முனைவர் நல்லி குப்புசாமி செட்டியார்ஆங்கிலம்: Nalli Kuppuswami Chetti (பிறப்பு: நவம்பர் 09, 1940) என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஜவுளித்துறை தொழிலதிபர், எழுத்தாளர் மற்றும் கொடை வள்ளலாவார்.[1] கலை, பண்பாடு, கல்வி சார்ந்து பல நிதிக் கொடைகளை வழங்கியுள்ளார். இவரது தாத்தா நல்லி சின்னசாமி செட்டியார் தொடங்கிய நல்லி குழுமத்தின் தலைவராகப் பட்டு வணிகத்தில் ஈடுபட்டுவருகிறார். இவர் எழுதிய வெற்றிக்கு மூன்று படிகள், நீதி நூல்களில் நிர்வாகம், பாடகச்சேரி மகான் உள்ளிட்ட பல நூல்கள் பிரபலமானவை.[2]
இளமைக் காலம்
இவர் காஞ்சிபுரத்தில் 1940 நவம்பர் 9 ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தை நல்லி நாராயணசாமி செட்டியார் பள்ளிக்காலத்திலேயே தவறிவிட்டார்.[3] இவரது மூதாதையர்கள் ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட பத்மசாலியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நல்லி என்பது இவரது குடும்பப் பெயராகும்[4][5] ராமகிருஷ்ணா மிசன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை படித்தார்.[6]
இவரது மகன் ராமநாதன் நல்லி மற்றும் மகன்வழிப் பெயர்த்தி லாவண்யா நல்லி நல்லி சில்க்ஸினை உடன் நிர்வாகம் செய்து வருகின்றனர். இவரது மூத்த மகள் ஜெயஸ்ரீ ரவி, குமரன் சில்க்ஸ் குடும்பத்தில் திருமணம் செய்து பாலம் சில்க்ஸ் என்ற பெயரில் பட்டு வியாபாரம் செய்து வருகிறார்.
அமைப்புகளும் பொறுப்புகளும்
நல்லி குழுமத்தின் தலைவராக இருந்து வருகிறார். கர்நாடக இசைப் பிரியரான இவர் சென்னையில் உள்ள பல இசை சபைகளுக்குப் புரவலராக இருந்து வருகிறார்.[7]ஸ்ரீ கிருஷ்ண கானா சபா, ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா, பிரம்ம ஞான சபா, ஸ்ரீ பைரவ ஞான சபா, முத்ரா மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப் மற்றும் சென்னை கல்ச்சுரல் அகாடமி உள்ளிட்ட அமைப்புகளில் தலைவராக உள்ளார்.[8][9] தமிழ் வர்த்தக சபை(சாம்பர் ஆப் காமர்ஸ்), இந்தோ-ஆஸ்திரேலிய வர்த்தக சபை, இந்தோ-ஜப்பான் வர்த்தக சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் புரவலராக உள்ளார்.[10] தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் திட்டக்குழு உறுப்பினராகவும், பாரதியார் பல்கலைக்கழகம் செனட் உறுப்பினராகவும் மத்திய பட்டு வாரியத்தின் உறுப்பினராகவும் உள்ளார். பல்வேறு சிற்றிதழ்களுக்கு தமிழ் இலக்கிய அமைப்புகளுக்கும் புரவலராக இருந்து வருகிறார்.
இலக்கியப் பணி
வாழ்வியல், வணிகவியல், நிர்வாகவியல், இலக்கியம் போன்ற துறைகளில் ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1983 இல் அருணோதயம் பதிப்பகம் வெளியீட்டில் வெற்றியின் வரலாறு என்ற தலைப்பில் இவரின் முதல் புத்தகம் வெளியானது.[11] மகாபாரதத்தின் வியாத கீதையை தமிழில் நூலாக எழுதி வெளியிட்டார். விதுர நீதியில் நிர்வாகம் என்ற பெயரில் விதுர நீதியின் குறிப்பிட்ட பாடல்களுக்கு விளக்கமும், வியாசர் அறம் என்ற பெயரில் மகாபாரதத்தின் சுருக்கமும் எனப் பல இதிகாச நூல்களை எழுதியுள்ளார். பாரத ஜன சபை என்ற காங்கிரஸ் மகாசபையின் வரலாற்று நூல் உட்படச் சில நூல்களைப் பதிப்பித்துள்ளார்.[12]
↑"The 'soft' corner for silks". பிசினஸ் லைன் (in ஆங்கிலம்). 20 March 2000. Retrieved 2020-03-26. Born into the Padmasaliyar weaving community, which has a hoary tradition going back to the Chola period, Nalli Kuppusami Chettiar is proud of his lineage.