மாகாளிக் கிழங்கு
மாகாளிக் கிழங்கு ( தாவரவியல் பெயர் Decalepis hamiltonii ) என்பது ஒரு மரக்கொடி தாவரமாகும். இந்த தாவர இனம் Apocynaceae என்ற தாவர குடும்பத்தைச் சார்ந்தது.[1] இது தீபகற்ப இந்தியாவில் காணப்படுகிறது. இது தமிழில் மாகாளிக் கிழங்கு, பெருநன்னாரி, வரணி, குமாரகம் [2] என்ற பெயர்களிலும், மரிடு கொம்மலு, நன்னாரி கொம்முலு, மதினா கொம்முலு என்ற பெயர்களில் தெலுங்கில் அழைக்கப்படுகிறது. மாகாளி பெரு அல்லது வகணி பெரு என்று கன்னட மொழியில் அழைக்கப்படுகிறது. இந்தத் தாவரத்தின் வேர்க் கிழங்குகள் ஆயுர்வேத மருத்துவத்திலும், ஊறுகாய் செய்யவும் பயன்படுகிறது.[3] மரக்கொடியாக வளரும் இத்தாவரம் கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் தென்பகுதியில் உள்ள திறந்தவெளி பாறைச்சரிவுகளில் 300 முதல் 1200 மீட்டர் உயரம்வரை உள்ள பகுதிகளில் மட்டும் காணப்படுகிறது. இது ஓரிடவாழி தாவரம் ஆகும். ஒட்டும் தன்மையுடைய பால் இதன் அனைத்துப்பகுதிகளிலும் காணப்படும். இதன் மலர்கள் சிறியதாகவும், மஞ்சள் நிறத்துடனும் இருக்கும். இதன் காய்கள் இரட்டையாக காணப்படும். இவை உலர்ந்த உடன் வெடித்து விதைகளை வெளியிடும். விதைகளின் நுனியில் பட்டு போன்ற மயிற் கொத்து காணப்படும். சர்வதேச சந்தையில் மாகாளிக் கிழங்கின் புகழின் காரணமாக அதன் விலை ஏற்றம் பெற்றது. இதனால் இதன் வேரை அகழ்வது அதிகரித்ததால் இத்தாவரம் அருகிவரும் நிலை ஏற்பட்டுள்ளது.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia