பாம்புத் தாரா
பாம்புத் தாரா அல்லது வழுவாங்கி[2] (பேரினம்: Anhinga அன்கின்கா) நீர் நிலைகளில் வாழக்கூடிய ஒரு பறவை இனமாகும். நெடுங்கழுத்தன் என்றும் நெடுங்கிளாத்தி என்றும் அழைக்கப்படுகிறது. இப் பறவையை ஆங்கிலத்தில் டார்டர் (Darter) என்று அழைப்பார்கள். இந்தப் பறவையின் பிரதான உணவு மீன்கள் ஆகும். இப்பறவை மீன் பிடிப்பததற்கும் மீன் கொத்தி, கொக்கு, நாரை போன்ற மற்ற மீனுண்டு வாழும் பறவைகள் மீன் பிடிப்பதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்ற பறவைகள் மரக் கிளைகளிலோ அல்லது ஆகாயத்தில் பறந்தபடி இருந்து கொண்டோ நீரின் மேல் பரப்பிற்கு வரும் மீன்களைக் கொத்திப் பிடிக்கும். ஆனால் இந்தப் பறவையோ தண்ணீரில் தலையை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டு நீந்திக் கொண்டிருக்கும். அப்போது எதிர்ப்படும் மீனைப் பிடித்து தண்ணீரில் இருந்த படியே உண்ணும். இது தன் முழு உடலையும் நீருள் வைத்துக் கொண்டு நீந்தும்போது பாம்பு நீரில் நீந்திச் செல்வது போலவே தோன்றும். இப்பறவைக்கு பாம்புத் தாரா எனப் பெயர் வரக் காரணமும் இதுவே. மீன் ஒன்றைப் பிடித்த உடன் கழுத்தை மட்டும் நீருக்கு வெளியே நீட்டி அந்த மீனின் தலை முதலில் வாயுள்ளே செல்லும்படி தூக்கிப் போட்டு பிடித்து பின் விழுங்கும். மற்ற நீர் வாழ் பறவைகள் தண்ணீரில் இருக்கும்போது அவற்றின் உடல் நீரில் மூழ்கிடாது மிதந்திடும். அவற்றின் சிறகுகளில் தண்ணீர் ஒட்டாது. காரணம் அவற்றின் சிறகுகளில் ஒரு வகை எண்ணெய்ப் பசை இருக்கும். தவிரவும் சிறகுகளுக்கிடையே இருக்கும் காற்று அப்பறவைகளை மிதக்கச் செய்யும். ஆனால் பாம்புத் தாராவின் சிறகுகளில் அந்த எண்ணெய்ப் பசை இல்லாதலால் தண்ணீர் சுலபமாக ஒட்டிக் கொண்டு, பளுவாக்கி, அதன் உடலை நீருக்கடியில் கொண்டு செல்லும். பாம்புத் தாரா தன் இனப் பெருக்கக் காலத்தில் நீர் நிலைகள் அருகேயுள்ள, மரக் கிளைகளில் குச்சி, சுள்ளிகளைக் கொண்டு கூடு கட்டி வாழும். வழுவாங்கி, நெய்காக்கை ஆகியவை இதன் வேறு பெயர்கள்.[3] உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia