பியாலிஸ்டோக்–மின்ஸ்க் சண்டை
பியாலிஸ்டோக்–மின்ஸ்க் சண்டை (Battle of Białystok–Minsk) என்பது இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையில் சோவியத் படைகளுக்கு எதிராக நாசி ஜெர்மனியின் படைகள் மேற்கொண்ட ஒரு மேல்நிலை உத்தியளவு படை நடவடிக்கை. இது பர்பரோசா நடவடிக்கையின் தொடக்ககட்ட சண்டைகளில் ஒன்றாகும். இதில் ஜெர்மானியப் படைகள் வெற்றி பெற்றன. ஜூன் 22, 1941 அன்று சோவியத் தலைமை எதிர்பாராத வண்ணம், நாசி ஜெர்மனி சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்தது. மூன்று ஆர்மி குரூப்புகளாக ஜெர்மானியப் படைகள் சோவியத் ஒன்றியத்துக்குள் முன்னேறின. இவற்றில் ஆர்மி குரூப் நடு (Army Group Centre) ஃபீல்டு மார்சல் ஃபெடோர் வோன் போக் தலைமையில் செயல்பட்டது. போலந்திலிருந்து தொடங்கி பியாலிஸ்டோக்-மின்ஸ்க்-ஸ்மோலென்ஸ்க் ஆகிய நகரங்கள் வழியாக மாஸ்கோவைக் கைப்பற்றுவது இதன் இலக்கு. அவ்விலக்கின் பகுதியாக மின்ஸ்க் நகர் அருகே சோவியத் படைகளை சுற்றி வளைத்து அழிக்கத் ஜெர்மானியப் போர் உத்தியாளர்கள் திட்டமிட்டனர். அதன்படி, ஜெர்மானியப் படைகள் ஜூன் 22-ஜூலை 3 காலகட்டத்தில் தங்களை எதிர்த்த செஞ்சேனையின் மேற்கு முனைப் படைப்பிரிவை இரு வளையங்களாக சுற்றி வளைத்தன. ஜெர்மானியப் படைவளையத்திலிருந்து தப்ப சோவியத் படைகள் மேற்கொண்ட முயற்சிகளும் எதிர்த் தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டன. மூன்று லட்சம் சோவியத் படைவீரர்கள் போர்க்கைதிகளாயினர். குறிப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia