ராஜ ராஜேஸ்வரி சீதாராமன் (பிறப்பு: 25 மே 1969); (மலாய்: Raja Rajeswari Setha Raman; ஆங்கிலம்: Raja Rajeswari Setha Raman); என்பவர் மலேசியத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மலாய் மொழிக் கவிஞர், மொழிபெயர்ப்பாளர் ஆகும்.[3]
மலேசிய மலாய் இலக்கிய உலகில் மலாய் மொழியில் கவிதை எழுதும் மலாய்க்காரர் அல்லாத ஒரே கவிஞர் என்று பிரபலம் அடைந்தவர்.[4][5]
2021-ஆம் ஆண்டில், இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தில் சிறப்பு இலக்கிய விருதைப் பெற்ற நான்கு மலேசிய எழுத்தாளர்களில் டாக்டர் ராஜ ராஜேஸ்வரி சீதாராமனும் ஒருவராவார்.[6]
வெளிநாடுகளில் நடைபெற்ற பல அனைத்துலக மலாய் மொழிக் கருத்தரங்குகளில் மாநாடுகளில் ராஜ ராஜேஸ்வரி சீதாராமன் மலேசியாவின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்புகள்
ராஜ ராஜேஸ்வரி சீதாராமன் மலேசியா, பேராக், கோலா குராவ் நகரில் பிறந்தவர். இவரது தந்தையாரும் தாயாரும் ஆசிரியர்கள். பாகன் செராய் நகரில் தன் உயர்நிலைப் படிப்பை முடித்துக் கொண்டு, கெடா, சுங்கை பட்டாணி, சுல்தான் அப்துல் ஆலிம் கல்வியியல் கல்லூரியில் (Pedagogical College of Sultan Abdul Halim) சேர்ந்து ஆசிரியர் பயிற்சி பெற்றார்.
2015-ஆம் ஆண்டில், மலாயா பல்கலைக்கழகத்தின் மலாய் கல்வித்துறை அகாடமியில் (Academy of Malay Studies) முனைவர் பட்டத்தைப் பெற்றார்.[8]
மலாய் மொழி விரிவுரையாளர் பணி
பின்னர் 2007-ஆம் ஆண்டு தொடங்கி 2016-ஆம் ஆண்டு வரையில், கோலாலம்பூரில் இருக்கும் மலேசியக் கல்வியியல் நிறுவனத்தில் (Pedagogical Institute of Malaysia) மலாய் மொழி விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்.[9]
ம்லேசியாவில் உள்ள இடைநிலைப் பள்ளிகளுக்கான இலக்கியப் பாடத் திட்டங்களை வரைவதற்கான கல்வி அமைச்சின் ஆணையத்தின் உறுப்பினராக உள்ளார்.
மலாய் மொழிப் பத்திரிகைகளில் கவிதைகள்
மலேசியாவில் அதிகாரப்பூர்வ மலாய் இலக்கிய இதழான டேவான் சாஸ்திரா(Dewan Sastera) உட்பட பல முன்னணி மலாய் மொழிச் செய்தித்தாள்கள் மற்றும் மலாய் மொழிப் பத்திரிகைகளில் இவரின் கவிதைகள் வெளியிடப்பட்டு உள்ளன.[10]
பொறுப்புகள்
மகா மலாய் நுசாந்தரா(Great Malay Nusantara) அமைப்பின் கெளரவச் செயலாளர்.
மலேசியத் தேசிய எழுத்தாளர்கள் சங்கம்; சிலாங்கூர் எழுத்தாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்.
மலேசியாவின் மொழிபெயர்ப்பாளர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்.
விருதுகள்
மலேசியாவின் இலக்கிய மெய்நிகர் சமூக விருது (2003, 2004).
மலேசியாவின் மலாய் இலக்கிய விருது (2007).
பேராக் மாநில இலக்கியப் பரிசு (2016), (2018).
மலாய் இலக்கியத்தின் வளர்ச்சிக்கான பங்களிப்புக்காக மொழி மற்றும் இலக்கிய நிறுவனத்தின் பரிசு (2016). (Prize of the Institute of Language and Literature for contribution to the development of Malay literature)
சூழலியல் பாதுகாப்பு (2018) பற்றிய சிறந்த கவிதைக்காக ரிவாஸ் நிக்கராகுவா மேயர் பரிசு (Prize of the Mayor of Rivas (Nicaragua).
2018-ஆம் ஆண்டிற்கான மேவதேவ் லாரல் விருது; உ.பி., இந்தியா. (Mewadev Laurel Award 2018 from Contemplary Literary Society of Amlov, Banda. U.P, India.)
இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தில் சிறப்பு இலக்கிய விருதைப் பெற்ற நான்கு மலேசிய எழுத்தாளர்களில் டாக்டர் ராஜ ராஜேஸ்வரி சீதாராமனும் ஒருவராவார்.[6]
82 நாடுகளைச் சேர்ந்த 440 கவிஞர்களுக்கு குஜராத் சாகித்ய அகாடமியின் இந்தியச் சுதந்திர தின இலக்கிய விருது (2021) வழங்கப்பட்டது.