் மிகுந்த அபாயத்தில் இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனையின் செய்திக் குறிப்பு தெரிவித்தது.[16]
தமிழ்நாடு சிறப்புக் காவற்படை, சேமக் காவல் படை ஆகியோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அப்பல்லோ மருத்துவமனையிருக்கும் கிரீம்சு சாலையில் காவற்துறையின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது.[17]
கேரளா, கர்நாடக ஆகிய மாநிலங்களின் எல்லைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டன.
தமிழ்நாட்டுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகள் அனைத்தையும் கர்நாடக அரசு நிறுத்திவைத்தது.
பிற்பகல் வாக்கில், மிகவும் மோசமான நிலையில் முதல்வரின் உடல்நிலை இருப்பதாக ஐக்கிய இராச்சியத்திலிருந்து மருத்துவ ஆலோசனை வழங்கிவரும் ரிச்சர்ட் பீலே தனது அறிக்கையில் தெரிவித்தார்.[18][19]
புதுதில்லியிலுள்ள ஏஐஐஎம்எஸ் மருத்துவமனையின் முக்கிய மருத்துவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தனர்.
முதல்வர் காலமாகிவிட்டதாக மாலை 5.30 மணிவாக்கில் தமிழ்த் தொலைக்காட்சிகள் செய்தியை வெளியிட்டதைத் தொடர்ந்து, மருத்துவமனையின் வாசலில் இருந்த தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். நிலைமையை காவற்துறை கட்டுக்குள் கொண்டுவந்தது. தொலைக்காட்சிகளில் வெளியான செய்தியின் அடிப்படையில், அஇஅதிமுக கட்சியின் தலைமைக் கழகத்தில் கட்சிக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது. காலமானதாக வெளியான செய்தியை அப்பல்லோ மருத்துவமனை மறுத்து அறிக்கை வெளியிட்டதும், கட்சிக் கொடி மீண்டும் முழுமையாக பறக்கவிடப்பட்டது.
சிகிச்சை பலனளிக்காமல் இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா காலமானதாக மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.[20][21][22]
செயலலிதா மருத்துவமனை அனுமதிக்கு முன்பு நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து முதன்மை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.[23] இது குறித்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது.[24] செயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தில், நவம்பர் 23-ம் நாள்[25], இத்திட்டம் தமிழத்தில் செயல்படுத்தப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.[26]. தமிழ், உள்ளிட்ட 8 மொழிகளில்[27] தேர்வு நடத்தப்படும் என்று பின்னர் அறிக்கை வெளியிடப்பட்டது.[28]
செயலலிதாவின் ஆட்சியில் சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் விரைவுச்சாலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 2012-ம் ஆண்டு கிடப்பில் போடப்பட்ட[29] இத்திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உச்சநீதிமன்ற வழக்கு நடைபெற்று வந்தது.[30] செயலலிதா மறைந்த இரண்டு மூன்று நாட்களில் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு அறிவித்தது.[31] சில மாற்றங்களுடன் நிறைவேற்ற பரிசீலனை செய்வதாக உறுதியளித்தது.[32]. அறிவிப்பு வந்த அதே நாளில் சிறப்பு குழு அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் உறுதிப்படுத்தினார்.[33]
சுமார் 22,400 கோடி ரூபாய் அளவிற்கு தமிழகத்திற்கு சேமிப்பு தரக்கூடும் என்று மத்திய அரசு கூறும்[37] உதாய் மின் திட்டம் பல வருடமாக செயலலிதா அரசால் புறக்கணிக்கப்பட்டு[38] வந்தது. உதாய் திட்டம்[39], அக்டோபர் 21, 2016-ம் நாள் தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[40]
பிணக்குகள்
செயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின, ஆயினும் நிகழ்படமோ அல்லது காணொளி காட்சியோ வெளியாகவில்லை. இதனால் விசாரணைக்கு ஆணையிடக் கோரி சசிகலா புஷ்பா, மத்திய உள்துறை அமைச்சரிடம் புகார் மனு அளித்தார்.[41] ஜெயலலிதா மரணத்தில் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளதாகவும் அதனால் நீதிமன்றம் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று சுப. உதயகுமாரன் தெரிவித்து இருந்தார்.[42] காய்ச்சல், நீர்சத்து குறைபாடு காரணங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செயலலிதா மரணம் வரை வேறு யாரையும் நேரில் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.[43]சசிகலா , செயலலிதாவிற்கு நஞ்சு கொடுத்து கொன்றதாக சில உறுதிபடுத்தப்படாத தகவல்களும் வெளியாகின.[44] 29 திசம்பர் 2016 அன்று சென்னை வானரகத்திலுள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற அஇஅதிமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளராகவும், 09 பிப்ரவரி 2017 அன்று நடந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் முதலமைச்சராகவும் வி.கே.சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[45]
பிணச் சீரமைப்பு
எம்பாமிங் எனப்படும் பிணச் சீரமைப்பு[46] செயலலிதாவின் முகம் வாடாமல் இருக்க செய்ததாக தகவல்கள் வெளியானது.[47] எம்பாமிங் முறையை பயன்படுத்தி பதப்படுத்தப்படும் ஒருவரது உடலை குறைந்தபட்சம் 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை பாதுகாக்க முடியும். இங்கிலாந்து நாட்டின் இளவரசி டயானா கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது உடலை, ரிச்சர்டு ஜான் பீலே என்ற மருத்துவர் எம்பாமிங் முறையில் பதப்படுத்தி வைத்திருந்தார். இவர்தான் செயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்பட்டது.
வெள்ளை அறிக்கை கோரிக்கை
செயலலிதாவிற்கு அளித்த மருத்துவம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கவுதமி முதன்மை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.[48][49][50]டிராபிக் ராமசாமியும் செயலலிதாவின் உடலை தோண்டியெடுத்து பிணக்கூறு ஆய்வு[51] செய்ய வேண்டுமென மனு தாக்கல் செய்தார்.[52]. அதுமட்டுமின்றி செயலலிதா மருத்துவமனையில் அனுமதித்திருந்த போது அவருடைய கையெழுத்து மோசடியாக பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் வழக்கு தொடுத்தார்.[53][54]
ஜெ.தீபா
செயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டது.[55] அவருடைய உடலை பார்ப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.[56] இவரும் செயலலிதாவின் சிகிச்சை குறித்த விளக்கத்தை அளிக்குமாறு கூறியுள்ளார்.[57] சசிகலா அஇஅதிமுக பொதுச் செயலாளராகவும்,தமிழக முதல்வராகவும் கூடாது என எதிர்ப்பும் தெரிவித்து வந்தார்.[58][59][60]