முதலாம் பராக்கிரமபாகு
முதலாம் பராக்கிரமபாகு (சிங்களம்: මහා පරාක්රමබාහු) அல்லது மகா பராக்கிரமபாகு [1][2] என்பவன் இலங்கையின் பொலன்னறுவை இராச்சியத்தை கி.பி 1153 முதல் 1186 வரை ஆட்சி புரிந்த மன்னர் ஆவார். அரசர் மானாபரணவுக்கும் அரசி ரத்னாவலிக்கும் 1123 ஆம் ஆண்டு தக்கிண தேசத்தின் கேகாலைப் பகுதியில் புங்ககம எனும் கிராமத்தில் பிறந்தார். இவரது பாட்டனார் இலங்கையில் குடிபுகுந்த பாண்டிய இளவரசன் ஆவார். இலங்கையின் முக்கிய மூன்று இராச்சியங்களையும் பராக்கிரமபாகு ஒன்றிணைத்தார். அக்காலத்திலே இவ்விராச்சியத்தின் தலைநகரமாக விளங்கியது பொலன்னறுவை ஆகும். தன்னுடைய தலைநகரை அழகாகப் பேணல், மேற்பார்வை செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தார். இவரின் காலத்தில் நாட்டில் விரிவாக நிர்மாணிக்கப்பட்ட நீர்ப்பாசனத் தொகுதிகள் காணப்பட்டன, நாட்டின் இராணுவப் படைகள் மறுசீரமைக்கப்பட்டன, பௌத்தம் வளர்க்கப்பட்டது, கலைகளும் வளர்க்கப்பட்டன. தென்னிந்தியாவுடனும், மியான்மாருடனும் பராக்கிரமபாகு இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இவரின் காலத்தில் இலங்கை தெற்காசியாவின் தானியக் களஞ்சியம் என அழைக்கப்பட்டது.[சான்று தேவை] இவரே பராக்கிரம சமுத்திரத்தையும் கட்டுவித்தார். "வானிலிருந்து விழும் ஒரு துளி நீரையும் விவசாயத்திற்குப் பயன்படுத்தாது வீணாகக் கடலைச் சென்றடைய விடமாட்டேன்" என்பது பராக்கிரமபாகுவின் புகழ்மிக்க கூற்றுக்களில் ஒன்றாகும்.[3] பராக்கிரமபாகு தனது இளம் வயதை தனது மாமன்மாரான கீர்த்தி சிறீ மேகன், ஸ்ரீ வல்லப போன்றோரின் அரண்மனைகளில் கழித்தார். இவர்கள் முறையே தக்கிண தேசம் மற்றும் உருகுணை இராச்சியத்தின் மன்னர்கள். அத்துடன் இராசரட்டையின் இரண்டாம் கஜபாகுவுடனும் இளமையில் நட்புறவு வைத்துள்ளார். சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடனும் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தார்.[4] பின்னணி12ஆம் நூற்றாண்டுக்கு முன்இலங்கைத் தீவானது ஒருகாலத்தில் சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. கி.பி. 993 இல் இலங்கையில் முதலாம் இராஜராஜ சோழ மன்னன் படையெடுப்பு நடாத்தினான். முதலாம் விஜயபாகு (1055–1100) மன்னனின் ஆட்சிக்கு முன் சோழர்களே இலங்கையை ஆதிக்கம் செய்துவந்தனர். தன்னுடைய சிறந்த ஆட்சியினாலும் படையெடுப்பாலும் சோழர்களை இலங்கையிலிருந்து விரட்டி புராதன தலைநநகரமான அனுராதபுரத்தை கைவிட்டு திட்டமிடப்பட்ட புதிய நகரமான பொலன்னறுவைக்கு (புலத்தி நகர்) தலைநகரை மாற்றிக்கொண்டான். முதலாம் விக்கிரமபாகு மன்னன் (1111–1132) இலங்கையை மூன்று பிரிவுகளாகப் பிரித்தான். அவையாவன: இராசரட்டை, உருகுணை, தக்கிண தேசம் என்பவையாகும். இருப்பினும் இம்மூன்றிலும் விக்கிரமபாகு ஆண்டுவந்த இராசரட்டையே சமய ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் முக்கியமான பிரதேசமாகக் கருத்தப்பட்டது. தக்கிண தேசத்து மன்னர்களான மானாபரண மன்னன் அவரது தம்பிமாரான ஸ்ரீ வல்லப மன்னன் மற்றும் கீர்த்தி ஸ்ரீ மேகன் போன்றோர்களுக்கும் மற்றும் உருகுணை மன்னர்களுக்கும் இராசரட்டையின் அரியணையைப் பிடிப்பதில் போட்டியிருந்தது. மேற்கோள்கள்
உசாத்துணைகள்
மேலும் வாசிக்க
n’s A short history of Ceylon, Macmillan, London 1952. வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia