நிசாரி இசுமாயிலி அரசு
நிசாரி அரசு என்பது ஒரு சியா நிசாரி இசுமாயிலி அரசு ஆகும். இதை அசன்-இ சபா என்பவர் அலமுத் கோட்டையை 1090ஆம் ஆண்டு கைப்பற்றியதற்குப் பிறகு நிறுவினார். இதற்குப் பிறகு "அலமுத் காலம்" என்று அழைக்கப்பட்ட இசுமாயிலியிய நம்பிக்கையின் காலம் தொடங்கியது. இந்த அரசின் மக்கள் அசாசின்கள் என்று அழைக்கப்பட்டனர். பாரசீகம் மற்றும் சிரியா முழுவதும் தொடர்ச்சியான காப்பரண்களை இந்த அரசு கொண்டிருந்தது. இந்தக் காப்பரண்களைச் சுற்றி இவர்களின் எதிரிப் பகுதிகள் இருந்தன. செல்யூக் பேரரசுக்கு எதிரான மக்களால் ஆதரவளிக்கப்பட்ட சிறுபான்மையின நிசாரி பிரிவினரின் மத மற்றும் அரசியல் இயக்கத்தின் விளைவாக இந்த அரசு உருவாக்கப்பட்டது. இவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதும், நிசாரிகள் தனித்து இயங்கக்கூடிய கோட்டைகள், வழக்கத்திற்கு மாறான உத்திகள், குறிப்பாக முக்கியமான எதிர்த் தலைவர்களைக் கொல்லுதல் மற்றும் உளவியல் போர்முறையைப் பின்பற்றி எதிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக்கொண்டனர்.[3][4]:126 இவர்கள் ஒரு வலிமையான சமூக உணர்வையும், தங்களது தலைவருக்கு ஒட்டு மொத்த பணிவான பண்பையும் கொண்டிருந்தனர். தங்களுக்கு எதிர்ப்பைத் தந்த சூழ்நிலையில் எஞ்சிப் பிழைத்திருப்பதற்காக இவர்கள் செயல்பட்டுக் கொண்டிருந்த போதிலும், ஒரு நுட்பமான வெளிப்புறப் பார்வை மற்றும் இலக்கிய மரபை இக்காலத்தில் இசுமாயிலிகள் வளர்த்துக் கொண்டனர். இந்த அரசு நிறுவப்பட்டு கிட்டத்தட்ட 2 நுற்றாண்டுகளுக்குப் பிறகு உட்புற ரீதியாக இந்த அரசானது வீழ்ச்சியடைந்தது. படையெடுத்து வந்த மங்கோலியர்களிடம் இதன் தலைமையானது அடி பணிந்தது. மங்கோலியர்கள் பல நிசாரிகளைப் பின்னர் படு கொலை செய்தனர். இவர்களைப் பற்றி அறியப்படும் தகவல்களில் பெரும்பாலானவை இவர்களது எதிரிகளால் எழுதப்பட்ட நூல்களில் உள்ள விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும்.[5] வீழ்ச்சி![]() ஈரான் மீது மங்கோலியர்கள் படையெடுக்கத் தொடங்கிய போது பல சன்னி மற்றும் ஷியா முஸ்லிம்கள் (முக்கியமான அறிஞர் தூசீ உள்ளிட்டோர்) கூசித்தானில் இருந்த நிசாரிகளிடம் தஞ்சமடைந்தனர். கூசித்தனின் ஆளுநராக நசிரல்தீன் அபு அல்-பத் அப்தல் ரகீம் இப்னு அபி மன்சூர் இருந்தார். நிசாரிகள் தங்களது இமாம் அலாவல்தீன் முகம்மதுவின் தலைமையின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.[6] கடைசி குவாரசமிய ஆட்சியாளர் சலாலத்தீன் மிங்புர்னுவின் இறப்பிற்குப் பிறகு நிசாரி இசுமாயிலி அரசு மற்றும் அப்பாசியக் கலீபகத்தை அழிப்பது ஆகியவை மங்கோலியர்களின் முதன்மையான இலக்குகளானது. 1238இல் நிசாரி இமாம் மற்றும் அப்பாசியக் கலீபா ஆகியோர் ஐரோப்பிய மன்னர்களான பிரான்சின் ஒன்பதாம் லூயி மற்றும் இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு ஆகியோருக்கு ஓர் இணைந்த தூதுக் குழுவைப் படையெடுத்து வந்த மங்கோலியர்களுக்கு எதிராக ஒரு கூட்டணியை ஏற்படுத்துவதற்காக அனுப்பினர். ஆனால் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.[7][6] கூசித்தான் மற்றும் குமீசில் இருந்த நிசாரிகள் மீது மங்கோலியர்கள் அழுத்தத்தைக் தொடர்ந்து கொடுத்து வந்தனர். 1256இல் அலாவல்தீனுக்குப் பிறகு அவரது இளைய மகன் உரூக்னல்தீன் குர்சா நிசாரி இமாமாகப் பதவிக்கு வந்தார். ஓர் ஆண்டு கழித்து குலாகு கான் தலைமையிலான முதன்மையான மங்கோலிய இராணுவமானது குராசான் வழியாக ஈரானுக்குள் நுழைந்தது. நிசாரி இமாம் மற்றும் குலாகு கானுக்கு இடையிலான ஏராளமான பேச்சுவார்த்தைகள் வீணாகப் போயின. வெளிப்படையாகத் தெரிந்த வரையில் முதன்மையான நிசாரி வலுவூட்டல் பகுதியையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென நிசாரி இமாம் வேண்டினார். அதே நேரத்தில் மங்கோலியர்கள் நிசாரிகளின் முழுமையான அடி பணிவைக் கோரினர்.[6] 19 நவம்பர் 1256 அன்று மய்முன் திசு கோட்டையில் இருந்த நிசாரி இமாம், ஓர் ஆக்ரோசமான சண்டைக்குப் பிறகு குலாகு கான் தலைமையிலான முற்றுகையிட்டுக் கொண்டிருந்த மங்கோலியர்களிடம் கோட்டையைச் சரணடைய வைத்தார். திசம்பர் 1256இல் அலமுத் கோட்டையும், 1257இல் லம்பசார் கோட்டையும் வீழ்ந்தது. கெருதுக் கோட்டை வெல்லப்படாமல் எஞ்சியிருந்தது. அதே ஆண்டு மங்கோலியப் பேரரசின் ககான் மோங்கே கான் பாரசீகத்தில் அனைத்து நிசாரி இசுமாயிலிகளையும் ஒட்டு மொத்தமாகக் கொல்ல ஆணையிட்டார். மோங்கே கானை நேரில் சந்திப்பதற்காக மங்கோலியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த உரூக்னல்தீன் குர்சாவே அவருடைய சொந்த மங்கோலியக் காவலனால் அங்கு கொல்லப்பட்டார். கெருதுக் கோட்டை இறுதியாக 1270இல் வீழ்ச்சியடைந்தது. பாரசீகத்தில் வெல்லப்பட்ட கடைசி நிசாரி வலுவூட்டல் பகுதியாக இது இருந்தது.[6] அலமுத் கோட்டையில் மங்கோலியர்களின் படு கொலையானது இப்பகுதியில் இசுமாயிலி செல்வாக்கின் முடிவைக் குறித்ததாகப் பரவலாக எடுத்துக் கொள்ளப்பட்டாலும், பல்வேறு ஆதாரங்கள் இசுமாயிலிகளின் அரசியல் செல்வாக்கானது தொடர்ந்தது என்று நமக்குக் காட்டுகின்றன. 1275இல் உரூக்னல்தீனின் மகன் அலமுத் கோட்டையை மீண்டும் கைப்பற்றினார். ஆனால் ஒரு சில ஆண்டுகளுக்கு மட்டுமே அதைத் தக்க வைத்தார். நூல்களில் குதாவந்த் முகம்மது எனப்படும் நிசாரி இமாமால் பதினான்காம் நூற்றாண்டில் இக்கோட்டையை மீண்டும் கைப்பற்ற முடிந்தது. மரசி என்ற வரலாற்றாளர், இமாமின் வழித் தோன்றல்கள் பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை அலமுத் கோட்டையில் தொடர்ந்து இருந்தனர் என்று குறிப்பிடுகிறார். சுல்தான் முகம்மது சகாங்கீர் மற்றும் அவரது மகனின் தலைமைத்துவத்தின் கீழ் இப்பகுதியில் இசுமாயிலி அரசியல் செயல்பாடானது தொடர்ந்திருந்தது. இவரது மகன் 1597இல் மரண தண்டனைக்கு உட்படுத்தப்படும் வரை நீடித்திருந்தது என்று குறிப்பிடப்படுகிறது.[8] உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia