தெற்கு ஆத்திரேலியா
தெற்கு ஆத்திரேலியா (South Australia, SA) என்பது ஆத்திரேலியாவின் தென்-நடுப் பகுதியில் உள்ள ஓர் மாநிலம் ஆகும். இதன் மொத்த நிலப்பரப்பு 984,321 சதுர கிலோமீட்டர்கள் (380,048 சதுர மைல்).[6] இது ஆத்திரேலிய மாநிலங்களில் நான்காவது பெரியது ஆகும். ஆத்திரேலியக் கண்டத்தின் மிகவும் வறண்ட பகுதிகளைக் கொண்ட இம்மாநிலம் 1.8 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது.[3] மக்கள்தொகை அடிப்படையில் இது ஐந்தாவது பெரிய மாநிலம் ஆகும். 77% க்கும் அதிகமான தெற்கு ஆத்திரேலியர்கள் தலைநகர் அடிலெய்டில் அல்லது அதன் சுற்றுப்புறங்களில் வாழ்கின்றனர். மாநிலத்தில் உள்ள பிற மக்கள்தொகை மையங்கள் ஒப்பீட்டளவில் சிறியவை; இரண்டாவது பெரிய மையமான மவுண்ட் காம்பியர், 26,878 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.[7] தெற்கு ஆத்திரேலியா தசுமேனியா தவிந்த ஏனைய அனைத்து மாநிலங்களுடனும் எல்லைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இதன் எல்லைகளாக மேற்கே மேற்கு ஆத்திரேலியா, வடக்கே வட ஆள்புலம், வடகிழக்கில் குயின்ஸ்லாந்து, கிழக்கே நியூ சவுத் வேல்ஸ், தென்கிழக்கே விக்டோரியா, தெற்கே பெரும் ஆஸ்திரேலிய விரிகுடா ஆகியன உள்ளன.[8] இந்த மாநிலம் ஆத்திரேலிய மக்கள்தொகையில் 8% க்கும் குறைவாக உள்ளது, ஆறு மாநிலங்கள் மற்றும் இரண்டு ஆள்புலங்களில் மக்கள்தொகையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதன் பெரும்பான்மையான மக்கள் பெருநகர அடிலெய்டில் வசிக்கின்றனர். எஞ்சிய பெரும்பாலானோர் தென்கிழக்கு கடற்கரைப் பகுதியிலும், முர்ரே ஆற்றின் வளமான பகுதிகளிலும் குடியேறியுள்ளனர். மாநிலத்தின் ஐரோப்பியக் குடியேற்றத் தோற்றம் ஆத்திரேலியாவில் ஒரு குற்றவாளிக் குடியேற்றமாக இல்லாமல், சுதந்திரமாக குடியேறிய, திட்டமிடப்பட்ட பிரித்தானிய மாகாணமாகத் தனித்துவமானது.[9] 1836 திசம்பர் 28 ஆம் நாள் குடியேற்றக் கால அரசாங்கம் இயங்கத் தொடங்கியது.[10] கண்டத்தின் ஏனைய பகுதிகளைப் போலவே, இப்பகுதியும் பல தொல்குடியினர்களாலும் பழங்குடி மொழிகளாலும் மனித ஆக்கிரமிப்பின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. தலைநகர் அடிலெய்டு நிறுவப்படுவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு, 1836 சூலை 26 அன்று, தெற்கு ஆத்திரேலியக் கம்பனி, கங்காரு தீவின் கிங்சுகோட் என்ற இடத்தில் ஒரு தற்காலிகக் குடியேற்றத்தை நிறுவியது.[11] குடியேற்றத்திற்குப் பின்னால் உள்ள வழிகாட்டும் கொள்கை "திட்டமிடப்பட்ட குடியேற்ற" ஆகும், இது எட்வர்ட் வேக்ஃபீல்டு என்பவரால் முன்வைக்கப்பட்ட கோட்பாடு.[12] சுதந்திரமான குடியேற்றவாசிகளுக்கான நாகரிகத்தின் மையமாக மாகாணத்தை நிறுவுவது, குடிசார் உரிமைகள், மத சகிப்புத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதே இலக்காக இருந்தது. இன்று, இது அதன் சிறந்த ஒயின், கலாச்சார விழாக்களுக்காக அறியப்படுகிறது. மாநிலத்தின் பொருளாதாரம் வேளாண்மை, உற்பத்தி, சுரங்கத் தொழில்களால் ஆதிக்கம் செலுத்துகிறது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia