மு. க. ஸ்டாலினின் முதலமைச்சர் பணி

மு. க. ஸ்டாலினின் முதலமைச்சர் பணி
மே 7, 2021 – present
Partyதிராவிட முன்னேற்றக் கழகம்
Election2021
நியமிப்புதமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல், பன்வாரிலால் புரோகித்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மே 7, 2021 முதல் தமிழ்நாட்டின் எட்டாவது முதலமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக சமூக நலன், கல்வி, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, நிருவாகச் செயல்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பல்வேறு முயற்சிகளைச் செயல்படுத்தியுள்ளார். இவரது பதவிக்காலத்தில் திறன் மேம்பாட்டுக்கான நான் முதல்வன் திட்டம், மாநிலத்தின் பசுமையை மேம்படுத்துவதற்கான பசுமை தமிழ்நாடு இயக்கம், குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. கூடுதலாக, இவரது அரசு அனைத்து சாதிகளையும் சேர்ந்தவர்களையும் கோயில் பூசாரிகளாக நியமிப்பது போன்ற சீர்திருத்தங்கள் மூலம் சமூக நீதியை வலியுறுத்தி வருகிறது.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர்

உங்கள் தொகுதியில் முதல்வர் என்பது, தொகுதியினர் எழுப்பும் மனுக்கள் மற்றும் பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில் அமைக்கப்பட்ட குறை தீர்க்கும் சேவையாகும். மு. க. ஸ்டாலின் பதவியேற்ற முதல் 100 நாட்களில் 4.57 லட்சம் மனுக்களில் 2.30 லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்கள் நிவர்த்தி செய்யப்பட்டது. மு. க. ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தின் போது தொடங்கப்பட்ட ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ திட்டத்திலிருந்து இந்தத் துறை உருவானது. குடிமக்களிடம் குறைகளைச் சேகரித்த ஸ்டாலின், தான் பதவியேற்றதும் 100 நாட்களில் அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். கோ. வி. லெனின் போன்ற நிபுணர்களும், பத்திரிகையாளர்களும், இத்திட்டத்தைத் திமுகவின் அடிப்படைக் கொள்கையான ‘மக்களிடம் செல்’ என்ற கட்சியின் நிறுவனர் மறைந்த சி.என் அண்ணாதுரையால் உருவாக்கப்பட்ட கொள்கையைப் பின்பற்றி அமைந்துள்ளதாகப் பாராட்டினர்.

மக்களைத் தேடி மருத்துவம்

தமிழக மக்களின் வீடுகளைத் தேடி அத்தியாவசிய மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக 2021 ஆகஸ்ட் 5 -ஆம் தேதி ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை மு. க. ஸ்டாலின் தொடங்கினார். மக்களின் வீடுகளுக்குச் சென்று அத்தியாவசிய மருத்துவச் சேவைகளை ஏழை எளியவர்களுக்கு வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கும் வீட்டிற்கே சென்று பரிசோதனை செய்து, திடீர் மரணங்களை உண்டாக்கும் மற்றும் வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கும் தொற்று அல்லாத நோய்களைக் கண்டறிகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பெண் பொதுச் சுகாதாரப் பணியாளர்கள், மகளிர் சுகாதாரத் தன்னார்வலர்கள் (WHVகள்), இயன்முறை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் பொது மக்களின் வீடுகளுக்கே சென்று சுகாதார சேவையை வழங்குவர். இத்திட்டத்தின் மூலம், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகிய இரண்டும், கிராமங்களில் அதிகம் கண்டறியப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டு மாதந்தோறும் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதிக கவனிப்பு தேவைப்படுபவர்களுக்கு இயன்முறை சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. குழந்தைகளின் சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் பிறவி குறைபாடுகள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. சிறுநீரக கோளாறு உள்ளவர்களுக்கு போர்ட்டபிள் டயாலிசிஸ் இயந்திரம் மூலம் உரிய நேரத்தில் டயாலிசிஸ் செய்யப்படும் என்று மு. க. ஸ்டாலின் உறுதியளித்தார். இத்திட்டத்தின் ஒரு பகுதியாகத் தொலைதூரங்களில் வாழும் பழங்குடி மக்களின் அவசர சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ்கள் சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை

மு. க. ஸ்டாலின் தலைமையிலான அரசின் சார்பில் தமிழகத்தின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை 14 ஆகஸ்ட் 2021 அன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. மாநிலத்தின் 18 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளைக் கலந்தாலோசித்த பிறகு முழுமையான நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டது, மேலும் மிக முக்கியமாகத் தற்போதுள்ள சாகுபடி செய்யக்கூடிய நிலத்தை 60 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக அதிகரிப்பதை இலக்காகக் கொண்டது. தற்போது சுமார் 10 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருவதாகவும், அதை 11.75 லட்சம் ஹெக்டேராக உயர்த்த விவசாய நிதிநிலை அறிக்கை இலக்காக நிர்ணயித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் கீழ், தரிசு நிலத்தை விவசாய நிலமாக மாற்றும் வகையில் புதிதாகத் தொடங்கப்பட்ட ‘கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விவசாய நிதிநிலை அறிக்கையின் முக்கிய சிறப்பம்சங்கள்

  1. 2021 நடப்பு ஆண்டில் 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள் மற்றும் ஒரு லட்சம் பனைமரக்கன்றுகளை அரசாங்கம் விநியோகிக்கும்.
  2. பொது விநியோக முறை மூலம் பனை வெல்லம் விநியோகம் மேற்கொள்ளப்படும்.
  3. பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த விவசாயி நெல் ஜெயராமனின் நினைவாகப் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் அமைக்கப்படும்.
  4. வேளாண் துறையின் கீழ் தனி இயற்கை வேளாண்மை பிரிவு அமைக்கப்படும். இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கப்படும்.
  5. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் போன்ற குறைந்த மழைப்பொழிவு உள்ள மாவட்டங்களில் சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ‘சிறுதானிய இயக்கம்’ தொடங்கப்படும்.
  6. கூட்டுறவுச் சங்கங்கள் முலம் சிறுதானியங்களைக் கொள்முதல் செய்து சென்னை, கோவை போன்ற நகரங்களில் பொது விநியோக முறை மூலம் விற்பனை செய்யப்படும்.
  7. நடப்பு அரவைப் பருவத்தில் கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ. 42.50 அரசு வழங்கப்படும். இத்திட்டத்திற்காக , 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  8. விவசாயிகளின் பாசன வசதிக்காக மின்கட்டமைப்புடன் தனித்துச் சூரிய சக்தியால் இயங்கும் 10 குதிரைத் திறன் கொண்ட பம்புசெட்டுகள் 70 சதவீத மானியத்தில் மொத்தம் 5,000 சூரிய சக்தியில் இயங்கும் பம்புசெட்டுகள் முதலமைச்சரின் விரிவான திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ.114.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  9. மேலும், மூன்று ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும், 1,000 விவசாயிகளுக்கு, புதிய மோட்டார் பம்புசெட்டுகள் வாங்குவதற்கும், பழைய பம்புசெட்டுகளை மாற்றுவதற்கும், 10,000 ரூபாய் மானியம் வழங்கப்படும். இதற்காக 1 கோடி நிதி, நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இல்லம் தேடிக் கல்வி

மு. க. ஸ்டாலின் அவர்கள் 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 19 அன்று ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தைத் தொடங்கினார். இந்தியாவின் மிகப்பெரிய தன்னார்வ அடிப்படையிலான கல்வித் திட்டம் இத்திட்டம். இத்திட்டத்தின் கீழ் 92,000 குடியிருப்புகளில் உள்ள 3.3 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் 200,000 பெண் தன்னார்வலர்களால் தினமும் 90 நிமிடங்களுக்குக் கற்பிக்கப்படுகிறார்கள். கற்றல் இடைவெளியில் ஏற்பட்ட மொத்த மீட்சியில் 24% க்கும் அதிகமானவை ‘இல்லம் தேடிக் கல்வி’ அமர்வுகளுக்குக் காரணமாக இருக்கலாம் என்றும், பின்தங்கிய பிரிவினரிடையே உள்ள மீட்பு மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும் கள வல்லுநர்கள் மற்றும் துறை சார் வல்லுநர்கள் இத்திட்டத்தைப் பாராட்டியுள்ளனர்.

இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48

மு. க. ஸ்டாலின் அவர்கள் நவம்பர் 18, 2021 அன்று ‘இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48’ என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதன் மூலம் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர சிகிச்சைக்கான செலவை மாநில அரசே ஏற்கும்.

மு. க. ஸ்டாலின் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் போது சாலை விபத்துகளைக் குறைத்தல், உயிரிழப்புகளைத் தடுப்பது, சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார்.

சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 201 அரசு மருத்துவமனைகள் மற்றும் 408 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் (CMCHIS) கீழ் சாலை விபத்துகளில் காயம் அடைந்தவர்கள் அல்லது மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அல்லது வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள் முதல் 48 மணி நேரம் இலவசமாகச் சிகிச்சை பெறுவார்கள்.

மருத்துவமனைகளில் விபத்துக்குள்ளானவர்களுக்கு அடையாளம் காணப்பட்ட 81 சிகிச்சை தொகுப்பின் கீழ் சிகிச்சைகள் அளிக்கப்படும். அவர்கள் அனுமதிக்கப்படும் மருத்துவமனைகளில் முதல் 48 மணிநேரங்களுக்குத் தனிநபருக்கு ₹1 லட்சம் என்ற உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 48 மணி நேரத்திற்குள் தகுந்த சிகிச்சை அளித்தால் பெரும்பாலான உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பதால், தனியார் மருத்துவமனைகளில் முதல் 48 மணி நேரத்திற்கான அவசர சிகிச்சைச் செலவை அரசே ஏற்கும் என்பது இத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

முதலமைச்சரின் தகவல் பலகை

மு. க. ஸ்டாலின் தனது அலுவலகத்தில் ‘தகவல் பலகை' கண்காணிப்பு அமைப்பு என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார். டிசம்பர் 23, 2021 அன்று, அனைத்து நலத் திட்டங்களையும், அவை செயல்படுத்தப்பட்ட நிலை, நிதி ஒதுக்கீடு மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றைக் கண்காணிக்க அவருக்கு உதவும்.

தகவல் பலகையில் சரியான கண்காணிப்பு, அதிக செயல்திறன், தாமதங்களை நீக்குதல் மற்றும் உடனடி முடிவெடுப்பதற்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய அணைகளில் நீர் சேமிப்பு நிலைகள், மழைப்பொழிவு முறைகள், குற்றங்கள் குறித்த தினசரி அறிக்கைகள், மக்கள் நலத் திட்டங்களின் முன்னேற்றம், வேலைவாய்ப்பு நிலவரங்கள் மற்றும் மாநிலத்தில் உரிமையியல் இருப்புகள் போன்றவற்றையும் இது முதலமைச்சரிடம் தெரிவிக்கும். தகவல் பலகையில், முதல்வர் உதவி எண் மற்றும் ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிலை மற்றும் வேண்டுகோள்கள் கண்காணிக்கப்படுகின்றன.

நான் முதல்வன்

மார்ச் 1, 2022 அன்று ‘நான் முதல்வன்’ திட்டத்தை மு. க. ஸ்டாலின் தொடங்கினார். இஃது ஆண்டுதோறும் மாநிலம் முழுவதும் சுமார் 10 லட்சம் இளைஞர்களை நாட்டின் நலனுக்காக அவர்களின் திறமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காகப் புதிய இணைய முகப்பை மு. க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.[1] அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் உள்ள திறமையான மாணவர்களைக் கண்டறிந்து, பயிற்சி அளிப்பது, அவர்களுக்குத் தொழில் மற்றும் கல்வி வழிகாட்டுதலை வழங்குவதை இந்தத் திட்டம் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. மாணவர்கள் நேர்காணல்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள உதவும் வகையில் ஆங்கிலத்தில் பேசப் பயிற்சி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப குறியீட்டு முறை மற்றும் ரோபாட்டிக்ஸ் பயிற்சிகள் வழங்குவார்கள் . மேலும், உளவியல் ஆலோசகர்கள் மற்றும் ஊட்டச்சத்து மருத்துவர்கள், உடல் தகுதி மற்றும் மாணவர்களின் ஆளுமையின் ஒட்டுமொத்த வளர்ச்சி குறித்த வழிகாட்டுதலை வழங்குவார்கள்.[2]

பசுமைத் தமிழ்நாடு இயக்கம்

செப்டம்பர் 24, 2022-ஆம் ஆண்டு பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தை மு. க. ஸ்டாலின் தொடங்கினார். இஃது அடுத்த பத்து ஆண்டுகளில் மாநிலத்தின் பசுமைப் பரப்பை 23.7% இல் இருந்து 33% ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.[3] இணைய முகப்பு வழியாக மரம் நடும் முயற்சிகள், இணையம் வழியே நாற்றுகள் வாங்குதல் போன்றவற்றால் பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் பணி எளிமையாக்கப்பட்டுள்ளது.[4]

புதுமைப் பெண்

2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டமான 'புதுமைப் பெண்' திட்டத்தை மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உயர்கல்வியில் அரசுப் பள்ளிகளில் பெண்களின் சேர்க்கை விகிதம் மிகக் குறைவாக இருப்பதை உணர்ந்து மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள 26 தகைசால் பள்ளிகளையும், 15 மாதிரிப் பள்ளிகளையும் கெஜ்ரிவால் திறந்து வைத்தார். புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், மாநில அரசுப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்குப் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடிக்கும் வரை மாதந்தோறும் ₹1,000 உதவித் தொகை வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 6 லட்சம் பெண்கள் பயனடைவார்கள்.[5]

இத்திட்டத்திற்காக மாநில அரசு 2022-23 நிதி நிலை அறிக்கையில் ₹698 கோடியை ஒதுக்கியது. முதற்கட்டமாக 171 கோடி ரூபாய் செலவில் மாநகராட்சிகளால் நடத்தப்படும் 25 பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக உயர்த்தப்படும் என்றும் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தச் சிறப்புப் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள் நவீனமயமாக்கப்பட்டு, கலை, இலக்கியம், இசை, நடனம் மற்றும் விளையாட்டு உள்ளிட்டவை மாணவர்களிடையே ஊக்குவிக்கப்படும்.[6]

முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம்

குழந்தைகளின் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தடுக்க 2022 செப்டம்பர் 15 அன்று ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை’ மு. க. ஸ்டாலின் தொடங்கினார். மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் இரத்த சோகை போன்ற குறைபாடுகளை நீக்கவும், ஏழைக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளைப் பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.[7]

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-5 (NFHS) (2019-21) அறிக்கையில், தமிழ்நாட்டில் ஒரு பெரிய உடல்நலப் பிரச்சனையாகக் குழந்தைகளிடையே இரத்த சோகை நோய் குறிப்பிடப்பட்டுள்ளது.[8]

இந்தப் போதாமையைக் குறைக்கும் வகையில் மு. க. ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மாநிலம் முழுவதும் உள்ள 1,500-இக்கும் மேற்பட்ட அரசு நடத்தும் பள்ளிகளில் ₹33.56 கோடி செலவில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 1.14 லட்சத்துக்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி குழந்தைகள் பயன்பெறுவார்கள். கல்வி-சத்துணவு இணைப்பு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்பது ஸ்டாலின் அவர்களின் நம்பிக்கை.[9]

பருவநிலை மாற்றம் குறித்த ஆலோசனை குழு

23 அக்டோபர் 2022 அன்று மு. க. ஸ்டாலின் 22 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு பருவநிலை மாற்றம் குறித்த ஆலோசனை குழுவை (GCCC) அமைத்தார். பொருளாதார நிபுணர் மான்டேக் சிங் அலுவாலியா; நந்தன் எம் நிலேகனி, இன்ஃபோசிஸ் வாரியத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைவர்; எரிக் சொல்ஹெய்ம், ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் ஆறாவது நிர்வாக இயக்குநர்; டாக்டர் ரமேஷ் ராமச்சந்திரன், நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையத்தின் நிறுவனர்-இயக்குநர்; பூவுலகின் நண்பர்களின் ஒருங்கிணைப்பாளர் ஜி சுந்தர்ராஜன் மற்றும் ராம்கோ சமூக சேவைகளின் தலைவர் நிர்மலா ராஜா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

GCCC குழு தமிழ்நாடு பருவநிலை மாற்ற இயக்கத்திற்குக் கொள்கை வழிகாட்டுதலை வழங்கவும், காலநிலை தழுவல் மற்றும் தணிப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளை வழங்கவும், பருவநிலை மாற்றம் குறித்த தமிழ்நாடு மாநில செயல் திட்டத்திற்கு வழிகாட்டுதல் மற்றும் காலநிலை நடவடிக்கை குறித்த நடைமுறை உத்தியை வழிகாட்டவும் உருவாக்கப்பட்டது.[10]

GCCC இன் குறிப்பு விதிமுறைகளில் பருவநிலை மாற்றத்திற்கான வழிகாட்டுதல் மற்றும் நீண்டகால பருவநிலை-தாழ்த்தக்கூடிய வளர்ச்சிப் பாதைகள், உத்திகள் மற்றும் செயல் திட்டம் ஆகியவை வாழ்வாதாரம், சமூக மற்றும் பொருளாதார நல்வாழ்வு மற்றும் பொறுப்பான சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்த உதவும்.

பருவநிலை ஆலோசனை குழு, பின்பற்றப்படும் உத்திகளின் அடிப்படையில் முடிவுகளை அவ்வப்போது கண்காணிக்கும். இதுதவிர ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன், ஆராய்ச்சி, ஒத்துழைப்பு மற்றும் இடைநிலைப் பணிகளுக்கான தொடர்ச்சியான மற்றும் நீடித்த உந்துதலைக் கொடுக்கும்.[11]

நிலை மாற்றம் குறித்த தற்போதைய கொள்கைகளின் செயல்திறனை ஆலோசனை குழு மதிப்பீடு செய்து, பொருத்தமான நாடு மற்றும் உலகம் முழுவதும் உள்ள நிலையான நடைமுறைகளிலிருந்து கற்றுக் கொள்ளும். மாநில சுற்றுச்சூழல், பருவ நிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார்.

பருவநிலை மாற்றத் துறையில் தமிழ்நாடு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. தமிழ்நாடு பசுமைப் பணி, தமிழ்நாடு பருவநிலை மாற்ற இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்பு நிலப் பணி ஆகிய மூன்று முக்கிய இயக்கங்களைத் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியமானதாகும்.[12]


மேற்கோள்கள்

  1. "Naan Mudhalvan".[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "'நான் முதல்வன்' - தமிழக மாணவர்களை உலக அரங்கில் உயர்த்தும் திட்டம்". Hindu Tamil Thisai. Retrieved 2022-12-05.
  3. "பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ்மரக்கன்றுகள் பெற விண்ணப்பிக்கலாம்". Dinamani. Retrieved 2022-12-05.
  4. thanalakshmi.v. "வனப்பரப்பை அதிகரிக்கும் நோக்கில் "பசுமை தமிழ்நாடு இயக்கம்" திட்டம்.. முதலமைச்சர் தொடங்கி வைப்பு." Asianet News Network Pvt Ltd. Retrieved 2022-12-05.
  5. "கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் 'புதுமை பெண் திட்டம்' - செப்., 5-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்". News18 Tamil. 2022-08-30. Retrieved 2022-12-05.
  6. "தகைசால் மற்றும் மாதிரி பள்ளிகள்: அரசுப் பள்ளிகளை நோக்கி மாணவர்களை ஈர்க்க பள்ளிக்கல்வித்துறையின் புதிய முயற்சி". News18 Tamil. 2022-09-06. Retrieved 2022-12-05.
  7. தினத்தந்தி (2022-09-15). "பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்". www.dailythanthi.com. Retrieved 2022-12-05.
  8. குணசேகரன், துரைராஜ். "#TNBreakfast Scheme: அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை சிற்றுண்டி- மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர்!". https://www.vikatan.com/. Retrieved 2022-12-05. {{cite web}}: External link in |website= (help)
  9. "தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (என்எஃப்எச்எஸ்) 5-ன் இரண்டாம் கட்ட முடிவுகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது". pib.gov.in. Retrieved 2022-12-05.
  10. "முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழு அமைப்பு". Hindu Tamil Thisai. Retrieved 2022-12-05.
  11. Revathi (2022-10-22). "முதல்வர் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாக குழு: அரசாணை வெளியீடு!" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-12-05.
  12. Esakkiammal. "தமிழக முதல்வர் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாக குழு". KUMUDAM (in ஆங்கிலம்). Retrieved 2022-12-05.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya