வல்லாள மகாராசன் கதை

வல்லாள மகாராசன் கதை பாடியவர் ‘அருணாசல கீர்த்தனை’ பாடிய காஞ்சிபுரம் வீராணப் புலவர். ‘வல்லாள மகாராஜா சருக்கம் என இந்தக் கதை16ஆம் நூற்றாண்டை சேர்ந்த சைவ எல்லப்ப நாவலரின் ‘அருணாசல புராணம்’ நூலிலும் உள்ளது.[1]

காலம்

இந்நூலின் காலம் பொ.ஊ. 16ஆம்நூற்றாண்டு ஆகும். [2]

கதை

வல்லாள மகாராசன் திருவண்ணாமலையில் இருந்துகொண்டு ஆட்சிபுரிந்துவந்தான். மகப்பேறு இல்லாமல் கவலையுற்றிருந்தான். கவலையைப் போக்க அறம் செய்ய விரும்பிய அவன் தன்னிடமுள்ள எதனையும் யார் வேண்டுமானாலும் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் என முரசறைந்து தெரிவித்தான். சிவபெருமான் அவனுக்கு அருள்புரிய விரும்பி ஒரு சங்கமர் (சைவத் துறவி) கோலத்தில் அவனிடம் வந்தார். சிற்றின்பம் நுகரத் தனக்கு ஒரு பெண் வேண்டும் என்று கேட்டார்.

அரசன் கணிகையரை அழைத்துவர ஆணையிட்டான். அப்போது கணிகையரின் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு சங்கமர் இருந்தனர். எனவே யாரையும் அழைத்துவர முடியவில்லை. அரசன் வருந்தினான். அப்போது அரசனின் இளைய மனைவி எல்லம்மா தேவி சங்கமர் கருத்துக்குத் தான் இசைவதாக வந்து சங்கமரைத் தொட்டாள். சங்கமர் குழந்தையாக மாறிவிட்டார். அரசனும் மனைவியும் குழந்தை அழகைப் பார்த்து மகிழ்ந்தனர். அப்போது குழந்தை மறைந்தது. வானத்தில் காளைமாட்டின்மேல் சிவன் காட்சி தந்தார். வல்லாளன் இறுதிக் காலத்தில் அவனுக்குப் புத்திரனாக வந்து சடங்குகள் செய்து அரசனுக்கு முத்தி அளித்தார்.

கதைக்குக் கால்

வல்லாளன் போசள மன்னன். திருவண்ணாமலையை ஈடுபாட்டுடன் வழிபட்டவன். அவனைப் போற்ற இந்தக் கதை உருவாக்கப்பட்டது.

மேலும் கதை

  • பிரமன் அன்னப்பறவை உருவில் சிவனது முடியைத் தேடி, முடியாமல் திரும்பியபோது, பிரமன் சிவன் முடியைக் கண்டதாகப் பொய்சாட்சி சொன்ன தாழம்பூ, சிவபெருமானால் சாபம் பெற்று, இறைவனால் சூடப்பெறாது போகவே, ஆத்திக் பூவாக மாறி, இத்தலத்தில் இருந்து சிவன் தலையில் ஏறியதாம்.
  • சத்தியவான் என்ற முனிவரைப் புடைத்த 'இரத்தக் காட்டேறி'யைச் சிவன் 'வயிரவ வேடம்' தாங்கி அழித்தபோது குருதி ஓடியதால் திருவண்ணாமலைக்குச் 'செங்காடு' என்னும் பெயரும் உண்டாயிற்று.

ஒப்புமைக்கதைகள்

  • தமிழ் - இயற்பகை நாயனார் தன் மனைவியைப் போலிச் சிவனடியாருக்குக் கொடுத்துவிட்டார்.
  • கன்னடம் - 'சிந்துபல்லாளன்' இவ்வாறு மனைவியைத் தருகிறான்.
  • குஜராத்தி - கூர்ஜர நாட்டுச் சிந்துகடகம் என்னும் ஊர் அரசன் 'பல்வண்ணன்' தந்த அவனது மனைவி தொட்டதும் சங்கமர் குழந்தையாகிவிடுகிறார்.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005


இவற்றையும் பார்க்க

அடிக்குறிப்பு

  1. பி. வே. நமச்சிவாய முதலியார் பதிப்பு, ஐதிகப் படங்களுடன் கூடியது. நிரஞ்சன விலாச அச்சகம், 1912
  2. சகம் 1722
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya