திமுத் கருணாரத்ன
பிராங் திமுத் மதுசாங்க கருணாரத்ன (Frank Dimuth Madushanka Karunaratne, சிங்களம்: දිමුත් කරුණාරත්න, பிறப்பு: ஏப்ரல் 21, 1988, கொழும்பு), இலங்கைத் துடுப்பாட்ட அணியின் மட்டையாளர். இடக்கை மட்டையாளரான இவர் தேர்வுப் போட்டிகளிலும், பன்னாட்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுகிறார். முதல்தரப் போட்டிகளில் சிங்களவர் விளையாட்டுக் கழகத்திற்காக விளையாடி வருகிறார்.[1] சர்வதேச போட்டிகள்2012 ஆம் ஆண்டில் காலி பன்னாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். திலகரத்ன டில்சான் காயம் காரணமாக விலகியதால் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இவரின் முதல் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 50 ஓட்டங்கள் அடித்தார்.[2] மேலும் வெற்றிக்கான இலக்கையும் இவர் அடித்தார். இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்று தேர்வுத் துடுப்பாட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். முதல் இரண்டு போட்டிகளில் ஆத்திரேலிய விரைவு வீச்சாளர்களை இவரால் எதிர்கொள்ள இயலாமல் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 85 ஓட்டங்கள் எடுத்தார். இதுதான் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவரது அதிகபட்ச ஓட்டங்களாகும். டிசம்பர் 24, 2014 இல் கிறைஸ்ட்சேர்ச்சில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். இந்தப் போட்டியில் 363 பந்துகளில் 152 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது. 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் 15 பேர்கொண்ட அணியில் இவர் இடம்பிடித்தார். ஆனால் பயிற்சிப் போட்டியில் இவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதனால் இவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்குப் பதிலாக குசல் பெரேரா இடம்பெற்றார்.[3] கண்டியில் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் தனது இரண்டாவது நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். இந்த அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 133 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டியிலும் இலங்கை அணி 7 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2015 ஆம் ஆண்டில் காலி பன்னாட்டு அரங்கத்தில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் போட்டியில் 186 ஓட்டங்கள் அடித்து மார்லன் சாமுவேல்சு பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மேலும் தினேஸ் சந்திமலுடன் இணைந்து 238 ஓட்டங்கள் அடித்தார். இதன்மூலம் காலி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கத்தில் 3 ஆவது இணைக்கு எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் எனும் சாதனை படைத்தனர். இந்தப் போட்டியில் இலங்கை அணி ஒரு ஆட்டப் பகுதி மற்றும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேற்கிந்தியத் தீவுகள் அ அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அ அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டார்.[4] மேலும் மட்டையாட்டத்தின் முதல் ஆட்டப் பகுதியில் 131 ஓட்டங்களும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 39* ஓட்டங்களும் எடுத்தார். இந்தப் போட்டியில் இலஙகை அணி 7 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[5][6] இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் அக்டோபர், 2016 இல் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இவருக்குஇடம் கிடைத்தது.பின் தன்னுடைய கிரிக்கெட் வாழ்வில் தொடர்ச்சியாக சாதித்து வந்த இவர் இலங்கை அணியின் நம்பிக்கை துடுப்பாட்ட வீரர் ஆனார். 2018 இல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தேர்வுப் போட்டியில் ஆட்டமிழக்காது 152 ஓட்டங்களை பெற்றதால் இலங்கை அணியின் சார்பில் ஓர் இன்னிங்சில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி இறுதி வரை ஆட்டமிழக்காது இருந்தவர் எனும் சாதனை படைத்தார்.இலங்கை அணி விளையாடிய முதல் பகலிரவு தேர்வுப் போட்டியில் 196 ஒட்டங்கள் எடுத்தார்.இவரது சிறந்த ஆட்டங்கள் காரணமான 2018 ஐ சி சி 2018 ஆம் ஆண்டு டெஸ்ட் கனவு அணியின் இடம்பெற்றார்.அத்துடன் தேர்வுப்போட்டிக்கான துடுப்பாட்ட வீரர்களின் தரப்படுத்தலில் 7 ம் இடத்திற்கு முன்னேறினார்.2019 இல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் தடவை தலைவராக செயற்பட்டார். அத் தொடரை வென்று காட்டினார்.இதன் மூலம் தென்னாப்பிரிக்காவில் வைத்து தேர்வுப்போட்டி தொடரை வென்ற முதல் ஆசிய தலைவர் ஆனார். 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது தேர்வுப்போட்டிக்கான இலங்கை அணியின் தலைவராக உள்ளார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia