வாதுமைக் கொட்டை![]() ![]() ![]() வாதுமைக் கொட்டை (Walnut) என்பது யக்லான்சு பேரினத்தில் அடங்கியுள்ள யக்லாண்டசியே குடும்பத்தைச் சேர்ந்த யக்லான்சு ரெஜியா மரத்தின் கொட்டையாகும். இந்தக் கொட்டையானது மேலோட்டுடன் கூடியதாகும். பச்சையான கொட்டைகள் ஊறுகாய் தயாரிக்கவும் நன்கு விளைந்த கொட்டைகள் உணவாகவும் பயன்படுகின்றன. யக்லான்சு நைக்கிரா மரத்திலிருந்து பெறப்படுகின்ற கிழக்கத்திய கருப்பு வாதுமைக் கொட்டையானது வர்த்தகரீதியாக மிகவும் குறைவாகவே கிடைக்கிறது. இக்கொட்டையில் புரதச்சத்தும் கொழுப்பு அமிலமும் நிறைந்துள்ளன. பண்புகள்வாதுமைக் கொட்டையானது, நன்கு பழுத்த பின்பு உண்ணத் தகுந்த, ஒற்றை விதையினைக் கொண்ட வட்ட வடிவக் கொட்டையாகும். முற்றிலும் பழுத்தபின்பு வாதுமைப் பழத்தின் சுருக்கம் நிறைந்த மேல்புறத்தோல் கழன்று, இருபிரிவுடைய மேலோட்டுடன் வாதுமைக் கொட்டையானது வெளிப்படும். (முப்பிரிவுடைய மேலோடுகளும் தோன்றுவதுண்டு). பழுக்கும் தருணங்களில் மேல் தோலானது உடைகின்ற தன்மையையும் கொட்டையின் மேலோடானது கடினத்தன்மையையும் பெறுகின்றன. சதைப் பகுதியினை மூடியுள்ள ஓடு இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. சாதாரணமாகக் கிடைக்கக்கூடிய ஒட்டுடன் கூடிய வாதுமைக் கொட்டையின் மீதுள்ள பழுப்புநிற தோல் ஆன்டியாக்சிடண்டுகளைக் கொண்டதாகும். இந்த ஆன்டியாக்சிடண்டுகள் எண்ணெய் மிகுந்த கொட்டையினை, சுற்றுப் புறத்திலுள்ள ஆக்ஸிஜனிடமிருந்து பாதுகாத்து கெட்டுப் போவதைத் தடுக்கிறது.[1] பொதுவாக வாதுமை மரங்கள் வசந்தகாலத்தின் பாதியைக் கடந்து மிகவும் தாமதமாகவே தளிர்க்கின்றன. இம்மரங்களின் அருகே போட்டியிட்டு வளரும் பிற தாவர வளர்ச்சியைத் தடுக்கும்பொருட்டு இவை ஒருவகை வேதிப் பொருளை மண்ணுக்குள் சுரக்கின்றன. இதனால்தான் மலர்த்தோட்டங்களையும் காய்கறித்தோட்டங்களையும் இம்மரங்களை ஒட்டி அமைப்பதில்லை. வகைகள்வாதுமை மரங்களில் பெர்சியன் அல்லது பிரித்தானிய வாதுமை மற்றும் கருப்பு வாதுமை என இருபெரும் இனங்கள் உள்ளன. பிரித்தானிய வாதுமையானது பெர்சியாவில் தோன்றிய இனமாகும். கருப்பு வாதுமையானது வடகிழக்கு அமெரிக்காவினை பூர்விகமாகக் கொண்டதாகும். கருப்பு வாதுமைக் கொட்டை மிகவும் சுவையானது. ஆனாலும் இது பெற்றுள்ள கடின ஓடு மற்றும் புறத்தோலின் தரமற்றத் தன்மை காரணமாக வணிகரீதியாக அதிகமாக உற்பத்தி செய்யப்படவில்லை. பிரித்தானிய வாதுமையின் கலப்பினம் சார்ந்த மரங்களையே பெரும்பாலான விவசாயிகள் வணிக நோக்கில் அதிகமாகப் பயிரிடுகின்றனர்.[2] கலிபோர்னியா கருப்பு வாதுமை எனப்படும் யக்லான்சு கலிபோர்னிகா. யக்லான்சு சினேரியா, அரிசோனா வாதுமை எனப்படும் யக்லான்சு மேயர் ஆகியன வாதுமைக் கொட்டையின் இதர வகைகளாகும். உற்பத்தி
2014 ஆம் ஆண்டில் உலக அளவில் வாதுமைக் கொட்டையின் மொத்த உற்பத்தி 3.46 மில்லியன் டன்களாகும். இதில் சீனாவின் பங்களிப்பு மட்டும் 46% ஆகும்(அட்டவணை).[3] வாதுமைக் கொட்டை உற்பத்தி செய்யும் பிற முக்கிய நாடுகளாவன (உற்பத்தியளவின் இறங்கு வரிசை அடிப்படையில்) அமெரிக்கா, ஈரான், துருக்கி, மெக்சிகோ. 2014ஆம் ஆண்டு உலகளவில் வாதுமைக் கொட்டையின் சாகுபடி ஒரு எக்டேருக்கு 3.5 டன்களாகும்.[3] கிழக்கு ஐரோப்பிய நாடுகளான சுலோவேனியா மற்றும் உருமேனியா ஆகியவை அதிகபட்சமாக ஒரு எக்டேருக்கு 19 டன்கள் வரை சாகுபடி செய்துள்ளன. 2014 ஆம் ஆண்டில் உலகளவில் வாதுமைக் கொட்டையின் பெரிய ஏற்றுமதியாளராக அமெரிக்கா திகழ்கிறது. அதனைத் தொடர்ந்து துருக்கி உள்ளது.[4] கலிபோர்னியாவின் மையப் பள்ளத்தாக்குப் பகுதி, அமெரிக்காவின் வர்த்தகத்திற்கான 99% வாதுமைக் கொட்டையினை உற்பத்தி செய்கிறது.[5] சேமிப்புபிற கொட்டைகளைப் போன்றே வாதுமைக் கொட்டையும் பதப்படுத்தி சேமிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். பாதுகாப்பான வகையில் அது சேமிக்கப்படவில்லையெனில் பூச்சிகள், பூஞ்சைத் தொற்றுக்களால் பாதிக்கப்படும். இப்பாதிப்பால் அப்லடாக்சின் என்னும் புற்றுநோயை உண்டாக்கும் வேதிநச்சு உருவாகிறது. இவ்வாறு பாதிப்படைந்த வாதுமைக் கொட்டைகள் முற்றிலும் அகற்றப்பட வேண்டும்.[1] வாதுமைக் கொட்டைகளை நீண்ட காலம் பாதுகாப்புடன் சேமித்து வைக்க -3 முதல் 0 டிகிரி செல்சியசு (27 - 32 டிகிரி பாரன்ஃகைட்டு) வெப்பநிலையும் குறைந்த ஈரப்பதமும் தேவை. வாதுமைக் கொட்டைகள் பெருமளவில் உற்பத்தியாகும் வளரும் நாடுகளில் இந்தளவிற்கு குளிரூட்டம் செய்வதற்கான தொழில்நுட்பங்கள் இல்லாதபோதும் அவை 25 டிகிரி செல்சியசு (77 டிகிரி பாரன்ஃகைட்டு) மற்றும் குறைந்த ஈரப்பதத்தில் சேமிக்கப்படுகின்றன. 30 டிகிரி செல்சியசு (86 டிகிரி பாரன்ஃகைட்டு) வெப்பநிலையும் 70% க்கும் மேலான ஈரப்பதமும் உள்ள சூழலில் வாதுமைக் கொட்டைகள் வேகமாகக் கெட்டு அதிக இழப்பினை ஏற்படுத்துகின்றன. ஈரப்பதம் 75% க்கும் மேல் இருந்தால் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டு அப்லடாக்சின் என்னும் புற்றுநோயை உண்டாக்கும் வேதிநச்சு வெளிப்படுகிறது.[1][6] உணவுப் பயன்பாடுவாதுமைக் கொட்டைகள் ஓடுடன் கூடியது மற்றும் ஓடில்லாத பருப்பு என இருவகைகளில் கிடைக்கின்றன. இக்கொட்டைகள் சுவையூட்டப்பட்ட சிறு துண்டுகளாகவும் பிற உணவுப் பொருள்களுக்கான மூலப் பொருளாகவும் பயன்படுகின்றன. அனைத்து வகைக் கொட்டைகளும் அப்படியே சாப்பிடுவதற்கு ஏற்றவையாகும். மியூசிலி போன்ற உண்வுப் பொருளின் பகுதிப் பொருளாகச் சேர்த்தும் உண்ணப்படுகின்றன. வாதுமை பானம், வாதுமை காபி, வாதுமை கேக்கு, வாதுமை ஊறுகாய் போன்ற பொருள்களைத் தயாரிக்கவும் இக்கொட்டைகள் பயன்படுகின்றன.[7] பழுக்காத பச்சை வாதுமையை ஆல்கஹாலில் ஊற வைத்து நோசினோ என்னும் மதுபான வகை தயாரிக்கப்படுகிறது. வாதுமைக்கொட்டை எண்ணெய் வணிகப்பயன்பாட்டுக்கு கிடைக்கின்றது, முக்கியமாக சாலட் தயாரிப்பில் அலங்காரப் பொருளாக பயன்படுகிறது. இது குறைந்த புகைப்புள்ளியைக் கொண்டுள்ளதால் வறுத்தலுக்குப் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பயன்படுத்தப்படுகிறது.[8][9] ஊட்ட மதிப்பீடு
ஒடற்ற வாதுமைப் பருப்பானது 4% நீர், 15% புரதம், 65% கொழுப்பு, 14% கார்போவைதரேட்டு மற்றும் 7% நார்சத்தினைக் கொண்டுள்ளது (அட்டவணை). 100 கிராம் வாதுமைப் பருப்பு 2740 கிலோயூல்களையும் மாங்கனீசு முதலான மாழைகளும் உயிர்ச் சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது. பொதுவாக சத்துக்களின் செறிவிலும் தன்மையிலும் பிரித்தானிய வாதுமையும் கருப்பு வாதுமையும் சமமானவையாக இருந்தாலும் பிரித்தானிய வாதுமையே அதிகமாக நுகரப்படுகின்றது.[10][11] ஒற்றை நிறைவுறாத கொழுப்பு அமிலங்களைக் (Monounsaturated Fat acid) கொண்டுள்ள பெரும்பாலான பிறக் கொட்டைகளைப் போலன்றி, வாதுமைக் கொட்டையானது பல்நிறைவுறாத கொழுப்பு அமிலங்களைக் (Polyunsaturated Fat acid)(மொத்தக் கொழுப்பில் 72%) கொண்டுள்ளது. இதில் அடங்கிய மொத்தக் கொழுப்பில் 13% ஓலிக்கு அமிலம் இருந்த போதிலும் 14% ஆல்பா லினோலெனிக்கு அமிலத்தையும் 58% லினோலீக்கு அமிலத்தையும் கொண்டுள்ளது.[10] ஆரோக்கியத் தன்மைகள்அமெரிக்க ஐக்கிய நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு(Food and Drug Administration(FDA)) 2016இல் வாதுமை கலந்த உணவுப் பொருள்களின் ஆரோக்கியத் தன்மை பற்றி வெளியிட்ட அறிக்கை : "குறைந்த கொழுப்புடைய உணவின் ஒரு பகுதியாக, தினமும் 1.5 அவுன்சுகள் வாதுமைப் பருப்பினை உண்பதால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவதாக உறுதிப்படுத்தப்படாத ஆய்வு கூறுகிறது".[12] 2004 ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு " வாதுமை கலந்த உணவால் இதய நோய் வாய்ப்புகளைக் குறைக்க முடியும்" என்ற கருத்தினை மறுத்தது.[13] அது 2010இல் டைமண்டு உணவு நிறுவனத்திற்கு எழுதிய எச்சரிக்கைக் கடிதத்தில் " இதய நோய்க்கான வாய்ப்பினைக் குறைக்கின்ற எந்தவொரு உயிரியல்ரீதியான உட்பொருளும் வாதுமைக் கொட்டையில் இருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை" எனத் தெரிவித்திருந்தது.[14] உணவுசாரா பிற பயன்பாடுகள்நாட்டு மருந்துபாக் மலர் மருந்துகள் தயாரிக்கப் பயன்படும் 38 வகையானப் பொருள்களில் வாதுமைக் கொட்டையும் ஒன்றாகும்.[15] பிரித்தானியாவில் நடத்தப்பட்ட புற்றுநோய் குறித்த ஓர் ஆய்வு, " மலர் மருந்துகளால், புற்றுநோய் உட்பட எந்த நோய்களையும் கட்டுப்படுத்தவோ, குணப்படுத்தவோ அல்லது தடுக்கவோ முடியும் என்பதை நிரூபிக்க அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் ஏதுமில்லை" என்று கூறுகிறது.[16] மைகள் மற்றும் சாயங்கள்எழுதுவதற்கும் ஓவியம் வரைவதற்கும் பயன்படும் நீடித்திருக்கும் மை தயாரிக்க வாதுமையின் தோல் பயன்படுகிறது. லியோனார்டோ டா வின்சி, ரெம்ரான்ட்டு உள்ளிட்ட பல ஓவியர்கள் இந்த மையினை பயன்படுத்தியுள்ளனர்.[17] வாதுமைத் தோலில் உள்ள நிறமிகளைக் கொண்டு பண்டைய ரோமாபுரியில் துணிகளுக்கு பழுப்பு வண்ணச் சாயம் ஏற்றினர்.[18] இடைக்கால ஐரோப்பாவில் தலைச் சாயமாகவும் இந்நிறமிகளைப் பயன்படுத்தினர்.[19] தூய்மைப் பணிஅமெரிக்க ஐக்கிய நாட்டின் இராணுவம், விமான பாகங்களை சுத்தம் செய்வதற்கு, குறைந்த விலையும் சிராய்ப்புண்டாக்காதத் தன்மையும் கொண்ட வாதுமைக் கொட்டையின் ஓடுகளைப் பயன்படுத்தி வந்தது. எனினும், போயிங்கு சிஎச்சு-47 சினூக்கு எலிகாப்தருக்கு ஏற்பட்ட பயங்கர விபத்தைப் பற்றிய (செப்டம்பர் 11, 1982, மன்வீம், செர்மனி) விசாரணையில், வாதுமை ஓடு ஒன்று எண்ணெய்க் கலனை அடைத்ததே காரணம் எனக் கண்டறியப்பட்டதால், தூய்மைப் பணிக்கு வாதுமை ஓடுகளைப் பயன்படுத்துவது நிறுத்திக்கொள்ளப்பட்டது.[20] வேதியியல் ஆய்வுவாதுமை கொட்டைகளின் மேலோட்டில் உள்ள பாலிபினால்கள் என்னும் ஒரு வகை வேதிப் பொருளானது கைகளில் கறைகள் மற்றும் தோல் எரிச்சலை ஏற்படுத்துகிறது. பெர்லிக்கு அமிலம், வனிலிக்கு அமிலம், கொமர்மிக்கு அமிலம், சிரிங்கிக்கு அமிலம், மிரிக்ரிடின், யக்லோன் ஆகியவை அடங்கிய ஏழு பினோலிக்கு சேர்மங்கள் வாதுமையின் புறத்தோலில் அடையாளம் காணப்பட்டன. இதில் யாக்லோன் என்னும் முதன்மையான பினோலிக்கு 2-4% அளவிற்குச் செறிவுடன் காணப்படுகிறது.[21] மேலும் வாதுமைக் கொட்டையில் எலாயிடன்னின் பெடுங்குலாயின் (ellagitannin pedunculagin) உள்ளது.[22] ரெயியோலோன் என்னும் வேதிப் பொருளுடன் சேர்த்து யக்லோன், பெட்டுலினிக்கு அமிலம் ஆகியவையும் யாங்குலசு ரெயியா வகையினைச் சேர்ந்த வாதுமை மரப் பட்டைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.[23] சீனக் கலாச்சாரத்தில் பயன்பாடுசீனாவில், வாதுமைக் கொட்டை இணைகளை உள்ளங்கையில் வைத்துச் சுழலச் செய்யும் விளையாட்டு, பாரம்பரியமாக விளையாடப்படுகிறது, இரண்டும் இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதற்கான ஒரு வழிமுறையாகவும், சமுதாய அங்கீகாரத்தின் சின்னமாகவும் உள்ளன. பெரிய, பழைய, சமச்சீரற்ற வடிவமுடைய மற்றும் சில நேரங்களில் சிக்கலான செதுக்கப்பட்ட தனித்தனி வாதுமைக் கொட்டைகள் மற்றும் இணைகள் மிகவும் மதிப்பு வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இவை சமீபகாலமாக ஒரு முதலீடாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன, அவற்றில் சில பத்தாயிரக்கணக்கான டாலர்களை பெறுகின்றன.[24] சில சமயங்களில் வாதுமைக் கொட்டையின் இணைகள் தங்கள் பச்சையான புறத்தோல்களுடன் டூ ஹீ டாவோ என்று அறியப்படும் சூதாட்டத்திற்காக விற்பனை செய்யப்படுகின்றன.[25] மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia