தென்காசியை தலைநகராக்கி அங்கேயே முடிசூட்டிக்கொண்ட முதல் பாண்டிய மன்னன் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன். தன்னால் தென்காசி பெரிய கோவிலை கட்டி முடிக்க இயலாது என்றும் நாளை இக்கோயில் இடிந்து விழும் என கணிக்கப்பட்டதாலும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களும் அதை மீட்க உதவ வேண்டும் என்று எண்ணம் கொண்டார். அதன்படி இங்கு வரும் பக்தர்கள் அனைவரின் காணிக்கையையும் ஏற்று அவர்களின் பாதம் பற்றி வணங்குவேன் என்று தான் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக தன் உருவத்தை உலகம்மன் கோயிலின் வாசலிலேயே பதித்துக் கொண்டார்.
செண்பகப்பொழில் என்றால் செண்பக மரம் நிறைந்த மழைக்காடுகள் என்று பொருள்படும். பதினைந்தாம் நூற்றாண்டில் செண்பகப்பொழிலைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த பராக்கிரம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றினார். பாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம்[10] செண்பக வனத்தில் உள்ளதாகவும், கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து சென்றால் அங்கு ஒரு லிங்கத்தைக் காணலாம் என்றும் அதற்குக் கோயில் கட்டுமாறும் கூறினார். அதன் காரணம் தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் அதற்கு நிகரானதோர் நகரத்தைக் கட்டு என்று ஆணையிட்டதே ஆகும். அதனை ஏற்று பராக்கிரமபாண்டிய மன்னனால் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்துக்கு கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம். இந்தக் கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.[7]
ஆதாரங்கள்
பாண்டிய குலோதயம்
பாண்டிய குலோதயம் என்பது தென்காசி பாண்டியர் காலத்தின் மண்டலக் கவி ஒருவரால் எழுதப்பட்ட பாண்டியர் வரலாற்று நூலாகும்.[1] அதில் உள்ள தகவல்கள்,[11]
பாண்டியர் கால தென்காசி நகரமைப்பு காசி விசுவநாதராலயத்தை மையமாகக் கொண்டமைந்தது. ஆலயத்தைச் சுற்றி சதுர வடிவில் அடுத்தடுத்து வீதிகளமைந்திருந்தன. தென்காசி பாண்டியர் உக்கிரன் கோட்டையைப் படைத்தளமாகக் கொண்டிருந்தனர்.[12]
வாயுவாசல் (சடையவர்மன் பராக்கிரம்ம பாண்டியன் வாயில்)
இக்கோபுர நுழைவாசலமைப்பு வாயுவாசலெனப்படும். அச்சன்கோயில், ஆரியங்கா வழிவரும் தென்பொதிகை தென்றல் இவ்வாயுவாசல் வழி வருகிறது. இதனால் ஆடி எதிர்காற்றில் இங்கு நுழைவது கடினம். பால சுப்பிரமணியர் கோயில் வெளியில் இசைத்தூண்கள் உண்டு.
இறைவன் சந்நிதியின் வாயிலருகில் உள்ள திருஓலக்க மண்டபத்தில் தமிழ்நாட்டில் உள்ள சிற்ப அதிசயங்கள் சிலவற்றைக் காணலாம். இம்மண்டபத்தில் பின்வரும் 16 வியத்தகு சிலைகள் உள்ளன.
அக்னி வீரபத்திரர்
ரதிதேவி
மகா தாண்டவம்
ஊர்த்துவ தாண்டவம்
காளிதேவி
மகாவிஷ்ணு
மன்மதன்
வீரபத்திரர்
பாவை
பாவை
தர்மன்
பீமன்
அர்ச்சுனன்
நகுலன்
சகாதேவன்
கர்ணன்
மேற்கூறிய சிலைகள் யாவும் ஒற்றைக் கல்லினாலானவை. நுட்பமான வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளன. இவை பாண்டியர் காலச் சிற்பிகளின் உன்னத படைப்புகள். அளவிலும், அழகிலும் இச்சிற்பங்களுக்கு இணையாகத் தமிழ் நாட்டில் வேறு எங்கும் இல்லை எனலாம்.தென்காசி கோவிலின் சிற்பங்கள் தென்காசி ஆண்ட பாண்டிய மன்னர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள அரிய கலைச் செல்வங்கள்.
சுரங்கப்பாதைகள்
தற்போதும் பெரிய கோயிலில் அடைக்கப்பட்ட சுரங்கப்பாதை நுழைவாயில் காணப்படுகிறது. இதில் நான்கு சுரங்கப்பாதைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கிழக்கு நோக்கிச் செல்லும் சுரங்கப்பாதை சுந்தரன் பாண்டியபுரத்தில் உள்ள விந்தன்கோட்டைக்கு செல்வதாகத் தற்போதும் அவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.[13]
மற்றொரு பாதை குலசேகர நாதர் கோவில் வழியாகச் செல்வதாகக் கூறப்படுகிறது.
திருமலாபுரம் ஓவியங்கள்
தென்காசி அருகில் திருமலாபுரம் மலையில் ஒரு குகைக் கோவில் உள்ளது. இது கடையநல்லூர் அருகே சேர்ந்தமரம் என்னும் ஊர் செல்லும் வழியில் உள்ளது இது சிவனுக்காக வடிக்கப்பட்டதாகும். இக்கோவிலில் பாண்டியர் காலத்து வண்ண ஓவியங்கள் உள்ளன. இந்த ஓவியங்களை முதலில் கண்டுபிடித்தவர் அறிஞர் தூப்ராய் ஆவார். திருமலைப்புரக் குகைக் கோவில் ஓவியங்கள் பாண்டியர் காலத்து ஒவியக்கலைத் திறனுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.[14]