மலேசியா ஏர்லைன்சு விமானம் 17 (Malaysia Airlines Flight 17, எம்எச்17 (MH17/MAS17)[2] என்பது ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூர் நோக்கி சென்றுகொண்டிருக்கையில், 2014 சூலை 17 இல், விபத்துக்குள்ளாகி வீழ்ந்து நொறுங்கிய மலேசிய நாட்டு வானூர்தி ஆகும். போயிங் 777 ரக விமானம் உக்ரைனின்தோனெத்ஸ்க் வட்டாரத்தில் கிராபோவ் நகருக்கு அண்மையில்[3][4]உருசிய எல்லையில் இருந்து கிட்டத்தட்ட 40 கி.மீ. தொலைவில் வீழ்ந்தது.[5] விமானத்தில் பயணம் செய்த அனைத்து 283 பயணிகளும், 15 பணியாளர்களும் உயிரிழந்தனர்.[6]
உக்ரைனில் உருசிய-சார்புக் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப் படையினருக்கும் இடையில் இடம்பெற்று வரும் போர்ப் பகுதியிலேயே விமானம் வீழ்ந்துள்ளது. அமெரிக்கப் புலனாய்வுத்துறை அறிக்கைகளின் படி, இவ்விமானம் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், யார் இதனைச் சுட்டு வீழ்த்தினார்கள் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.[7][8] உக்ரைனியப் பிரச்சினையில் உருசியா சம்பந்தப்பட்டிருப்பதால் அதன் மீது அமெரிக்கா பல பொருளாதாரத் தடைகளை அறிவித்த அடுத்த நாள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.[9]
விமானம் 10,000 மீட்டர் உயரத்தில் வைத்து பூக்நில வான் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதாக உக்ரைனின் உட்துறை அமைச்சு அறிவித்தது.[10][11] உக்ரைனிய அரசுத்தலைவர் பெத்ரோ பொரொசென்கோ இதனை ஒரு "பயங்கரவாதத் தாக்குதல்" எனக் கூறியுள்ளார்.[12] உக்ரைனியப் படையினரே விமானத்தை சுட்டு வீழ்த்தினர் என கிளர்ச்சியாளர்கள் குற்றம் சுமத்தினர். தாம் ஒரு பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கிளர்ச்சியாளர்கள் இருவர் தமக்குள் தொலைபேசியில் உரையாடியதைத் தமது புலனாய்வுப் பிரிவு ஒட்டுக் கேட்டதாக உக்ரைனிய அரசு அறிவித்தது.[13][14]
11 செப்டம்பர் 2001 தாக்குதலுக்குப் பிறகு நடந்த மிகவும் மோசமான வானூர்தித் தொடர்பான தாக்குதலாக இந்நிகழ்வு கருதப்படுகிறது[15].
விமானம் வீழ்ந்து நொறுங்கிய விவரம்
விமானம் பயணித்த பாதை
நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்துமலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு சூலை 17, 2014 அன்று 12:15 (நெதர்லாந்து நேரம்) மணியளவில் விமானம் புறப்பட்டது. பயண அட்டவணைப்படி இவ்விமானம் காலை 06:10 (மலேசிய நேரம்) மணியளவில் கோலாலம்பூர் சென்று சேரவேண்டும். ஆனால் 17:15 (உக்ரைன் நேரம்) மணியளவில் கிழக்கு உக்ரேனின் வான்வெளிப் பகுதியில் விமானம் எரிந்து விழுந்தது. கடைசித் தொடர்பின்போது விமானம் 10,000 மீட்டர் உயரத்தில் பறந்துள்ளது.[16]
விமானத்தில் பயணம் செய்த அனைத்து 283 பயணிகளும், 15 மலேசியப் பணியாளர்களும் உயிரிழந்தனர்.[20][21][22] இவர்களில் 192 பேர் நெதர்லாந்து நாட்டவர்.[23][24] சூலை 19 இல் அனைத்து 298 பேரினதும் விபரங்களை மலேசியா ஏர்லைன்சு நிறுவனம் வெளியிட்டது.[17]
ஆத்திரேலியாவின்மெல்பேர்ண் நகரில் நடைபெறும் 20வது பன்னாட்டு எயிட்சுக் மாநாட்டில் கலந்து கொள்ளவென விமானத்தில் போய்க்கொண்டிருந்த கிட்டத்தட்ட 100 எயிட்சு வல்லுநர்களும், பன்னாட்டு எயிட்சு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜோயிப் லாங்கேயும் இதில் கொல்லப்பட்டனர்.[25][26][27] இவர்களுடன் டச்சு மேலவை உறுப்பினர் வெல்லெம் விட்டெவீன்,[28] ஆத்திரேலிய எழுத்தாளர் லியாம் டேவிசன்,[29] மலேசியத் தமிழ் நடிகை சுபா ஜெய்,[30] மலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக்கின் பாட்டியார் சிறீ சித்த அமீரா[31] ஆகியோரும் இறந்த பிரபலங்களில் அடங்குவர்.
உலக மக்களின் அஞ்சலி
எஸ்தோனியா நாட்டிலுள்ள நெதர்லாந்து தூதரகத்தின் நுழைவாயிலில் பொதுமக்களின் மெழுகுவர்த்தி அஞ்சலி
ருசிய அதிபர் விலாடிமிர் புடின் தனது அரசு அதிகாரிகளுடன் மவுன அஞ்சலி